தோற்றவனின் பள்ளியெழுச்சி
நிராதரவாய் எரிந்தபடியலையும்
மேகத்தின் விரிப்பின் கீழ்
பாவ மூட்டை தூக்கி செல்லும்
எனக்கு எந்த பெயருமில்லை
உள்ளத்தில் பாயும் உஷ்ணக்காற்றின் தாக நதி
சுவாசக் குழியினூடே பாய்கிறது
யுத்த பூமியில் தோற்றுக் களைத்தவனின்
மீது படருகிற பாழ்
காலத்தின் துவக்கத்தை நாடா வெட்டுகிறது
கனவுகளை எதிரொலிக்கும் காயங்களின் மீது
மற்றொரு சாகப்தத்தின்
உறுதி மொழியாய்
வேட்கையின் கம்பீரம் அறைகூவுகிறது
ரத்தத்தில் ஓடும்
பாய்ச்சலின் வெண்மை
எங்கும் என் நிழலாய் மிதக்க
சமர்க்கள மொழியில்
காற்று திடீரென வெடிக்கிறது.
-அகரமுதல்வன்
10.06.2014
Comments
Post a Comment