'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்



கொள்ளி வாய்ப் பேய் காக்கும்
கோபுரமும் நெடுமதிலும்
வெள்ளியால் சமைத்த தென்
வெள்ளெலும்பினால் சமைத்தே!

(கோயில் பாடியது -கலிங்கத்துப் பரணி )
காளி கோயிலின் கோபுரமும் நெடுமதிலும் கொள்ளிவாய்ப் பேய் காக்கும். அந்தக் கோபுரமும் நெடுமதிலும் வெள்ளியினால் செய்யப்பட்டவை எனத் தோன்றினாலும்அவை போரில் இறந்துபட்டவர்களின் வெள்ளெலும்பினால் சமைக்கப்பட்டவை.
ஆம் ! சரித்திரத்திற்கு ஒரே நாக்குதான் .அதன் ருசி ஒரே ருசிதான் .அதன் பற்கள்தான் மாறிக் கொண்டே இருக்கின்றன.
போர் குறித்த பதிவுகள் மற்றும் போருக்குப் பின்னான படைப்புகளால்தான் வரலாறும் காலமும் கட்டுருவாக்கப் பட்டிருக்கின்றன .போர்முறை குறித்தநூலே சமய நூல்களாய் இருக்கின்றன. போரும் போரின் நிமித்தமுமே இதிகாசமாய் வாசிக்கக் கிடைக்கிறது.சமயத்தின் பேராலும் இனத்தின் மதங்களின் பேராலும் செல்வங்கள் வளங்களின் பேராலும் அனைத்து இழப்புகளும் உலகின் சரித்திரத்தில் மீண்டும் மீண்டும் நிகழ்த்திக் காட்டப் பெற்றிருக்கிறது.
போரின் முடிவில்தான் மதங்கள் பிறந்தன. போரின் முடிவில் மக்கள் தம் தோலின் நிறம் மாற்றபட்டது.போர்களின் முடிவில் ஒரு காலமே இருண்ட காலமானது. உண்மையில் போர்கள் முடிவதே இல்லை ஒரு தோல்வி அதன் சந்ததிகளின் மரபணுக்களில் தீராத வடுவாக நீந்திக் கொண்டே இருக்கிறது . நானூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சாம்ராஜ்யம் பழி தீர்க்கப் பட்டதும் இங்கேதான் .சோழன் பாண்டியனிடம் வீழ்ந்ததும் ,ஈழத்து மணிமுடியும் வரலாறுகள்.வஞ்சத்தை ஒரு தாயத்துப் போல் தன் அந்தரங்கத்தில் கட்டி வைத்திருக்கின்றன தோல்விகள்
அந்த தீ எப்படி கடத்தப் பட்டது. அந்தக் கதைகளைச் சொன்னவர் யார் ?அந்த மரணங்களின் சாசனங்கள் எவை ? அந்த தாயத்துதான் இலக்கியம் . அந்த பாடல்கள்தான் சாசனங்கள்.ஓர் ஊருக்காக தன்னுயிர் ஈந்தவர்கள்தான் சிறுதெய்வங்கள்.நடுகற்களே ஆதிக் கோவில்கள்.போர் குறித்த படைப்புகள் ஒப்பாரிகளல்ல ,பரணி என்கிறது தமிழ் மரபு. அதனால்தான் பேனாவைக் கண்டு செங்கோல்கள் பதறின.நூலகங்கள் எரிக்கப் பட்டன .
அதனால்தான் சர்வாதிகாரம் முதலில் ஒரு தேசத்தின் அறிவுப் புலத்தை முதலில் சீண்டுகிறது . 1981இல் யாழ்ப்பாண மண்ணில் யாழ்ப்பாணப் பொது நூலகம், ஈழநாடு பத்திரிகை அலுவலகம், பூபாலசிங்கம் புத்தகசாலை ஆகிய தமிழரின் அறிவியல், ஊடகவியல் நிறுவனங்களை கூலிப்படைகளால் பகிரங்கமாகத் தீயிட்டுக் கொழுத்தப்பட்ட சம்பவமானது, அதுவரை காலமும் கொரில்லாப் போராட்டமுறைகளை இளைஞர்களின் வன்முறைப் போராட்டவடிவமாகக் கருதி வந்த புத்திஜீவிகளையும் விடுதலைப் போராட்டத்தின்பால் ஈர்த்தது.
 என் மிகச் சிறிய வாசிப்பின் அடிப்படையில் ஈழ போர் இலக்கியம் துவங்கிய வருடம் 1972  ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு முன்னோடியாக பல நூல்கள் ஆரம்பகாலத்தில் வெளிவந்திருந்தன. பண்டிதர் .பொ.இரத்தினம், கவிஞர் காசி ஆனந்தன் போன்றேரின் விடுதலை உணர்ச்சிமிக்க படைப்புகளை சுதந்திரன், தீப்பொறி போன்ற அரசியல் ஏடுகள் எழுபதுகளில் தாங்கி வந்தனதனி ஆட்சி என்ற நூல் கா.பொ.இரத்தினம் அவர்களால் எழுதப்பெற்று, யாழ்ப்பாணத்திலிருந்து அக்டோபர் 1972 இல் வெளிவந்திருந்தது. போராட்ட வரலாற்றுடன் தொடர்புபட்ட முக்கியமானதொரு நூல் லங்காராணி என்பதாகும். அருளர் எழுதி சென்னை கனல் வெளியீடாக டிசம்பர், 1978 இல் 256 பக்கங்களில் இந்த வரலாற்று முக்கியத்துவமான நூல் வெளிவந்திருந்தது. புதியதோர் உலகம் என்ற நாவல் கோவிந்தன் என்ற போராளியால் எழுதப்பட்டது . .” இந்நாவலைப் படைத்த கோவிந்தன் பின்னர் இனந்தெரியாதோரினால் கொல்லப்பட்டார்.

முறிந்த பனை என்ற மற்றொரு நூலும் ஈழப்போராட்டத்தின் பின்புலத்தில் நூலாசிரியரை படுகொலைக்குள்ளாக்கிய மற்றொரு நூலாகும். ராஜினி திரணகம, ராஜன் _ல், தயா சோமசுந்தரம், கே.ஸ்ரீதரன் ஆகிய நால்வர் இணைந்து இவ்வாவணத்தைத் தொகுத்திருந்தார்கள். The Broken Palmyrah  என்ற தலைப்பில் இதன் மூல நூல் ஆங்கிலத்தில் வெளியான சிறிது காலத்தில் இந்நூலின் முக்கிய பங்காளியான ராஜினி திரணகம அவர்கள் யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத இளைஞர்களால் படுகொலை செய்யப்பட்டார். தான்பிரீன்-தொடரும் பயணம் என்ற நூல் .ராமஸ்வாமி என்ற புனைபெயரில் எழுதப்பெற்று மறுமலர்ச்சிக் கழகத்தினால் 1985இல் வெளியிடப்பட்டது சோசலிசத் தமிழீழத்தை நோக்கி என்ற நூல் இவ்வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை பரப்பு, வெளியீட்டுப் பிரிவினால் மாசி 1980இல் தமிழ்நாட்டிலிருந்து அச்சிட்டு விநியோகிக்கப்பட்டது அரசியலும் இராணுவமும் என்ற நூலும் இந்த வகையில் குறிப்பிடத்தகுந்ததாகும்

ஆசிரியர் விபரம் இல்லாத இந்நூல் தீப்பொறி வெளியீடாக மார்கழி 1985.இல் வெளிவந்திருந்தது ஒன்றிணைந்து போராடுவோம் – மே-1985, சோசலிசத் தத்துவமும் கெரில்லா யுத்தமும் - டிசம்பர் 1984. தமிழ்த் தேசியமும் சமுதாயக் கொந்தளிப்பும்என்ற தலைப்பில் கா.சிவத்தம்பி அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையொன்று சென்னையிலிருந்து ஈரோஸ் ஆவணக்காப்பக வெளியீடாக பெப்ரவரி 1986இல் வெளியிடப்பட்டிருந்தது மரணம்- செழியனின் கவிதைத் தொகுப்பு , ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு, ஈரமற்ற மழை என்ற தொகுப்பு செழியனின் மற்றொரு பிற்காலப் படைப்பாகும். கொழும்பு மூன்றாவது மனிதன் வெளியீடாக, ஆகஸ்ட் 2002 இல் இது வெளிவந்திருந்தது மரணத்துள் வாழ்வோம் என்ற பெயரில் .சேரன், .யேசுராசா, .பத்மநாப ஐயர், மயிலங்கூடலூர் பி.நடராஜன் ஆகிய நால்வரும் தொகுத்து முதலில் யாழ்ப்பாணம் தமிழியல் வெளியீடாக 1985 ல் ஒரு போரியல் கவிதைத் தொகுதியை வெளியிட்டிருந்தார்கள்

ஈழத்தின் 31 இளம் கவிஞர்களின் 82 கவிதைகளின் தொகுப்பு இதுவாகும்.சிவரமணியின் தொகுப்பு மிக முக்கியமானதும் செறிவு மிகுந்ததும் ஆகும் . சேரன் தொடர்ச்சியாக புலம் பெயர்ந்து பல தொகுப்புகளை வெளியிட்டார் . ...ஜெயபாலன் படைப்புகள் குறிப்பிடத்தக்கவை . புதுவை இரத்தினதுரை, கி.பி.அரவிந்தன், குறிஞ்சித்தென்னவன், மு.புஷ்பராஜன், சாருமதி, .ஆதவன், எம்..நுஃமான், ஹம்சத்வனி, கவியரசன், புசல்லாவை குறிஞ்சிவளவன், சு.வில்வரத்தினம், சுந்தரன், .யேசுராசா, அரு.சிவானந்தன், யோகராணி, ரவீந்திரன், கனகரவி, இரணையூர் பாலசுதர்சினி என்ற நீண்ட மரபு இன்றும் தமிழ்நதி ஈறாக அகரமுதல்வன் வரைத் தொடர்கிறது. சில தொகுப்புகள் முக்கியமானவை ஆனையிறவு என்ற தொகுப்பு 42 கவிஞர்களின் கவிதைகளைக் கொண்டது செம்மணிஎன்ற தலைப்பில் வெளியான நூலில் 24 கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றிருந்தன. ஆம் நண்பர்களே இந்த மரபில்தான் அகரமுதல்வனின் இந்த தொகுப்பையும் வாசிக்கிறேன் .

இந்த நீட்சியில் இன்றைக்கு ஈழ இலக்கியங்கள் குறித்துப் பேச வேண்டிய எரியும் தேவை என்ன ?
ஒரு வரலாறு திரித்து எழுதப் பட்டு விடக்கூடாது என்பதால் , தோற்ற அரசனை மதங்கள் அரக்கனாக்கும் என்பதால், அரசுகள் தீவிரவாதியாக்கும் என்பதால்,புரட்சியாளர்கள் கொள்ளையர்களாவார்கள் என்பதால்,தளபதிகள் போதைப் பொருள் கடத்துகிறவர்களாவார்கள் என்பதாலும். இரத்தம் சீழாகும் .கண்ணீர் எச்சிலாகும் .ஆக ,புரட்டுகள் புழுதி மூடி புதைப்பதை தடுத்து மெய்மைகளை பதிவு செய்வதன் வழி இவை ஆவணங்களாகின்றன.

தேசமற்றுப் போனவனுக்கு மொழியே நிலம் .சொற்கள் வழியே அவன் உதிரம் ஓட உந்துசக்தி பிறக்கிறது.அவனிடமிருந்து மொழியை பிரித்து விட்டால் அவனுடலை கரையான் தின்னத்துவங்கிவிடும் அல்லது ஏதேனும் மின்மயானத்திலிருந்து வெளியேறும் புகையாகி இருப்பான். மொழிதான் எத்தனைக் கண்டங்களில் வாழ்ந்தாலும் பிணைத்து வைத்திருக்கும் நரம்பு மண்டலம். ஆம் அவன் அதன் பேராலேயே சகலமும் இழந்தான்.

மேலும் எந்த நாட்டவர் ஆனாலும் புலம் பெயர்ந்து வலசை போன /அடிமைகளாக்கப் பட்டு கொண்டுசெல்லப் பட்டவர்கள் எல்லோரிடமும் முதலில் சொல் தொலைகிறது. நாடு முழுக்கப் பேசிய மொழி . ஊர் முழுக்க புழங்கிய மொழி , வீட்டுக்குள் சுருங்குகிறது.வெளியே புதிய தேசத்தின் புதிய மொழி . வேற்றுச் சொற்கள் புழங்கு மொழியிலிருந்து தாய்மொழியில் கலக்கின்றன. பின்னர் எழுதத் தெரியாமல் பேச மட்டும் தெரிந்த சந்ததிகள் உண்டாகும் .சந்ததிகளும் அந்த தேசத்தில் கலப்புமணம் புரிவர்.ஒரு கட்டத்தில் தாயும் மகளும் மட்டும் தாய் மொழி பேசுவர் அல்லது தந்தையும் மகனும் மட்டும் .இறுதியிலும் இறுதியாய் எஞ்சுவது பெயர்கள் . அவற்றிலும் பின்னொட்டுகள் தொற்றிக் கொண்டு நிற்கும்.

அவ்வகையில் இந்த வலி ,இந்த இரத்தம் , இந்த மரணம் சுமந்து நிற்கும் இந்த கவிதைகள் மற்றும் படைப்புகள்தான் பண்பாட்டு சின்னங்களை தலைமுறைக்கண்ணிகளை கோர்க்கின்றன . தொப்பூல்கொடியாய் கட்டுகின்றன. ஆம் நண்பர்களே மொழியே நிலம்/ நிலமே மொழி.அதுவே வழியும் சத்தியமும் எஞ்சிய நம்பிக்கையுமாய் இருக்கிறது.

அகரமுதல்வனின் இந்த தொகுப்பு எரிந்த காட்டின் மீது பெய்த மழை பெருக்கிய புதுவெள்ளத்தில் மிதந்து வரும் மலர் அதில் குருதி நிறம் கலந்திருக்கிறது.  கருகிய உடல்களின் வாசனை ஆவியென விண்ணளக்கிறது. அதன் கதறல் ஈரக்குலையை கவ்வுகிறது.அதில் நீங்கள் சுருதி பேதம் பார்க்காதிருப்பீர்களாக. மூக்கின் வழியாகவும் குதத்தின் வழியாகவும் புகுந்தாலே அலறுகிறவர்கள் எழுதும் சொற்கள் இந்த தொகுப்பில் இருக்கும் உண்மைகள் அதை பதிவு செய்திருக்கும் நேர்மை முன் பாவனைகளாகின்றன.  

யுத்தத்திற்கு பிறகான உலகின் எல்லா இலக்கியங்களுக்கும் உள்ள பொதுக்குணம் தாம் தொலைத்த நிலத்தை ,வரலாற்றை ,பண்பாட்டு நிலத்தை மீளுருவாக்கம் செய்தல்,அதன் நரம்புகளில் கசிந்த குருதியை ஆவணப் படுத்துதல்.அகரமுதல்வன் அதன் குருதியை நிறம் மாறாமல் பதிவு செய்ய விழைந்திருக்கிறார் .

இந்தக் கவிதை
தலைகீழாக தொங்கியபடி எழுதப்பட்டது
நீங்கள் நினைப்பது போன்ற தலைகீழானது அல்ல
மிகத்துவக்கத்தில்
என் மூத்தோனின் கண்களை
தரையில் சிதைத்த வன்மம்
வதையின் கூடாரத்திற்கு
வெள்ளை வேன் ஒன்றில்
என்னைக் கடத்தியிருந்தது
ரத்த நெடி வீசும்
மானுட வதையின் கூடாரத்தில்
சூடாக்கப்பட்ட இரும்புக்கம்பி
மூக்கின் துவாரங்களில் புகுத்தப்பட்டு
என்னை உயிரோடு புதைத்துக் கொண்டிருக்க
எலும்புகளையும் நரம்புகளையும்
மொழிபெயர்க்கவியலாத கவிதைகளுக்கு உரமாக்கி
வவ்வால் வடிவில் தொங்கி இறக்கிறேன்
போரில் தொலைந்த பிள்ளையை
தேடியலைந்து
களைப்புற்ற பறவையாகி
வீடுபோய்ச் சேருகிற
அம்மாவைத்தவிர
நீங்கள் உணர்ந்திருக்க வாய்ப்பற்றது
தேசத்திற்கான ஜீவிதத்தையும் அந்திமத்தையும்  

வதைமுகாம்களில் இருந்து வெளியேறி அந்த கணங்களை கவிதைகளாய் எழுதும் ஒருவன் மீண்டும் ஒருமுறை வதைக்கு உள்ளாகிறான் . அகரமுதல்வன் அந்த வலியை ஏற்றிருக்கிறார். வாசகனுக்கும் கடத்த விழைகிறார்.

மனித இருப்பு, ஓர் சிலந்தி உறிஞ்சிய பூச்சியின் உடல் கூடென மாறும் தருணம் அகதியென தன் அடையாளங்கள் வெறும் மச்சக் குறிகளும் தழும்புகளுமாய் ஓர் படிவத்தில் நிரப்பப் பெறும் தருணம்

"ஊஞ்சலாடிய முற்றங்களில் முட்கம்பிகள் முளைக்க
அகதியெனும் பெயரோடு தொப்புள் கொடி மண்ணில்
போலிஸ் பதிவுகளை நிரப்பிக் கொண்டிருக்கிற 
எனது விரலேறிப் பாய்கிறது அவமானத்தில் பூனை ‘’

என்ற வரிகளில் இறக்கி இருக்கும் கனம் அவ்வளவு அந்தரங்கமானது தொண்டைக்குழியில் தூண்டில் கொக்கி விலுக்கென பதியும் வலி .முன் சொன்ன கவிதையில் வதைமுகாமின் துக்கம்,இந்த வரிகளில் இடப் பெயர்வின் கையறுநிலைபோர் அதன் எச்சங்களை வாழ்நாளெங்கும் உடலுக்குள் சுமக்கும் சிலுவையென எலும்புகளில் தன்னை அறைந்து கொள்கிறது.

"செல்கள் கூவி வெடித்த
கனவொன்றிலிருந்து சிதறுகிற
நாடற்ற கவிஞனொருவனின் நாள்
எங்கேயும் பதியப்படாமல்
பிரபஞ்சமெங்கும் உபரியாய்
தலையற்று கைகால்களற்று
உயிருமற்று வீழ்கிறது
எரியும் கங்குலின் மீது"

கனவுகளில் வரும் சிதை நிலை உருவாக்கும் உளச்சிதைவு தாள இயலாதது . ஆம் உண்மையில் ஒரு சிப்பாய்க்கு போர் முடிவதே இல்லை

நீண்ட பலி பீடத்தில் அரிந்து வைத்த
நெடுங்குஞ்சிச் சிரத்தைத் தன் இனம் என்றெண்ணி
ஆண்டளைப்புள் அருகு அணைந்து பார்க்குமாலோ!
அணைத்தலும் அச்சிரம் அச்சம் உறுத்துமாலோ!

(கலிங்கத்துபரணி )
பலிக்கடன் செலுத்தும் பலிபீடம். அதன்மேல் நேர்ச்சைக் கடன் செலுத்தும் போர்வீரர் தனது நீண்ட சிகையை உடைய சிரத்தைத் தாமே தம் கையில் அரிந்து வைத்துள்ளார். அத்தலை ஆண்டளைப் பறவை உட்கார்ந்திருப்பது போல் தோற்றம் தருகிறது. அந்த நெடுங்குஞ்சிச் சிரத்தை, தன் இனம் என்று எண்ணி அருகு அணைந்து பார்க்க வருகிறது. அவ்விதம் ஆண்டளைப் புள் அருகு அணைந்ததும் அறுபட்ட தலையின் வெறிக்கும் கண்கள் அச்சுறுத்தும்.

ஆம் நண்பர்களே இப்படி தொடர்ச்சியான பலிகளால் நிரம்பி இருக்கிறது வரலாறு ,தென்னாபிரிக்காவில் மழை வரவழைக்கும் சடங்குகள் தொல்குடிகளிடையே உண்டு .சடங்கு நிகழ்த்த முடிவு செய்யப்பட்ட நாளில்  மூப்பனின் ஆணையின் பேரில் பறைகொட்டி ஊர் கூட்டுவான் பிரசாரகன் . அன்றிரவு காடுகளில் வேட்டையாடி கொழுத்த பலி மிருகம் ஒன்றை வேட்டையில் நாற்புறம் துரத்தி பிடிப்பார்கள் . அம்மிருகம் பலிபீடத்திற்கு அருகே வந்தது.மழைக்குரிய பிரார்த்தனை பாடல் துவங்கும் . இப்போது மிருகத்தைச் சுற்றி எல்லைக்காப்போன்,மற்ற உபதலைவர்கள் என சூழ்ந்து நின்று நடனம் துவங்கும் . மழை மழை என்ற சப்தம் ஆண் பெண் அனைவரும் முழங்க  தாளமும் நடனமும் உச்சம் பெறும் நேரத்தில் மிருகம் வெட்டப்படும் . அதன் உதிரம் பெருகி பீய்ச்சி அடிக்க  அந்த உதிரத்தைப் பருகுவர் . உடல் பூசுவர். எண்திசையும் தெளிப்பர். எவ்வளவு அதிக இரத்தமோ அவ்வளவு மழை .அந்த கத்தி மூப்பனின் வீட்டிலிருந்து வரும் . வெட்டுகிறவனுக்கு ஒரு பங்கு அதிகம் கிடைக்கும் .அப்படித்தான் பலி கொடுக்கப் பட்டிருக்கிறது ஒரு இனம் . மழை இங்கு பொருளாதார விருத்தி .சூழ நின்றோர் வல்லரசுகள் உபவல்லரசுகள் .இந்த அரசியல் ரீதியான திட்டமிட்ட சர்வதேச வியூகத்தை தன் தொகுப்பின் 90 களுக்குப் பிறகான பக்கங்களில் அகரமுதல்வன் வெவ்வேறு சொற்களால் பதிவு செய்திருக்கிறார்

 உக்கிரமும் கவித்துவமும் தெறித்திருக்கும் இந்த தொகுப்பில் செய்நேர்த்தி,உத்தி போன்ற தராசுகளுடன் அணுக மனமொப்பாமல் போனாலும் தொகுப்பில் பொருந்தாத தருணங்களில் பயனுற்றிருக்கும் படிமங்கள் தவிர்க்கப் பட வேண்டியவை என்பதையும் , கூடவே அரசியல் கவிதைகள் எழுதுகையில் நம் நிலைப்பாடுகளுக்கும் துவக்குகளுக்கும் எதிரிடையான சொற்களை பயன்படுத்தாமல் இருப்பதில் கவனத்துடன் இருப்பதும் அவசியம் என்பதையும் பதிவு செய்தாக வேண்டி இருக்கிறது.இந்த தொகுப்பின் நல்ல கவிதைகளுக்காகவும் இனியான சொற்களின் பயணத்திற்கும் அகரமுதல்வனுக்கு முத்தங்கள் !.
குண்டை வயிற்றுக் குறிய சிறிய நெடிய பிறங்கற்பேய்
இண்டை படர்ந்த இருள்சூழ் மயானத்(து) எரிவாய் எயிற்றுப்பேய்
கொண்டு குழவி தடவி வெருட்டிக் கொள்ளென்(று) இசைபாட
மிண்டி மிளிர்ந்த சடைகள் தாழ விமலன் ஆடுமே.
(காரைக்கால் அம்மையார் )
குழி விழுந்த வயிறும் குறிய சிறிய நெடியதாய் விளங்கும் பேய் இண்டு என்ற காட்டுச் செடி படர்ந்த, இருள் சூழ்ந்த மயானத்தில் எரிகின்ற வாயையும் பற்களையும் உடைய பேயை அச்சுறுத்திக் குழந்தையைத் தடவி ஏற்றுக்கொள் என்று இசைபாட நெருங்கி விளங்கிய சடைகள் தொங்குமாறு இறைவன் ஆடுவான்.
என்ற பதிகத்தில் இருக்கும் நம்பிக்கையுடன் இச்சிறு பார்வையை நிறைவு செய்கிறேன் . பேச சாத்தியங்கள் அமைத்துத்தந்த கூழாங்கற்களுக்கும் நண்பர்களுக்கும் மிக்க நன்றியும் அன்பும் .
வணக்கம் !
19.06.2015
அபூஜா,நைஜீரியா


Comments

  1. வேதனையுடன் படித்தேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்