திருச்சொற்களால் எழுதப்படமுடியாத நிஜம் - தீபச்செல்வன், அகரமுதல்வன் ஆகியோரின் கவிதைகளை முன் வைத்து இனப் படுகொலை கால இலக்கியப் பதிவு-ஆழி செந்தில்நாதன்:-





கடலோரம் தலை பிளந்து கிடந்த
உடல்.

இறப்பிலும் மூட மறுத்த கண்களின்
நேர் கொண்ட பார்வையில் மிதக்கிறது:
எதிர்ப்பு, ஆச்சரியம், தவிப்பு, தத்தளிப்பு, கொதிப்பு,
ஆற்றாமை
முடிவற்ற ஒரு பெருங்கனவு.

கவிஞர் சேரனின் இந்த கவிதையோடு தொடங்குவதற்குக் காரணம் உண்டு. அவர் பட்டியிடும் உணர்கவுகள்தான் உலகு தழுவியதோர் ஒற்றை மேகமாக 2009 மே மாதத்தில் உலகத் தமிழர்களின்மீது கவிந்திருந்தது.

சென்னையில் ஒரு தேநீர்க்கடையில் தினசரி காலையில் ஒரு கார் டிரைவரைச் சந்திப்பேன். மே 18 இல் அல்லது 19 இல் என நினைக்கிறேன். கடையில் நாங்கள் இருந்த சமயம், அந்தச் செய்தித்தாளை எடுத்து அவர் தலைப்புச்செய்தியைப் படிக்கிறார்: பிரபாகரன் கொல்லப்பட்டார். அவர் நம்ப மறுத்து தலையை அசைத்தார். “இதெல்லாம் சும்மா சார். அவர் நேதாஜி மாதிரி. அவரயெல்லாம் இவனுங்க ஒன்னும் பண்ணமுடியாது. அவர் எப்பவோ அங்கேயிருந்து பறந்திருப்பாரு” என்றார். அவருக்கு நக்கீரன் துணையிருந்தான்.

ஆனால் கடையில் ஒரு மெளனம் நிலவியது. இழவு வீட்டின் சோகமொன்று அங்கே குடிகொண்டிருந்தது. யாராவது ஒருவர் அங்கே விசும்பத்தொடங்கினால், அநேகமாக எல்லோரும் அழுதிருப்பார்கள். ஏதாவது நடந்திருக்கலாம். ஆனால் நானும் அந்தச் செய்தியை நம்ப விரும்பவில்லை. “எத்தனை முறைதானய்யா ஒரு மனிதனைக் கொல்வார்கள்” என்று நினைத்துக்கொள்கிறேன். ஆனால் எனக்குத் தெரியவும் தெரிந்தது. நேர் குத்தி நின்ற அந்தக் கண்கள் அநேகமாக அவருடையதாகத்தான் இருக்கும். ஆற்றாமையாலும் கோபத்தாலும் கொதிப்பாலும் நானும்தான் கொந்தளித்தேன். நாம் என்ன செய்யமுடியும்?

போரின் இறுதி நாள்கள் இப்படித்தான் இருந்தன. நாம் தோற்றுவிட்டோம். நிலத்தை இழந்தோம், பிறகு சொற்களை இழந்துவிட்டோம். ஏழு கோடி தமிழர்கள்! ஏழு கோடி அற்பர்கள். அதிகாரமற்ற ஏழு கோடி நடைபிணங்கள். எதையும் செய்யத் தவறினோம் என்கிற குற்றவுணர்வு இருந்தது. ஆனால் அதைவிட ஆனால் இறுதி விளைவை நம்ப மறுக்கும் இந்த உணர்வுதான் அதீதமானதொரு உணர்வாக இருந்தது.

Disbelief என்ற சொல்லின் உண்மையான பொருளை அப்போது நாம் உணர்ந்துகொண்டோம். நம்ப மறுத்தமை ஒரு மாபெரும் தவறுக்கும் இட்டுச்சென்றதாக எனக்குப்பட்டது. ஈராயிரம் ஆண்டுகால தமிழ்ச் சமூகத்தின் ஒற்றைத் தலைவன் என யாரை புகழ்ந்தோமோ அவன், துரோகத்தின் சுவடுகூட பதிக்காமல், வீரமரணம் எய்தினான், முன்பு வீரமரணம் அடைந்த எத்தனையோ மாவீரர்களுக்கு அமரத்துவத்தை அளித்தவன் அவன், மாவீரர் துயிலும் இல்லங்களை எழுப்பியவன், சாவினை ஒரு கொண்டாட்டமாக ஆக்கியவன், ஆனால் அவனது புகைப்படத்துக்கு மாலையிட்டு, அவன் முன்பு ஒற்றை ரோஜாவையேனும் வைத்து அஞ்சலி வைக்கும் வாய்ப்பினை இந்த சமூகம் எனக்குத் தர மறுத்துவிட்டது. ஏனென்றால் அவரை அமரர் என்றே நாம் நினைத்தோம். அவரைக் கொல்லமுடியாது. நம்ப மறுத்தோம். நம்மில் ஒருவர்தான் என்றாலும், அற்புதமானவராய் ஏன் இருக்கக்கூடாது? அல்லது இயேசு கிறித்துவைப் போல மூன்றாம் நாள் உயிர்த்தெழமாட்டார் என நம்புவதற்கு என்ன தடை?

யுத்தத்துக்குப் பிந்தைய தமிழ் உளப்பாங்கின் பிரதான அம்சமாக இதை நான் முன்வைக்கிறேன். Disbelief.  நம்ப மறுத்தல். இதை நான் எதிர்மறை அம்சமாக இங்கே முன்வைக்கவில்லை. ஒரு யதார்த்தமான நிகழ்வாக அது எப்படி தமிழ்கூறு நல்லுலகை ஒரே மாதிரியாக படர்ந்து ஆக்கிரமித்தது என்பதை நினைத்து ஆச்சரியப்பட்டேன். அதை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். ஏனென்றால் அது நவீன மனத்தின் பகுத்தறிவுப் படலங்களுக்கு கீழே, ஒரு ஜீவநிதிபோல சலனித்துக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு ஆதி – primordial – உணர்வாக தோன்றுகிறது. இந்த ஆதியுணர்வை புரிந்துகொள்ளாமல் என்னால் முள்ளிவாய்க்காலுக்கு முந்தியும் பிந்தியும் எழுதப்பட்ட கவிதைகளை புரிந்துகொள்ள முடியாது என நினைக்கிறேன்.

நம்ப மறுத்தல் என்பது வெற்றியுடனான ஒரு ஒப்பந்தத்தை மீறுவதாக இருந்தது.

*
போர்க்களமும் போர்க்களம் சார்ந்த்துமான இடம், ஒரு நிலம், 24 மணிநேரமும் சமர் நடந்தேறும் ஒரு பொழுது, சாவின் அனைத்து அம்சங்களும் கருப்பொருள்களே. எமன் தெய்வம், நெருப்பே மலர். மரித்தலும் மரித்த்ல் நிமித்தமும் ஆன ஓர் உரிப்பொருள். தமிழ் இலக்கியத்தின் புதியதொரு திணை வன்னியில் உருவானதா?

இங்கே நீங்கள் உயிர்த்தரிப்பதற்கான செயல்பாடாக, உங்களை நிலைநிறுத்திக் கொள்வதாற்காக, உங்கள் மனம் பேதலித்து விடக்கூடாது என்பதற்காக கவிதை படைக்கும் வினையில் ஈடுபடுகிறீர்கள். தீபச்செல்வன் போன்றவர்களை இந்த புதியதோர் திணையின் கவிஞர்களாவே நான் பார்க்கிறேன்.

தீபச்செல்வனின் கவிதைகளையும் அகரமுதல்வனின் கவிதைகளையும், இனப்படுகொலைக்குப் பிந்தைய ஈழக் கவிதைகள் அனைத்தையுமே தொகுத்துக்கொண்டு பார்த்தோமானால், அது தமிழ் இலக்கியத்தின் ஒரு புதிய வகைமையைக் குறிப்பதாகவேத் தோன்றுகிறது. போர் இலக்கியம் நமக்குப் புதிதல்ல. சங்க காலம் முதல் நவீன காலம் வரை, போரின் பல்வேறு பரிமாணங்கள் தமிழில் ரத்தமும் சதையுமாக எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் அது வெற்றி பெற்றவர்கள் தோல்வியுற்றவர்களின் ரத்தத்தையும் சதையையும் எடுத்து எழுதியவை.

மிக அரிதான ஒரு கவிதைகளைத் தவிர, புறநானூற்றில் கவிதைகள் பாதிக்கப்பட்டவர்களின் நிலைகளிலிருந்து பாடப்படவில்லை. பாடாண்திணைகளும் பரணிகளும் வெற்றிபெற்றவர்களுக்கானது. முன்தீர்மானிக்கப்பட்ட புறத்திணைகளில் விதிமாறாமல் களமாடியவர்களின் செயல்பாடுகளே பாடல்களாயின.

எப்போதாவது தோல்வியைப் பாடுவதாக இருந்தால் அநேகமாக அது மானம் தொடர்பானதாக இருந்தது. தமிழ் அரசுகள் ஈராயிரம் ஆண்டுகளில் அடைந்த தோல்விகள் எவ்வளவோ. ஆனால் தோல்வியைப்பாடி பரிசில் பெறமுடியாது. மாபெரும் சோழப் பேரரசு வீழ்ந்தபோது அதற்கு இரங்கற்பா எழுதக்கூட யாரும் முன்வரவில்லை.

போரில் நாம் கையறு நிலையை எதிர்கொண்டிருக்கிறோம். இயலாமையை, ஆற்றாமையை, நம்ப மறுத்தலை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். அவற்றைப் பாடுபொருளாக ஆக்கியிருக்கிறோம்.

ஆனால் இப்போது சந்தித்ததுபோன்றதொரு ஊழியை நாம் எப்போதும் எதிர்கொணடதில்லை. ஏனென்றால் மூவேந்தர்களுக்கும் வேளிர்களுக்குமிடையிலான யுத்தம் போன்றதல்ல நாம் முள்ளிவாய்க்காலில் பார்த்தது. அது உலகமொடு போரிட்ட ஓர் அவலமிகு இனத்தின் யுத்தம். ஒற்றைத் தரப்பு யுத்தம். சாட்சியங்களற்ற யுத்தம். தோல்வி முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருந்தது. அது நமக்குத் தெரிந்துமிருந்தது. அதை எந்த அளவுக்கு ஏற்பது என்பது மட்டுமே விஞ்சியிருந்த ஒரே கேள்வியாக இருந்தது. அதனால்தான் இந்தப் போர்க்களத்தில் ஒரு படைப்பாளனுக்கு தோல்வியைத் தவிர, மரணத்தைத் தவிர, ஊழியைத் தவிர எழுதுவதற்கு வேறு பாடுபொருள் இல்லாமல் போனது. இறுதிச்சொட்டு ரத்தம் இருக்கும்வரை போராடுவேன் என்கிற வீரவசனங்கள் அர்த்தம் பெறும்பொழுது அக்கணமே அர்த்தமும் இழக்கின்றன.

நாம் சாவைக்கூட பாடிவிடமுடியும். ஈழத்தில் வேறு எந்த ஒன்றையும்விட நிச்சயகரமானதாக இருந்துவருவது மரணம்தான். அது ஏற்கனவே வீரத்தாலும் துரோகத்தாலும் சுலபமாக அடையக்கூடியதொன்றாக அங்கே நிலவி வந்தது. 2009க்குப் பிறகு அவர்கள் தோல்வியைப்பற்றி பேசியதுதான் ஒரு புதிய விஷயம்.

மீண்டு எழுந்துவிடுவோம் என்கிற நம்பிக்கை தலைகாட்டிய தருணங்கள் உண்டென்றாலும் மீண்டு எழுதவதற்கு முன்பு ஒரு தோல்வியை தழுவித்தான் ஆகவேண்டும் என்கிற நிஜத்தை அவர்களால் அங்கீகரிக்காமலும் இருக்கமுடியவில்லை. அதனால்தான் தோல்வியையும் ஆற்றாமையையும் கையறு நிலையையும் நம்பவியலாமையையும் பதிவுசெய்யும் காலமாக இது இருந்தது. ரத்தமும் சதையுமாக அதை நமது கவிஞர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள். ஆனால் இந்த தடவை அது எதிரியின் ரத்தமோ சதையோ அல்ல. நமது ரத்தமும் நமது சதையும்.
*
அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையேம்;  எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.

இது பாரிமகளிரின் துயரார்ந்த பாடல். முன்பு எங்கோ படித்த நினைவிலிருந்து கூறுவதென்றால், உலகக் கவிதைகளின் வரிசையில் முதலிடங்களில் நிற்க வல்லது இந்தக் கவிதை. இந்தக் கவிதை உலகின் மிகச்சிறந்த அவலச்சுவைக் கவிதை என்று ஒருவர் எழுதியிருந்தார். அவர் உலகின் எத்தனைக் கவிதைகளைப்படித்தவர் என்று எனக்குத் தெரியாது. ஆனால் யோசித்துப்பார்த்தால், பாரிமகளிரின் இந்த வரிகளில் காணப்படும் ஆழ்ந்த சோகமொன்றைவிட பெரிதாக வேறொரு சோகம் என்ன இருந்துவிடப் போகிறது என்றே தோன்றுகிறது.

ஈழக் கவிஞர் கனகலதா, இரண்டாவது காலனித்துவத்தின் சில காட்சிகள் என்கிற கவிதையொன்றில் எழுதியிருந்தார். யுத்தத்துக்கு பிந்தைய ஈழத்துக்கு அவர் – பல ஆண்டுகள் கழித்து – செல்கிறார்.

“நடந்தவைகளை கடந்தேகும்
மனவேகம் வாகனத்தைத் தாண்டுகிறது.
பல ஆண்டுகளுக்குப் பிறகான பயணம்
சாலைக்கும் எனக்கும்.

முதல்படியில் நிற்கும்
சீருடைப் பணியாளன்,
மே மாதத்துக்குள் நுழைந்து

பீரங்கி, கண்ணிவெடி, எறிகணை, துப்பாக்கி,
ரத்தம், கண்ணீர், பயம் எனத் தொடர்கிறான்.

வாகனம் குலுங்கி நிற்க,
‘தமிழீழம் வரவேற்கிறது’
என்றொரு காலம்
இங்கிருந்தது என்றான்.

வெய்யிலுக்கு முகம் சிவந்து
துப்பட்டாவால் மூடிக்கொண்டேன்
ஏங்கிக் கிடக்கிறது சோதனைச் சாவடி

சிங்களத்துக்குக் கீழே
தமிழ்
வழியெங்கும்.

(முள்ளிவாய்க்காலுக்குப் பின், கவிதைத்தொகுப்பிலிருந்து)

பாரி மகளிரின் துயரமும் கனகலதாவின் துயரமும் ஒன்றுதான். அவர்கள் தமக்கென ஒரு நிலம் வைத்திருந்தார்கள். குறுகிய காலமேனும், தமக்கென ஓர் அரசை நிறுவியிருந்தார்கள். தமக்கென ஒரு தலைவனையும் கொண்டிருந்தார்கள். திடீரென அவர்களுக்கு அவை காணாமல் போயின.

தீபச்செல்வனிடம் இந்த வேதனை வெளிப்பட்டது:

எங்களுக்கு ஒரு கனவு இருந்தது
ஒரு வாழ்வு இருந்தது
ஒரு நாடு இருந்தது
அப்போது எங்களுக்கு என ஒரு கொடியும் பாடலும் இருந்தது.

இன்று எங்கள் நிலத்தில் அந்நியக்கொடி பறக்கிறது.
எங்கள் நிலத்தில் அந்நியப் பாடல் ஒலிக்கிறது.
அன்று எங்கள் நகரத்தில் எங்கள் கொடிகள் பறந்தன.
எங்கள் நிலத்தில் எங்கள் பாடல் ஒலித்தது.

அன்று எஙகளுக்கு காவல் இருந்தது
இன்று நாங்கள் காவல் இழந்திருக்கிறோம்.
அன்று எங்களுக்கொரு தலைவன் இருந்தான்.
இன்று எங்களுக்கு யாருமில்லை”

(பாடலற்ற நிலம், எனது குழந்தை பயங்கரவாதி)
அரசியல் ரீதியிலும் ராணுவ ரீதியிலும் ஒரு கருத்து அப்போது கூறப்பட்டது. இந்த யுத்தத்தில் புலிகள் வெற்றிபெற்றால் அது அனைத்து தமிழர்களின் வெற்றியாக கருதப்படாமல் போகலாம். ஒருவேளை புலிகள் தோற்றுப்போனால் அது அனைத்து தமிழர்களுக்குமே தோல்விதான் என்பதுதான் அந்தக் கருத்து. அதுவே நிஜமென்றும் பிறகு ஆனது.

அதிலும் தலைவனை இழத்தல் என்பது மிகப்பெரிய அவலம். யுத்தத்தில் எல்லாமுமான தலைவனை இழப்பது எல்லாவற்றையும் இழப்பதுதான். எதனுடன் போர் முடிகிறது?  தலைவனை கொல்வதுடன் போர் முடிகிறது? எந்த உடல் எதிரிகளுக்கு அச்சமூட்டுகிறது? தலைவனது உடல்தான்.

அகரமுதல்வன் எழுதுகிறார்:
உயிர்த்தெழமுடியாதபடிக்கு
உடல் துளைத்துக் கிழிபட்டு
சிலுவையொன்றில் அறையப்பட்டான்
எமக்கான இயேசு.
நாங்கள் என்றுமே காணாதவாறு
அவனது உடலின் ரகசியங்கள்
போதி மரங்களின் புத்தர்களால் பேசப்படுகின்றன.

அவனது மரித்தலின் ஆழத்தை நீந்துகிறபோது
பொறுத்தலுக்கு அப்பாற்பட்டு
கடலின் ஜீவன் எழுச்சியாகிக்கொண்டிருக்கிறது.
(தலைவன் என்பவனும் தசைகளின் கூட்டுருவே, அறம் வெல்லும் அஞ்சற்க)

உண்மையில் தோற்றுப்போவோம் என்று யாரும் நம்பியிருக்கவில்லை. “நாங்கள் யாருமெதிர்பாராத விதமாக, எல்லாம் நிகழ்ந்துமுடிந்துவிட்டது. முப்பது வருடகாலமாக எமது மக்கள் வாழ்வு பற்றிய கனவுக்காக செய்த எல்லாமே தோல்வி அடைந்திருக்கிறது” என்று ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம் என்ற தலைப்பிலான கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் தீபச்செல்வன் குறிப்பிட்டிருந்தார்.

நிலம், கனவு, முடிவு, முடிவற்றது, ஏக்கம், சாவு, குழந்தைகள், பதுங்கு குழிகள், பயங்கரம், ரத்தம் போன்ற சொற்களாலானது இறுதி யுத்தம். அங்கே வீரம், தியாகம், தேசம் போன்ற சொற்கள் சற்று தடுமாற்றத்துடனேயேதான் பாவிக்கப்பட்டன.

2007 இலிருந்தே தோல்வியின் யுத்தம் தொடங்கிவிட்டதை ஒருவாறு புலிகளும் ஈழத்தமிழர்களும் அறிந்தே இருந்தனர் என்றுதான் சொல்லமுடியும். ஆனால் ஆட்டத்தை முடித்துவைக்கும் உரிமையை அவர்கள் இழந்திருந்தார்கள். இலங்கையும் சர்வதேசியமுமே அந்த யுத்தத்தின் திசைப்போக்கைத் தீர்மானித்தன.

அந்த உலகளாவிய பெருங்கூட்டு ஈழக்கனவை சிதைத்தது.
தோற்கடிக்கப்படவேண்டியவர்கள் பயங்கரவாதிகள் மட்டுமல்ல, மக்களும்தான் என்கிற சித்தாந்தம் ஒரு சர்வதேச அரசியலாக, ராணுவ வியூகமாக உருவானதை யாராலும் முன்னறியமுடியவில்லை. அந்தத் தருணத்தில் முள்ளிவாய்க்காலை நோக்கி நகர்ந்த நாட்கள் 21 ஆம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலைக்கான தொடக்க நாட்களாகவே இருந்தன. .

தொடுவாய்ப் பிரிப்பில் காய்ந்த கோப்பையில்
மிதக்கிறது இனத்தின் பெருங்கனவு
ஒரு பெருமிருகம்
முள்ளிவாய்க்காலைக் குடிக்கத்
திட்டமிடுகிற குருட்டிரவில்
அறிவிக்கப்பட்ட வலயத்தின் மேலாக
பற்கள் விழ பெரும்பாம்பு பறக்கிறது.

முள்ளிவாய்க்கால் வீழ்ச்சிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பான நிலையை தீபச்செல்வன் இவ்வாறு எழுதினார். போரால் அலைந்துகொண்டிருக்கும் காலத்தில் அவர் தீவிரமாக இப்படி எழுதிக்கொண்டே இருந்திருக்கிறார். அவரது வார்த்தைகளில் சொல்வதானால், கோயில்களிலிருந்து தெய்வங்கள் வெளியேறிய காலத்தில், தடை செய்யப்பட்டப் பகுதிகளிலிருந்து வானம் வெளியேறிய தருணத்தில், அவர் கவிதைகளை எழுதுவதன் மூலம் உயிர்த்தரித்திருக்கிறார்.

யுத்தம்தான் வழமையானதாகவே இரண்டு தசாப்தங்கள் இருந்திருக்கின்றன. ஆனாலும் யுத்தத்தின் இறுதிநாள்கள் வேறானவை. முன்பு பார்த்தவை மிருகங்களாகவும் பாம்புகளாகவும் தோன்றினால் இப்போது பார்ப்பவை பெருமிருகங்களாக பெரும்பாம்புகளாக தீபச்செல்வனுக்குத் தோன்றுகின்றன. எனவே ஒரு பெருங்கனவு கலைந்துபோனது.

தீபச்செல்வனும் அகர முதல்வனும் பிறந்தது முதல் யுத்த களத்தில்தான் வாழ்ந்திருக்கிறார்கள். பல விஷயங்கள் அவர்களுக்கு பழக்கமானதாக இருந்திருக்கும். ஆனால் இறுதி யுத்தம் வித்தியாசமானது என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். 2008இல் எழுதிய அழிப்பதற்கு பிரடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள் என்கிற கவிதையில் ஒரு வரி வருகிறது:

யுத்தத்தின் விதி புதியதாய்
இயற்றப்பட்டு மாறிக்கொண்டிருக்கிறது.

அந்த புதிய விதியை எதிர்கொள்பவர்களாக மக்களோ புலிகளோ இல்லை. எனவே முள்ளிவாய்க்கால் ஒரு ஊழிக்காலமாகவே தமிழர்களால் எதிர்கொள்ளப்பட்டது.
*
யுத்தம் உருவாக்கும் இலக்கியம் புனைவற்றது. சாத்தியமற்ற விருப்பங்களால், தப்பவியலாத யதார்த்தத்தால், சாபமாக ஒரு எறிகுண்டு போல உங்கள் முன்பு வந்து விழும் நிஜத்தால், யுத்த இலக்கியம் அரிதாரங்களைக் களைந்து, யுத்தத்தால் சீரழிக்கப்பட்ட நிலத்தைப்போல, புனைவின்றி நிற்கிறது. புனைவற்ற அந்த வெளிதான் யுத்தமெனும் திணை. 

நிகழ்காலத்தைவிட்டு தப்பித்து ஓடிவிடக்கூடிய சூழல் போருக்கு பிந்தைய உலகில் நிலவுவதில்லை. பீரங்கிகளின் சப்தம் ஒடுங்கியது என்று நிம்மதியாக பெருமூச்சு விடுவதற்கான நம்பிக்கை உடனடியாக உருவாகிவிடுதில்லை. சொல்லப்போனால் போர் நிகழும்போது சற்றே ஒட்டிக்கொண்டிருக்கும் நம்பிக்கைகூட போருக்குப் பின், காணாமல்போகிறது. போர் ஒரு சூதாட்டமாக இருக்கும்போது வெற்றிக்கு ஒரு சாத்தியம் இருக்கிறது. தோல்விக்குப் பிந்தைய நிலை என்றால், அது முற்றிலும் வித்தியாசமானது. இந்த இழவுக்குப் போரிலேயே செத்திருக்கலாம் என்ற ஒரு அவமானம் சூழ்வதைத் தடுக்கமுடியாது. ஏனென்றால் முன்பு நீங்கள் மானத்தோடு வாழ்வதற்காகதானே போராடினீர்கள். மானத்துக்காக உயிர்விடவேண்டும் என்றுதானே படையணியில் பாடினீர்கள். ஆனால் தோற்ற பிறகு மானமுமில்லை, உயிரும் இல்லை.

யுத்த்த்தின்போது நீங்கள் பாடும் வீரதீரப்பாடல்கள் எல்லாம் தோல்விக்குப் பிறகு பாடப்படமுடியாத பாடல்களாகிவிடுகின்றன. விடுதலை ஒரு கனவென்றால், விடுதலை யுத்தம் ஒரு கொடுங்கனவாக மாறிவிடுகிறது. தோல்விக்குப் பிறகு போராட்டமே தவறான ஒன்றாகத் தோன்றும். பிரபாகரனே சொன்னார் என்பார்கள்: வெற்றி பெற்றால் சரித்திரம், தோல்வியுற்றால் வெறும் சம்பவம் என. சம்பவம் என்ற சொல் பல சமயங்களில் எதிர்மறையாகவே தமிழில் பயன்படுத்தப்படுகிறது என்று அறிக.

புனைவுகளற்றத் திணையில் கவிஞன் தனது உணர்வுகளுக்கு திரையிடுவதில்லை. தோல்வியைக் கண்டு, ஏ தோல்வியே உன்னை தோற்கடிக்கிறேன் பார் என சவால் விடுவதில்லை, சாவே, உனக்கு ஒரு சாவு வராதா என்றெல்லாம் சொல்லாடும் செளகரியம் அவனுக்கில்லை. அதெல்லாம் நம்பிக்கை இருந்த காலத்தின் மொழிகள்.

தீபச்செல்வன் முன்பு தோல்வி ஒரு இருளாக படர்கிறது. அதை அவரால் சகித்துக்கொள்ள இயலவில்லை.
தோல்வியின் வர்ணிப்பு நிரம்பிய
உனது குரல்
எனக்குக் கேட்கவேண்டாம்

என்கிறார் தீபச்செல்வன். ஏனென்றால்,

மறைக்கப்பட்டிருந்த
உனது சொற்களுக்குக் கீழாய்
உனது முகம் நசிந்து கிடக்க
தோல்வி வர்ணிக்கப்பட்டிருந்தது!


என்கிறார் அதற்கு பதிலாக.
தோற்றுப்போனவர்களின் பாடல் என்று தனது நூலுக்குத் தலைப்பையே வைத்து அந்த காலத்தை ஏற்றுக்கொள்கிறார் வ.ஐ.ச. ஜெயபாலன்.

அவமானம், சரணடைதல், எதிரியிடம் பிடிபட்டு இறத்தல், அந்தக் கணத்திலும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை விடாமல் இருத்தல் என தோல்வியின் அம்சங்கள் பல.

மூன்றாவது தடவை கொலைசெய்யும் ஜெனரல் என்கிற தலைப்பிலான கவிதையொன்றில் அகரமுதல்வன் எழுதுகிறார்:

“கண்களற்றவனுக்கு வெள்ளைப் பிரம்பும் நாடற்றவனுக்கு நல்ல துவக்கும் முக்கியம்” என்கிற நிலைமை மாறி விடுதலைப்புலி வீரனொருவன் எதிரியிடம் பிடிபட்டு, பின்பு நிர்வாணப்படுத்தப்படுகிறபோது அவன் தனது முதலாவது மரணத்தை எய்துகிறான். அவனது ஆசனவாயிலில் கம்பிகளைச் செலுத்தி, சித்திரவதை செய்து, எதிரிகள் அவர்களாகவே பிழையின்றி தயாரித்துக்கொண்டுவந்த ஒரு குற்றப்பத்திரிகையை அவனது வாக்குமூலமாக திரித்தபோது இரண்டாம் தடவை சாகிறான்.

பின்பு, அகரமுதல்வன் தொடர்கிறார்:
பிரபஞ்சத்தின் தீவிரமான இரவை
என் குருதியில் வடியவிட்டிருந்தனர் சிப்பாய்கள்.
வாயில் தன் சிறுநீரைக் கழித்து
என்னைக் கொல்வதற்கு
ஆச்சரியத்தோடும் அவாவோடும்
மேஜர் ஜெனரல்.
நிச்சலனமான அந்த அறையில்
தலைகீழாகத் தொங்கவிடப்பட்ட நான்
விடுதலைச் செய்யப்பட்டிருந்தேன்
சவக்குழி ஒன்றில்.

-    அகரமுதல்வனின் இந்தக் கவிதை நான் சுட்டிக்காட்டிய இந்த புதிய திணைக்கு மிகச்சரியானதொரு எடுத்துக்காட்டு. இந்தக் கவிதையைப் படித்தபிறகு உடனடியாக வேறொரு கவிதையைத் தொடர்ந்துப் படிக்கும் மனநிலையை உள்ளபடி நான் இழந்தேன். எப்படிப்பட்டதொரு அவமானம்? எப்படிப்பட்டதொரு தோல்வி.

-    முன்பு விடுதலையை மரணமாக பார்த்தான் ஒரு புலிவீரன், தனது உயிர் விடுதலையைப் பெற்றுத்தரும் என்கிற பொருளில்.

-     இன்று, மரணத்தை விடுதலையாக பார்க்கிறான்.
இன்னொரு இடத்தில் இன்னொரு புலி, “துயரார்ந்து கோடைக் காலத்தில் நடுங்கியபடி” தன் சரணடைதலை நிகழ்த்துகிறான். எல்லாம் முடிந்துபோயிற்று.
அகரமுதல்வன் கூறுகிறார்:
நாயகன் களத்திடை வீழ்ந்த்து உறுதியானது.
விடத்தல் பத்தையில் வீசியெறிந்த
ஏ கே 47 இன் வீரியம்பற்றி
ஆடையொன்றுமில்லாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன்
நான் இழக்கும் குருதிகளால் வலுப்பெற
அக்காவின் குழந்தைகளுக்கு கவிதை.

இக்கவிதையின் முதல் நான்கு வரிகள் புனைவிலி வரிகள். இறுதி இரண்டு வரிகள் அகரமுதல்வனின் விழைவு எனத்தோன்றுகிறது. உண்மையில் அப்படியொரு நம்பிக்கையுடன்தான் நாம் இறுதிப் போரில் இருந்தோமா எனத் தெரியவில்லை. ஆனால் இருந்திருக்கலாம். இன்னும் போராடும் இசைப்பிரியா என்ற கவிதையில் அவர் கூறியது போல, “இனவெறியை கர்ப்பம் தரித்து கொலைகளைப் பிரசவிக்கும் நிலமொன்றில்” இருந்த அதே சமயம், நம்பிக்கையை கைவிடாமல் அகரமுதல்வனால் எழுதமுடிந்தது என்றால் அது ஆச்சரியமானதுதான்.

தீபச்செல்வனின் கவிதைகள் மேலும் உக்கிரமாக இழத்தலையும் வீழ்ச்சியையும் துயரத்தையும் பதிவுசெய்கின்றன. சாட்சியமற்ற யுத்தம் என்று கூறப்பட்ட 2009 இனப்படுகொலையின் சாட்சியங்களாகவே அவரது கவிதைகள் இருக்கின்றன. அதுதான் அவற்றின் பெருமுக்கியத்துவம் என நினைக்கிறேன்.

“வீழ்ந்த நகரம் தற்கொலைசெய்துகொள்கிறது” என்கிற தீபச்செல்வனின் வரிகள் உணர்த்தும் துயரத்தை கிளிநொச்சியிலும் காஸாவிலும் வாழ்பவர்களால் மட்டுமே உணரமுடியும். குண்டுகள் விழும் நிலத்தில் துயரமானது பேருரு கொள்கிறது. 2008 இல் வன்னியில் கடும்போர் நடந்துகொண்டிருக்கிறது. டிசம்பர் 26 ஆம் தேதி, கிறிஸ்துமஸுக்கு பிந்தைய நாள் தீபச்செல்வன், இயேசுவிடம் சொல்கிறார்: “நீர் அறிந்திராத சிலுவைகளை நாம் சுமக்கிறோம்”. ஏனென்றால் கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள் குஞ்சுப்பரந்தன் பகுதியில் நடந்த ஒரு விமானத் தாக்குதலில் மாதா கோவிலொன்றில் கட்டப்பட்டிருந்த 85 மாடுகள் சின்னாபின்னாமாயின. மாடுகளைப் போல மாதாவும் போர்க்களத்தில் வாயில்லா பிராணிதான் என தீபச்செல்வன் முடிவுசெய்கிறார். “மாதாவிடம் எந்த திருச்சொற்களும் இல்லை”.  

ஆட்களற்றுப்போன நகரங்கள் குறித்த, வரமற்றுபோன தேவன்களைக் குறித்த தீபச்செல்வனின் பதிவுகள் தமிழ் யுத்த இலக்கியத்தின் முக்கிய இடம் வகிப்பவையாகும்.
*
தீபச்செல்வனும் சரி அகரமுதல்வனும் சரி, இறுதிப்போரின்போதும் பிறகு எழுதிய கவிஞர்களும் சரி, முதலில் எழுதுவதன் மூலமாக இருத்தலைக் காப்பாற்ற முயன்றார்கள். ஆனால் எழுதுதல் என்பது கிட்டத்தட்டத் தற்கொலைக்குச் சமானமானதாக இருந்தது என்கிறார் அகரமுதல்வன்.

துயரங்களுக்கு சொந்தமான
தீவொன்றில் பிறந்தது பற்றி
கவிதையெழுதுவது
தனது இதயத்தைச் சுடுவதாகும்
என்கிறார் அவர் (தலைமுறைக் கொலைகள், அ.வெ.அ)

அரிதாரமற்ற இலக்கியமாக இவர்கள் படைத்த்து பற்றி நாம் மேலும் சில வார்த்தைகளைப் பேசுவோம். அகர முதல்வனின் கவிதை நூலின் தலைப்பே: அறம் வெல்லும் அஞ்சற்க.  இந்த தலைப்பேகூட தமிழகத்தின் அதிவுயர் இலக்கிய பீடங்களில் ஓர் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியது.

தீபச்செல்வனின் நூலொன்றுக்கு முன்னுரையை எழுதிய கவிஞர் சுகுமாரன், பெர்டோல்ட் பிரெக்டின் வரியை எடுத்தாள்கிறார்: இருண்ட காலத்தில் பாடல் இருக்குமா? இருக்கும். இருண்ட காலங்களைப் பற்றியதாக இருக்கும். சுகுமாரன், தீபச்செல்வனின் கவிதைகளைப் பற்றி சொல்லும்போது, “கவிதைக்கான நாசூக்கு இவற்றில் இல்லை. சொற்களுக்கு மெருகேற்றவோ அனுபவித்துச் செறிவூட்டவோ இந்தக் கவிதைகளில் அவகாசமில்லை. நீண்ட வரிகளில் நெடுந்துயரங்கள் எரிந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கவிதைகள் செப்பனிடப்பட்டவையாக இருக்குமானால் அவை காட்டும் நரகம் அழகியல் பொருளாகவே இருக்கும்” என்கிறார். உண்மைதான், ஆனால் இரு கவிஞர்களுமே தகவல்களை மடித்து மடித்து கவிதையாக ஆக்கித்தரவில்லை. அவர்களின் சூழலுக்கும் வயதுக்கும் நிர்பந்த்த்துக்கும் சற்றே இடம் கொடுப்போனால், நாம் பார்க்கும் பல கவிதை எந்திரன்களைவிட இவர்களது கவிதைகள் பன்னூறு மடங்கு மேல். இருவரின் கவிதைக் களங்களும் போர்க்களங்களே என்பதைப் புரிந்துகொள்ளாமல் இக்கவிதைகளுக்குள் நுழையமுடியாது.

குழந்தைகள்

தோல்வியும் நம்ப மறுத்தமைக்கும் அப்பால், தீபச்செல்வனின் கவிதைகளில் காணும் ஒரு முக்கியக் கருப்பொருளை நாம் பேசவேண்டியிருக்கிறது. யுத்த இலக்கியத்தின் ஏதேனும் ஒரு கூறினை எடுத்து அலசுவதெனில், இதை அலசலாம்.

அது குழந்தைகளைப் பற்றியது. அவரது கவிதைகளில், முள்ளிவாய்க்காலுக்குப் பிந்திய கவிதைகளில், குழந்தைகள் மிக முக்கியமான பங்கை வகிக்கிறார்கள். முள்ளிவாய்க்காலுக்குப் பிந்திய ஈழ ஆதரவு அரசியல்கூட – இன்றுவரை- ஒரு குழந்தையை மையமாக வைத்தே நகர்கிறது.

யுத்தத்தால் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்படும்போது, இதயத்தைத் கீறிச்செல்லும் வேதனையை நீங்கள் அனுபவிப்பது எப்போது என்றால் கிழிபட்ட ஒரு குழந்தையைக் காணும்போதுதான். மிகச் சமீபத்தில் காஸாவில் ஜியோனிசப்படைகளால் கொன்றெறியப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைக் கண்டு நாம் கண்ணீர்வடித்தோம்.

தீபச்செல்வனும் அகரமுதல்வனும் யுத்தத்தின் குழந்தைகள். நிஜமாகவே அவர்கள் யுத்த காலத்தில்தான் பிறந்தார்கள், வளர்ந்தார்கள், அலைந்தார்கள், உயிர்பிழைத்தார்கள், இழந்தார்கள், கவிதைகளையும் எழுதினார்கள். அவர்களது குழந்தமை நம்முடையதைவிட வேறானது.

தீபச்செல்வன் விசேடமாக குழந்தைகளைப் பற்றி கவலைப்பட்டது காரணமில்லாத ஒரு செயல் அல்ல. அவரது அண்ணன் ஒரு விடுதலைப்புலி. அவரது தங்கையும் போரின் உச்சத்தில் புலிப்படையில் சேர்த்துக்கொள்ளப்பட்டவள். போரில் எண்ணற்ற குழந்தைகளின் விதியை தீபச்செல்வன் நேரடியாக பார்த்திருக்கிறார். எனது குழந்தை பயங்கரவாதி என்கிற தலைப்பிலான நூலின் முன்னுரையில் “பதுங்குகுழியில் பிறந்த ஒரு குழந்தை பயங்கரவாதியாகவே பார்க்கப்பட்டு பதுங்குகுழியிலேயே கொல்லப்பட்டு, யுத்தக் கல் சுமந்துகொண்டிருக்கிறது” என்கிறார்.  தனது எல்லாத் தொகுதிகளிலும் குழந்தைகள் பற்றிய கவிதைகள் அதிகமாக இருப்பதை அவரே யோசித்துப்பார்க்கிறார். குழந்தைகளை உண்ணும் பூதங்களை நிஜத்தில் அவர் போர்க்களத்தில் பார்த்தார். இருண்ட யுகத்தில் பிறந்து வளர்ந்த குழந்தைகள் என அவர் அந்தக் குழந்தைகளை வர்ணிக்கிறார்.

குழந்தைகளைப்பற்றி பேசுகையில் இரண்டு குழந்தைகளைப் பற்றி குறிப்பாக பேசவிரும்புகிறேன்.

முதலாவது, பாலச்சந்திரன். பிரபாகரனாலும் எழுப்பமுடியாத தமிழகத்தை எழுப்பியவன். கடைசி பாலகனின் ரத்தம் என்கிற கவிதையில் தீபச்செல்வன் சொல்கிறார்:
அழிக்கப்படும் தேசத்தில் பிறந்த
ஏதுமறியாத பாலகர்களைக் கொன்று
இரத்தத்தை உறிஞ்சிப் பருகும் போர்ப்படைகள்
பூமியின் கடைசிப் பாலகனின்
நெஞ்சில் துப்பாக்கிகளால் துளைகளையிட்டு
இரத்தத்தை உறிஞ்சிக் குடித்தபோது
வீழ்ந்தனர் எல்லாக் குழந்தைகளும்!

இந்த கவிதையை அவர் பாலச்சந்திரன் தவிர வேறு யாருக்குச் சமர்ப்பித்திருக்கமுடியும்?

பாலச்சந்திரன் ஒரு பிரத்யேக பாலகன்தான் என்பதில் சந்தேகமேயில்லை. ஏனென்றால் அவன் பிரபாகரனின் குழந்தை. பிரபாகரனின் மற்றுமிரு பிள்ளைகள் – சார்லஸ் ஆன்டணியும் துவாரகாவும் – வெறுமனே போரில் மடியவில்லை, போரிட்டு மடிந்தார்கள். பாலச்சந்திரன் போருக்குப்பின் மடிந்தான். பிரபாகரனின் குழந்தை என்கிற ஒரே காரணத்தால்.

இந்த தருணத்தில் எனக்கு ஒரு புறநானூற்றுப் பாடல் நினைவுக்கு வருகிறது. போருக்கும் குழந்தைக்குமான தொடர்பு – அதுவும் தோற்கடிக்கப்பட்ட ஒரு தலைவனின் குழந்தைக்கும் வெற்றிபெற்ற மன்னனுக்கும் இடையிலான தொடர்பைப் பற்றியது அது. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை நோக்கி கோவூர் கிழார் பாடிய பாடல் அது. மலையமான் தோற்கடிக்கப்பட்டான். வெற்றிபெற்ற கிள்ளிவளவன் மலைமானின் குழந்தைகளை யானையின் காலால் சிதைத்துக் கொல்லும்படி ஏற்பாடு செய்கிறான். கோவூர் கிழார் அதைக் கண்டு பதறுகிறார்.

நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை;
இவரே, புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித்,
தமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்!
களிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த
புன்றலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி,
விருந்திற் புன்கண்நோ வுடையர்;
கெட்டனை யாயின், நீ வேட்டது செய்ம்மே!

ராஜபட்சேவின் படைகள் பாலச்சந்திரனை மேலிடத்தின் உத்தரவுகளின்று கொன்றிருக்கமுடியாது.

தீபச்செல்வனின் கவிதைகளைப் படிக்கையில் வேறு ஒரு குழந்தை பற்றியும் நாம் அறிந்துகொள்கிறோம். அது இந்தப் போரின், விடுதலை யுத்தத்தின், யுத்த தர்மத்தின் வேறு ஒரு முகத்தை நமக்குக் காட்டுகிறது. இது போன்ற தர்மசங்கடத்தை தீபச்செல்வனைப் போல வேறு யாரால் எதிர்கொண்டிருக்கமுடியும் என்ற கேள்வி எழாமல் இல்லை.
நான் பேச விரும்பிய அந்த இரண்டாவது குழந்தை தீபச்செல்வனின் தங்கை.

தீபச்செல்வனின் அண்ணன் ஏற்கனவே புலிப்படையில் சேர்ந்து போராடி மாவீரராக ஆனவர். கிளிநொச்சியில் தீபச்செல்வன் ஒரு படைப்பாளியாக இருக்கிறார். அப்போது, போரின் இறுதிக்காலத்தில் தீபச்செல்வனின் தங்கை புலிகளால் படையில் சேர்க்கப்படுகிறார். இந்த நிர்க்கதியை, எதிர்பாராத அதிர்ச்சியை விடுதலைக்காகவே பாடும் ஒரு கவிஞன் எப்படி எதிர்கொண்டான்?

என்ன செய்யமுடியும் தீபச்செல்வனால்?  மேலுமொரு கவிதையை எழுதுவதைவிட. 2009 ஏப்ரல் மாதத்தில், அவரது தங்கை வேங்கனியை புலிகள் இயக்கத்தில் இணைத்த தருணத்தில், தீபச்செல்வன் எழுதுகிறார்:


விளையாடுகிற முத்தமற்று
சைக்கிளில் திரிகிற ஒழுங்கையற்று
வாழ்வை யுத்தம் ஒடுக்கியிருக்க
உன்னை களம் கொண்டுபோயிற்று.
திணிக்கப்பட்டிருக்கிற துவக்கு
உன்னைத்தான் தின்றுகொண்டிருக்கிறது.

அண்ணாவின் கல்லறைதான்
ஒரே சொத்தென இருந்தது.
அண்ணாவின் கனவு கலைக்கப்பட்டிருக்க
கல்லறையும் தகர்ந்துபோயிற்று.
இப்போது வீடு இல்லை
எங்களில் யாரும் வாழ்வதற்கு.
அண்ணாவைப் போலத்தான்
அவனின் கனவைப் போலத்தான்
அலைந்துகொண்டிருக்கிறோம்.

எல்லாவற்றையும் இழந்து
அலைந்து ஒடுங்கியிருக்கிற
அச்சமூட்டுகிற இராத்திரிகளில்
பொத்தி வைத்திருந்த
உன்னை இழுத்துச் செல்லப்படுகிற
எங்கள் விதியை என்ன செய்வது?
..

இப்படி ஒரு கவிதையும்
இப்படி அச்சம் தருகிற இராத்திரியும்
ஏன் என்னை நெருங்கின.
கடைசியில் பொய்த்துப்போய்க்கிடக்கிறது
எனது சொற்கள்.
இனிக் குழந்தைகள் போரிடுகிற களம் பற்றி
நான் ஒரு பரணியெழுதுகிறேன்?


யார் உன்னை இழுத்துச்சென்றனர்?
அண்ணாவைப் போல அவர்கள் இருந்தனர்.
அண்ணா நமது தேசத்தைப் போலவே
உன்னையும் மிகவும் நேசித்திருந்தான்.
*
இப்போது நமது நகரமும் இல்லை.
வாழ்வுமில்லை.
எதுவுமற்ற நாமும் இல்லை.
எனினும் நீ வேண்டும்.
அவியாத கொஞ்ச சோற்றையும்
தண்ணீரில் அவித்த பருப்பையும் தின்பதற்கு.

விரைவாக வந்துவிடு
நாம் மேலும் நிலம் பெயர்ந்தலைவோம்.
(நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு . ஆ.ந.தி.மி)

தீபச்செல்வனின் கனவு, தமிழ் ஈழம். அவர் இன்றும் அதற்காகவே வாழ்கிறார். அண்ணன் துவக்கையும் தம்பி பேனாவையும் எடுத்தார்கள். அந்தக் குடும்பத்தில் யுத்தம் முடியும் இறுதிநாள்களில் பெரும்சோகம் வருகிறது. அவரது தங்கையை புலிகள் இணைக்கின்றார்கள். எவ்வளவு ஒரு தர்மசங்கடம்?

ஆனால், அந்த அன்பான அண்ணன் அதையெல்லாம் ஒரு யுத்த பின்னணியில் வைத்தே புரிந்துகொண்டிருக்கிறார் என்பதுதான் ஆச்சரியமானதொரு உண்மை.

ஒரு மாபெரும் உலகளாவிய சதிக்கு தாங்கள் இரையாகியிருக்கிறோம் என்பதை இந்த கவிஞனால் தரிசிக்கமுடிந்தது. அதனால்தான் தமிழகத்தில் நாம் பார்த்த நூற்றுக்கணக்கான அறிவு ஜீவிகளுக்கும் படைப்பாளர்களுக்கும் வாய்த்திராத தரிசனம் அவருக்கு வாய்த்திருந்தது. தீபச்செல்வனின் கவிதைகளின் உண்மை என்பது அவரது தங்கை விவகாரத்தை அவர் எதிர்கொண்ட விதம் என்றே நான் கூறிவேன்.

விதிதான் போராளிகளின் அத்தகைய முடிவுகளுக்கு காரணம் என தீபச்செல்வன் என்கிற கவிஞன் கூறுகிறான். இன்னொரு புறம் அதே தீபச்செல்வன் என்கிற அரசியல்செயல்பாட்டாளன் அவற்றுக்கான காரணங்களை அடுக்குகிறான். நம்மூர் நடமாடும் புத்தக அலமாரிகளில் புரிந்துகொள்ளமுடியாத விஷயம் அது.

பயங்கரவாதிகளும் பதுங்குகுழிகளும் என்கிற கவிதையில் பெருங்கனவைச் சிதைத்த உலக யதார்த்தத்தை தீபச்செல்வன் வர்ணிக்கிறார்.

சனங்கள் நிறைந்த எனது கிராமத்தின் மேலாக
வேக விமானம் ஒன்றை
உக்கிரேன் விமானி ஓட்டுகிறான்...
பயங்கரவாதிகளுக்குள்
பதுங்குகுழிகள் பதுங்குகின்றன.

குழந்தைகள் தாய்மார்கள் முதியவர்கள்
எல்லாம் பயங்கரவாதிகள்
என ஐநா அறிவித்தது.
நான் பயங்கரவாதி என்பதை
உரத்துச் சொல்கிறேன்.

என்னை அமெரிக்காவின் நேர்மை
தேடிவருகிறது.
ஐநா படைகளும்
அமெரிக்கப்படைகளும்
இந்தியப் படைகளும்
இலங்கைப் படைகளைப் போல
எனது தெருவுக்குள் வர
ஆசைப்படுகிறார்கள்.

*
இரணைமடுக்குளத்தில்
குருதி நிரம்பிய பிணங்கள் சேர்ந்தன
நோர்வேயின் படகு மிதக்கிறது.

இந்தியாவும் பாகிஸ்தானும்
ஆயுதங்கள் பெருக
எனது ஊரின் நடுவில்
போரிட்டுக்கொண்டிருக்கின்றன.

உலைப்பானைகளும்
அடுப்புகளும் சிதைய
எனது மனைவி நசிந்துக்கிடந்தாள்.

எனது வீதியை ஜப்பான்
சுருட்டி எடுத்தது.
அமெரிக்காவும் ஐநாவும்
எனது குழந்தையை பள்ளியோடு
கொன்றுவிட்டது.
பிரித்தானியாவின்
சிறையில் நானிருந்தேன்.

ஒரு மாம்பழத்தைத் தின்பதற்கு
எல்லோரும் அடிபட்டு
எனது காணியைச் சிதைத்தார்கள்.
கத்திகளை இன்னும் கூர்மையாக்கி வருகிறார்கள்.

இநதியாவும் அமெரிக்காவும்
எனது தலையில்
காலூன்ற அடிபடுகிறது.
சீனாவும் ரசியாவும்
எனதூர் ஆலயத்தின்
கூரைகளைப் பிய்த்துப்போட்டது.

நான் முதலில் அமெரிக்காவுக்கு
பதில் சொல்லவேண்டும்.
*
அமெரிக்கா இரணைமடுவுக்கு
ஆசைப்படுகிறது.

இந்த கவிதை 2008 ஜனவரிலேயே எழுதப்பட்ட ஒன்று. ஆனால் யுத்தம் முடிந்து பல ஆண்டுகளான பிறகும் இந்த உண்மையை உணராதவர்களாக இருப்பவர்கள் வெகுபலர்.

இந்த உண்மையைத் தெரிந்திருக்கும் தீபச்செல்வன் தனது சோகத்தினும் சமூகத்தின் துயரத்தை முன்னிலைப் படுத்தினார் என்பதுதான் மிக முக்கியமான சேதியாகும். அவர் தனது தங்கைக்கு நேர்ந்த விதியை நொந்துகொள்கிறார். ஆனால் கருணாக்களுடனும் கேபிகளுடனும் அவர் சேர்ந்துகொள்ளவில்லை.
ஏன்?

அவரே சொல்கிறார்: “ இன்னும் கொல்லப்படாதக் குழந்தைகள் போராடியாகவேண்டும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர். நாங்கள் அழித்து முடிக்கப் படாதவர்களாகவும் அழிக்க முடியாதவர்களும் இருப்பதனாலும் வாழ விரும்புவதாலும் இன அழிப்புக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டே வாழ்வை மீட்க நிர்பந்திக்கப்பட்டிருக்கிறோம்” என்கிறார் அவர். (எ.கு.ப, முன்னுரையில்).

அதனால்தான் தனது குழந்தையை வருங்கால பயங்கரவாதியாக அவரால் சித்தரிக்கமுடிகிறது. எனது குழந்தை பயங்கரவாதி என்கிற தலைப்பிலான கவிதையிலிருந்து:
எமது பெண்கள் எவரையும்
கற்பழித்துக்கொல்லவில்லை எனவும்
இளைஞர்கள் எவரையும்
நிர்வாணப்படுத்தி பிடரிகளில் சுடவில்லை எனவும்
அவன் சொல்லும்பொழுது,

எனது நிலத்தில் குருதி
எப்படிக் கொட்டியதென
நான் கேட்கவில்லை.

யாரையும் கொல்லவில்லை எனவும்
கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் எனவும்
அவன் சொல்லும்போது
நான் சொன்னேன்
எனது குழந்தை ஒரு பயங்கரவாதியென.

*
போரும் குழந்தைகளும் பிரிபடாத துயரங்கள். வன்னியில் யுத்த நெருக்கடியில் உயிர்த்தப்பி, விதி தப்பி ஓடும் முயற்சியில்  இருந்தபோதும், தீபச்செல்வன் எங்கோ ஒரு இடத்தில் தங்களுடையதைப் போலவே குழந்தைகள் கொல்லப்படுவது குறித்தசெய்தியைக் கேட்கிறார்.

காஸா எல்லைகளில்
இலங்கைப் படைகள் மோத வருகிறது
கிளிநொச்சியை இஸ்ரேல் படைகள்
முற்றுகையிடுகிறது

குழந்தைகள் என்ன செய்தார்கள்?
-  
இந்த வரிகளை அவர் எழுதியது, 2009 இன் புத்தாண்டு தினத்தன்று. அப்போது இப்போது போலவே காஸாவின் மீதான இஸ்ரேலியத் தாக்குதலில் ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். பெரும்பாலும் குழந்தைகள். கிளிநொச்சியும் காஸாவும் ஒன்றேயாகின்றன. ஏனெனில் இஸ்ரேலும் இலங்கையும் ஒன்றேதான். அமெரிக்கா இரு இடங்களிலும் ஒன்றேதான்.

இறுதியாக, தொடங்கிய இடத்துக்கே நான் வருகிறேன். தோல்வி அடைந்திருக்கிறோம், படைகள் சின்னா பின்னாமாகிவிட்டன, துரோகத்தின் காரணமாகவே பகை வென்றது, பகைமையின் பெரும்சக்திகாரணமாகவே துரோகங்களும் அதிகரித்தன. இறுதியில் தலைவனும் மாண்டான். போரின் அறங்களை மீறியதாக எழுந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அவன் மரணத்தின் மூலம் விடை தந்து பாவங்களை கழுவியவனாக வெளியேறுகிறான்.

இனப்படுகொலை செய்தவனை விட்டுவிட்டு போராடியவன் மீது பாய்கிறது சர்வதேச அறிவுப்படை. செப்டம்பர் 11 க்கு உலகம் மாறிவிட்டது, நீ ஏன் மாறவில்லை எனக் கேட்கிறது ராணுவ வியூக புத்தி. எல்லா வல்லரசுகளும் எதிர்த்து நிற்கையில் உன்னிடம் என்ன வியூகம் இருந்தது என்று கேட்கிறது ராஜதந்திர புத்தி. அன்று நீ செய்த தவறுகளால் இன்று நீ அழிகிறாய் என்று கெக்கலிக்கிறது அறிவற்ற ஒரு கும்பல்.  

சரி. இனி என்ன ஆகும் அறம்?  
அறம் மீண்டெழ வேண்டுமென்றால், நம்பிக்கை மீண்டெழ வேண்டும்.  அந்த நம்பிக்கை மீண்டெழுகிறது என்பதுதான் இன்றைய நற்செய்தி.

ஒரு போராடும் சமூகம் மிகச்சிறந்த வெற்றியைப் பெறமுடியும். ஆனால் மிகச்சிறந்த தோல்வியைப் பெறமுடியுமா? அதைத்தான் தமிமீழம் பெற்றது. இந்த உலகமே சேர்ந்து ஒரு சின்னஞ்சிறு தேசத்தை வீழ்த்தின. வல்லாதிக்கவாதிகள் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை ஒன்றை ஏவி ஒரு சிட்டுக்குருவியை வீழ்த்தினார்கள்.

வியூகார்த்த ரீதியில் சொல்கிறேன், தமிழர்கள் அடைந்த தோல்வி மிகச்சிறந்த தோல்விதான். மிகவும் வெற்றிகரமானதொரு தோல்வி என்றும் சொல்லலாம். அதற்கு முன்பு புலிகள் பெற்ற நூற்றுக்கணக்கான வெற்றிகளால் சாத்தியப்படாத பல விஷயங்கள் இறுதித் தோல்வியில் சாத்தியமாயின. நாம் battle களில் வென்றோம், war ஐ இழந்தோம் என்றுதானே எண்ணுகிறீர்கள்? இல்லை. நாம் போரில் இழக்கவில்லை. மிகச்சிறந்த பலனளிக்கக்கூடிய ஒரு தோல்வியைப் பெற்றிருக்றோம்.

ஏனென்றால் அந்தத் தோல்வி முதன்முறையாக ஈழப்பிரச்சனையை சர்வதேச பிரச்சினையாக மாற்றியிருக்கிறது. அது தற்போதைக்கு நம்மால் சமாளிக்க முடியாத ஒன்றுதான். ஆனால் நெடுநோக்கில் நம்மால் கையாளக்கூடிய ஒன்றுமாக இருக்கமுடியும். ஏனென்றால், அந்த இனப்படுகொலை தமிழ் ஈழத்துக்கென நாம் இதுகாறும் முன்வைத்த நியாயப்பாடுகளிலேயே மிகப்பெரிய நியாயப்பாடாக இருக்கிறது.

யுத்த்த்தின் நாட்களில் தமிழ்கூறு நல்லுலகம் மீண்டும் தன்னைக் கண்டடைந்தது.
சேரன் எழுதினார்:
ஒரு தலைமுறைக்கு முன்
நாடு கடந்தார்கள்.
அடுத்த தலைமுறை மெல்ல மெல்ல மொழி இழக்கும்
தருணத்தில்
தீராப்பெருவலி எழுந்து எம்மை இணைக்கிறது.
பனி உதிர்ந்து காற்றுறையும் இரவுப் பெரும்பொழுதிலும்
சினத்துடன் எழுந்து தெருவை நிறைத்த
பல்லாயிரம் மக்களிடையே
குரல் வற்றிய ஒரு பெண்ணைக் கண்டேன்

இது உண்மைதான். புலம்பெயர் சமூகம் பன்னாட்டு அதிகாரங்கள் நிலவிய நகரங்களில் கொதித்தெழுந்தது.

முதலில் கையறு நிலையில் இருந்த தமிழகம், மெல்ல மெல்ல விழித்துக்கொண்டது. இந்திய தேசியத்தை நோக்கி சாதாரண தமிழன் தமிழ் வீதியில் கேள்வி எழுப்பினான். முக்கால் நூற்றாண்டு கால திராவிட அரசியலின் பொருத்தப்பாட்டை 2013 இல் மாணவர்கள் முடிவுக்குவந்தார்கள். முத்துக்குமரனும் செங்கொடியும் புதிய தியாகிகளாக ஆனார்கள். தமிழ்த்தேசியம் அரசியலின் மையத்தை நோக்கி நகர்ந்தது.

தோல்வியின் அதிர்ச்சியில் உறைந்திருந்த ஈழ சமூகமும் மெல்ல மெல்ல விழிப்புணர் நிலைக்குத் திரும்பிவருகிறது. அவர்களது சகோதர இனமான முஸ்லீம் சமூகம் கிழக்கிலங்கையில் கடந்த காலத்தை மறந்து தமிழரோடு நாளை கோர்க்கவும்கூடும். அதை பொதுபல சேனா சாத்தியப்படுத்தவும்கூடும்.

அறம் வெல்லும், அஞ்சற்க என இந்தத் தருணத்தில் கூறுகிறார் அகரமுதல்வன்.

நம்மை தோற்கடித்தவை பல. அகரமுதல்வன் அவற்றில் முக்கியமானதொன்றை முன்மொழிகிறார்: ராஜதந்திரம். அது இப்போதைக்குத் தெரிகிறது. “முன்பு ஒருபோதும் கேட்காத ஏங்கொலி”யை அவர் கேட்கிறார். தேசம் விடுவிக்கப்படவில்லை, கனவு தீர்க்கப்படவில்லை. ஆனால் தோல்வி மட்டும் சாத்தியமாகியிருக்கிறது. நாம் தோற்றதோ ராஜதந்திர களத்தில்.

தசாப்தங்களின் இருளகற்றிய
பேரொளியின் மூச்சை
அவ்வளவு எளிதாக அழிக்கமுடிந்திருக்கிறது.
தோல்வியை ஒப்புக்கொண்டு
வெற்றியின் அருகில் செல்ல
பிரபஞ்சத் தந்திரங்களை
கையாளும் வல்லமை வந்து சேர்
என்னிடத்தில்
என்கிறார் அகர முதல்வன். சர்வதேச சமூகத்தை அவர் பிரபஞ்ச சனியன் என விளாசுகிறார்.

தோல்வியிலிருந்து வெற்றியை நோக்கியப் பயணம் சாத்தியமாகும்போது, தீபச்செல்வன் தன் குழந்தையை மீண்டும் “பயங்கரவாதியாக” ஆக்கத் துணிந்துவிடுகிறபோது, நம்ப மறுக்கும் மனங்களில் நம்பிக்கை மீண்டும் துளிர்விடவே செய்யும்.
*
தொடக்கத்தில் நாயகனின் மரணத்தை நம்ப இயலாத நம் சோகத்தை இயலாமையை பலவீனத்தைப் பற்றி பேசினேன். ஆனால் அதை வேறு விதமாகவும் நாம் பார்க்க இயலுமானால், மனிதர்களின் வாழ்க்கை, கவிதை போல புனைவுகளால் நிரம்பியது என்பதை உணரமுடியும்.

இந்த தருணத்தில்தான், நம்ப மறுத்தலின் நிஜத்தைவிட நம்ப விரும்புவதன் புனைவை நாம் விழைவோம். புகழ்பெற்ற ரஷ்ய கவிஞன் கான்ஸ்தாந்தின் சிமனோவின் எனக்காகக் காத்திரு என்றொரு கவிதையை நான் அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன். அது ஒரு யுத்த கவிதை, அது ஒரு காதல் கவிதை. அது நம்பிக்கையின் கவிதை.

இரண்டாம் உலகப் போரின்போது ஒரு போர்வீரன் யுத்தத்துக்கு செல்கிறான். நான் திரும்பிவிடுவேன் நீ எனக்காகக் காத்துக்கொண்டிரு என தன் மனைவி அல்லது காதலியிடம் சொல்வதாக இந்தக் கவிதை அமைந்திருக்கிறது. 1941ல் பிரபல சோவியத் கவிஞரும் போர் நிருபருமான கான்ஸ்தாந்தின் சிமனோவ் இந்தக் கவிதையைப் படைத்தார். தன் வருங்கால மனைவி வாலண்டினா செரோனாவுக்கு அவர் இதை எழுதினார். 1942ல் இதை பிராவ்தா நாளிதழ் வெளியிட்டபோது, லட்சக்கணக்கானவர்களை இது ஈர்த்தது. உடனடியாக அது புகழ்பெற்றுவிட்டது. சோவியத் ராணுவ வீரர்கள் இந்தக் கவிதையை எப்போதும் தங்களிடம் வைத்திருந்தார்கள். சண்டையின்போது, பதுங்குகுழிகளில் இருந்தபோது, முன்னேறும்போது, தப்பியோடும்போது, சாவிடமிருந்து மயிரிழையில் தப்பித்தபோது, சாவிடம் உறவாடியபோது என எல்லா தருணங்களிலும் இக்கவிதையின் பிரதி அவர்களிடமிருந்தது. போரில் இறந்துபோனவர்களின் சட்டை பைகளில் இது காணப்பட்டது. அவர்கள் இந்த கவிதையை தங்கள் மனைவியருக்கும் காதலியர்க்கும் எழுதி அனுப்பினார்கள். இன்றும், உலகப்போருக்குப் பின்னும் போர்முனைகளில் இருக்கும் ராணுவ வீரர்களின் மனங்களை இந்த கவிதை ஆக்ரமித்துக்கொண்டுதான் இருக்கிறது.

எனக்காக காத்துக்கொண்டிரு
 வாலெண்டினா செரோவாவுக்கு..
எனக்காக காத்துக்கொண்டிரு.
நான் நிச்சயம் திரும்பிவருவேன்.
காத்துக்கொண்டிரு,
ஓ, நீ உன் எல்லா பலமும் திரட்டி
காத்துக்கொண்டிரு. எனக்காக காத்துக்கொண்டிரு.
பெய்யும் மழையில்,
மஞ்சள் வெயிலில்
உன் இதயம் சோகமுறும்போதும்
காத்துக்கொண்டிரு.
பொழிந்த பனியை காற்றுக் குவிக்கும்போதும்
காத்துக்கொண்டிரு.
வளிமண்டலம் வறண்டு சுடும்போதும்
காத்துக்கொண்டிரு.
விரைவில் மறக்கப்படப்போகிறவர்களை
மறக்கும்பொருட்டு மற்றவர்கள்
காத்துக்கொண்டிருக்காத போதும்
நீ காத்துக்கொண்டிரு.
கடிதங்கள் வராமல் நின்ற பிறகும்
நீ காத்துக்கொண்டிரு.
அச்சமுற்ற நிலையிலும் விரக்தியுற்றநிலையிலும்கூட
காத்துக்கொண்டிரு.
உன்னோடு சேர்ந்து காத்துக்கொண்டிருந்தவர்கள்
தங்கள் காத்திருப்புக்கு
ஒரு முடிவுகட்டிய பின்பும்
நீ காத்திருக்கொண்டிரு.
எனக்காகக் காத்துக்கொண்டிரு.
நான் நிச்சயம் திரும்பவருவேன்.
மேலும் மேலும் துயர்ப்படவேண்டாம்,
காத்திருப்பை நிறுத்திக்கொள்வதற்கான
தருணம் இதுவேயென
இதயம் சொன்னாலும்
அதை ஏற்காதே, காத்துக்கொண்டிரு.
எனக்காகக் காத்திருந்த
என் அம்மாவும் என் மகனும்
என் கதை முடிந்துபோயிற்று
|ன்றே நம்பத்தொடங்கினால், நம்பிக்கொள்ளட்டும்.
ஆனால் நீ காத்துக்கொண்டிரு.

காத்திருந்து களைத்துப்போன
எனது நண்பர்கள்
அவநம்பிக்கைப் பாழ்நிலத்தில்
கணப்பின் அருகில் அமரட்டும்.
நண்பர்கள் எப்போதும் இப்படித்தான் செய்வார்கள்,
கடுக்கும் மதுவில் என் நினைவுகளை
தோய்த்து சுவைப்பார்கள்.
அவர்கள் அவ்வாறு குடிக்கும்போதுகூட,
நீ காத்துக்கொண்டிரு,
ஆனால் உனக்கென ஊற்றிக்கொள்ள
உன் குவளையை உயர்த்தாதே.
எனக்காகக் காத்துக்கொண்டிரு.
நான் நிச்சயம் திரும்பவருவேன்.
மனிதர் உறும் மரணங்கள் எல்லாம்
தப்பித்து நான் வருவேன்,
காத்திருப்பைக் கைவிட்ட

அவர்கள் பின் சொல்வார்கள்:
“என்ன ஒரு அதிர்ஷ்டம்!”..
- அது பொய்.
அவர்களுக்குத் தெரியாது, என் அன்பே,
துப்பாக்கிச்சூடுகளுக்கிடையில்
நான் எப்படி பத்திரமாக இருந்தேன் என.
நீ காத்துக்கொண்டிருக்கையில்
நீ என்னை பாதுகாத்துக்கொண்டிருக்கிறாய்.
விதியின் நிர்பந்தத்திலிருந்து
நான் எப்படி தப்பித்தேன் என்றால்
வேறு யாருமில்லை, நீதான் காரணம்.
ஏனெனில் வேறு எவரையும்விட,
காத்திருத்தல் எவ்வாறானதென
நீ மட்டுமே அறிவாய்.
 
செ.ச.செந்தில்நாதன்
பொதுச்செயலர், மக்கள் இணையம்
zsenthil@gmail.com

Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்