Posts

Showing posts from November, 2014

இரத்தத்தின் விழித்தெழல்

Image
தப்புவித்த எங்களிடத்தில் புதியபாடலொன்று கம்பீரமாய் அமர்ந்திருப்பதை காயத்தின் தழும்புகளுக்குள்ளிருக்கும்  சிவந்த தீவு அறியும் கொடுஞ் சேனைகளின் அஸ்தமனத்தை பிரவேசிக்காத சொந்தக்கூடாரங்களில் அந்திப்பலியாக்கி வேட்டையாட இருதயம் சிறகடிக்கிறது புரளும் வனவெள்ளம்  சேதமாக்கப்பட்ட கல்லறைகளின் தொண்டையில் நீந்த விதைகள் நனைக்கும் வசந்தமறிகிறேன் மல்லாந்து கிடந்த மரணத்தில் சிதைந்த தம்முடலைத் தேடிக்களைத்த முகங்களில் மேல்காற்று மிதக்கிறது ஒடுக்கத்தில் பாம்பைப் போல நெளிந்து பிணங்களின் துர்நாற்றத்தில் கொதிக்கத்தொடங்கும் ஆழ்கடலில் களிப்புண்டாக்கும் விடியற்காலை மெல்ல அசைந்து நெஞ்சினை திறக்கிறது இனிமேலுமென்ன யுத்தத்தில் சூரியனைக் காண்போம். -அகரமுதல்வன் 27.11.2014

பிரிந்து கிடப்பதால் மக்களுக்கான எந்தவொரு அரசியலையும் செய்து விட முடியாது– சு .அகரமுதல்வன்

சு .அகரமுதல்வன் சமகால இளம் ஈழக் கவிஞராக மட்டுமன்றி பெரும் இனப்படுகொலைக்கு பிறகான காலத்தை வடிக்கும் படைப்பாளியாகவே என்னுள் அடையாளப்படுகிறார். கவிதைகளை விட மேலாக இவர் நந்திக்கடல் கடந்து வந்த நினைவுகள் ஆழப் பதிந்துள்ளது. மே 2009 இறுதிக்கட்டத்தின் கொடூர நாட்களை கடந்து வந்தவர்களில் இவரும் ஒருவர்.    இவரின் அத்தருணத்தில் பகைவீழ்த்தி , அறம் வெல்லும் அஞ்சற்க கவிதைத்தொகுப்புகள்,போர் நிலத்தின் இலக்கியம் அடக்குமுறை அரசியலின் வேர்களில் எழுகிறது என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறது. இந்த நினைவோடு அவரிடம் சில கேள்விகள். - ஊடகவியலாளர் மகா. தமிழ்ப் பிரபாகரன் மனிதத் தன்மையற்ற ஓர் பெரும் போரை கடந்து வந்தவராய் உள்ளநீங்கள் , வன்னியின் நிலைமையை இன்று எப்படி உணர்கிறீர்கள் ? மனிதத் தன்மையற்ற போர் என்று சொல்வதை விட போர்த் தன்மையற்ற போர் என்று சொல்வது தான் சரியாக இருக்கும், போர் நடந்த காலத்தில் சாவினால் வழிநடத்தப்பட்ட வன்னிச் சனங்கள் இன்று பல்வேறு அடக்குமுறைகளையும் இராணுவத்தின் அதிகார பலாத்காரங்களையும் எதிர்நோக்கி வாழவேண்டியவர்களாக திக்கற்று நிற்கிறார்கள். வன்னி என்பதை சிங்கள இனவாத அரசின் அத