பிரிந்து கிடப்பதால் மக்களுக்கான எந்தவொரு அரசியலையும் செய்து விட முடியாது– சு .அகரமுதல்வன்



சு .அகரமுதல்வன் சமகால இளம் ஈழக் கவிஞராக மட்டுமன்றி பெரும் இனப்படுகொலைக்கு பிறகான காலத்தை வடிக்கும் படைப்பாளியாகவே என்னுள் அடையாளப்படுகிறார். கவிதைகளை விட மேலாக இவர் நந்திக்கடல் கடந்து வந்த நினைவுகள் ஆழப் பதிந்துள்ளது. மே 2009 இறுதிக்கட்டத்தின் கொடூர நாட்களை கடந்து வந்தவர்களில் இவரும் ஒருவர்.  இவரின் அத்தருணத்தில் பகைவீழ்த்தி , அறம் வெல்லும் அஞ்சற்க கவிதைத்தொகுப்புகள்,போர் நிலத்தின் இலக்கியம் அடக்குமுறை அரசியலின் வேர்களில் எழுகிறது என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறது. இந்த நினைவோடு அவரிடம் சில கேள்விகள். - ஊடகவியலாளர் மகா. தமிழ்ப் பிரபாகரன்



மனிதத் தன்மையற்ற ஓர் பெரும் போரை கடந்து வந்தவராய் உள்ளநீங்கள் , வன்னியின் நிலைமையை இன்று எப்படி உணர்கிறீர்கள் ?


மனிதத் தன்மையற்ற போர் என்று சொல்வதை விட போர்த் தன்மையற்ற போர் என்று சொல்வது தான் சரியாக இருக்கும், போர் நடந்த காலத்தில் சாவினால் வழிநடத்தப்பட்ட வன்னிச் சனங்கள் இன்று பல்வேறு அடக்குமுறைகளையும் இராணுவத்தின் அதிகார பலாத்காரங்களையும் எதிர்நோக்கி வாழவேண்டியவர்களாக திக்கற்று நிற்கிறார்கள். வன்னி என்பதை சிங்கள இனவாத அரசின் அதிகார துஸ்பிரயோகங்கள் நிகழ்ந்தபடியிருக்கும் ஒரு நிலத்தின் அடையாமளாக தெரிந்து கொள்ளலாம் மேலும் சொல்லப்போனால் இனப்படுகொலையின் பின்னரான வன்னி இன்னுமொரு தடவை இனப்படுகொலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது.




வன்னிப் போரின் இறுதிக்கட்டத்திலேயே சாதிய ஏற்றத்தாழ்வுகள் மேலோங்கத் தொடங்கிவிட்டன என்ற கருத்து உள்ளது, அது இன்றைய சூழலில் எவ்வாறு உள்ளது?

இந்தக் கூற்று மிகவும் அபத்தமானது, மரணம் வழிநடத்திச் சென்ற மக்களின் வாழ்வில் சாதி மேலோங்கியது என்கிற கருத்தே அருவருப்புமிக்கது. வன்னிப் போரின் இறுதிக்கட்டத்தில் மேலோங்கத்தொடங்கியது அவலமும் கோரங்களுமே தவிர சாதி அல்ல. அடிப்படையில் தமிழீழச் சமூகத்திடம் பெருத்து நின்ற சாதிய விகாரங்களை எல்லாம் அழித்தொழித்தது இனவிடுதலை என்கிற தமிழர்களின் ஒன்றுபட்ட பயணம். குறிப்பாக ஆயுதம் ஏந்திய விடுதலை அமைப்புக்களின் வருகைக்கு பின்னர் தமிழீழச் சமூகத்தின் சாதிய ஏற்றத்தாழ்வுகள் முனை மழுங்கத்தொடங்கியது தான் வரலாறு. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாதிரி அரசு நிகழ்ந்த வன்னிப்பெரு நிலப்பரப்பில் எல்லோரும் தமிழர்கள் என்கிற ஒற்றை அடையாளத்தோடு தான் இருந்தார்களே தவிர அங்கு சாதி முளைவிடுவதற்கு வாய்ப்பிருக்கவில்லை. இனவிடுதலை வேண்டி செருக்களத்தில் நின்று போராடிய தலைமுறையிடம் சாதிய உணர்வுகள் ஒரு பொழுதும் இருக்கவில்லை, எனது அண்ணன் களத்தில் விழுப்புண் பட்டு வீழ்ந்த போது அவனை தூக்கியவர்களை போராளிகள் என்று தான் சொல்லிக்கொள்வேனே தவிர என்ன சாதி என்று இழிகுணத்தோடு அவர்களை வினவ மாட்டேன். தமிழீழ விடுதலைப் புலிகளையும் அவர்களின் சமூக சீர்த்திருத்தங்களையும் தன் அகத்திலும் புறத்திலும் என்றுமே கொண்டிருக்கும் வன்னி எப்போதோ சமூக விடுதலையை அடைந்த மண் சாதி என்கிற சொல்லைக் கூட சொல்லுவதற்கு அருவருப்பபடைகிற மானுட நிலம். யாழ்ப்பாணம் என்பது தான் இன்னுமே சாதிய கட்டமைப்புக்களோடும், பெண்ணடிமைத்தனங்களோடும், சைவத்தின் அதிகாரத்தோடும் இயங்கிக்கொண்டிருக்கிறது அதுவும் புலிகளுக்கு பிறகான இன்றைய காலம் என்பது சொல்லி மாளாத சமூக பின்னடவை மிகத் துணிச்சலாக யாழ்ப்பாண உயர் சாதிச் சமூகத்தினர் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர் என்பது தான் இன்றைய நிலவரமும் எனது கவலையும்.


இனப்படுகொலையை எண்ணமாக கொண்டு 2009 போரை இலங்கை அரசு மேற்கொண்டிருந்தாலும் , இதற்கு பின்னே தமிழீழத்தை வியாபார நிலமாக்கி கொள்ள வேண்டும் என்ற நோக்கமும் இருந்ததாக எண்ணுகிறீர்களா ?


ஓம் அதில் எந்த அய்யமுமில்லை , அந்த எண்ணம்மட்டுமில்லாது இருந்திருந்தால் இவ்வாறான ஒரு இனப்படுகொலையை நிகழ்த்துவதற்கு இவ்வளவு ஆதரவு கிடைத்திருக்காது. கொழும்பின் அதிகார வர்க்கத்தின் மூளையில் நெடுநீண்ட காலமாக உருத்திரண்ட தமிழர் நிலங்களை வியாபாரமாக்கும் திட்டத்திற்கு தான் கிழக்கில் உதயம் ,வடக்கில் வசந்தம் என பெயர் சூட்டப்பட்டது. தமிழர்களின் அனைத்து விதமான வளங்களையும் சுரண்டி அவர்களை நாதியற்றவர்களாக ஆக்கிவிட வேண்டும் என்கிற சிங்கள இனவாதத்தின் திட்டமிடலில் முன்னுரிமையாக இந்தத் நோக்கம் இருப்பது என்பது ஆச்சரியம் இல்லை. இந்த திட்டத்தின் ஊடாகவே  சமாதான காலத்தில் இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க பெரும் வல்லரசு நாடுகளை இனப்படுகொலை யுத்தத்திற்கு ஆதரவாக ஒன்று திரட்ட முடிந்து என்பதும் முக்கியமானது.


ஈழத்துக்கு அரவணைப்பு சக்தியாக தமிழக மக்களிடம் ஈழப்போர் இலக்கியங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா ?

இல்லை என்று உண்மையைச் சொல்லி தோல்வியை சுட்டிக்காட்ட விரும்புகிறேன், தமிழ்நாடு தமிழீழ மக்களுக்கு அரவணைப்பு சக்தியாக என்றுமே விளங்கி வந்தாலும் அது இனம் சார்ந்த உணர்வின் அடிப்படையில் தான் தொடர்கிறது என்பது கவனிக்கவேண்டிய விடயம், ஈழப் போர் இலக்கியங்களை தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்காத அனைத்து குற்றங்களையும் தமிழ்நாட்டில் உள்ள தமிழ்த் தேசிய அமைப்புக்களே ஒப்புக்கொள்ள வேண்டும். தமிழ்ச் சமூகம் புனைவிலக்கியத்தின் தத்துப் பிள்ளைகளாக வளர்த்தெடுக்கப்பட்டுவிட்டதன் விளைவே இதற்கு காரணமெனச் சொல்ல முடியும். கஸ்தூரி, செல்வி, மலைமகள்,ஆதிலட்சுமி,சிவரமணி புதுவை இரத்தினதுரை, அம்புலி என நீண்டு கொண்டு போகும் ஈழப் போர் இலக்கியவாதிகளின் பெயர்களை இலக்கிய மேடைகளில் சில எழுத்தாளர்களேனும் பேசுவது ஆறுதலளிக்கிறதே தவிர நிறைவல்ல. குறிப்பாக தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கிருக்கும் இலக்கிய சூழல் மக்களிடமிருந்து விடுபட்டு விட்டது கூட ஒரு காரணமாக இருக்கலாம். வாசித்தலும் இலக்கியம் படைத்தலும் மேதமைகளின் அதிகாரப் பொழுது போக்கு போலான பிம்பம் ஒன்று கட்டப்பட்டிருப்பதை தமிழ்நாட்டில் காணக்கூடியதாகவுள்ளது. ஈழப் போர் இலக்கியங்களுக்கு பதிப்புரிமை வாங்கும் பதிப்பகங்கள் அதனை ஒரு சாதாரண வாசகன் வாங்குகிற விலைக்கு கூட போடுவதில்லை என்பதும் இந்தத் தோல்வியில் இன்றுவரை பங்கு வகிக்கிறது.


இந்தியாவின் பங்கு அரசியல் தீர்வை ஈட்டுவதில் மிக முக்கியமானது என எண்ணும் தமிழீழத் தமிழர்கள் இந்திய அரசை நெருங்க முயற்சிப்பது போல இந்திய மக்களை நெருங்க முயற்சிக்கிறார்களா ?


அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவை முக்கிய காரணியாக எதிர்நோக்கும்  தமிழீழத் தமிழர்களின் நிலைப்பாடு மிகச் சரியானதா இல்லையா என்கிறதைத் தாண்டி அவ்வாறான அணுகுமுறை தவிர்கமுடியாததாய் இருக்கிறது என்பது தான் உண்மை. பவுத்த மதவாத மற்றும் சிங்கள இனவாத சக்திகள் அங்குள்ள தமிழர்களை இந்தியர்களாக நினைத்து தான் அழிக்கிறார்கள் என்கிற உண்மையை உண்மையான இந்தியர்களே அறியாதிருப்பது தான் அரசியல் வினோதம். சிங்கள இனவாதம் என்கிற பெரும் அரக்கனையே மதவாதம் என்கிற இன்னொரு அதிதீவிர பயங்கரவாதம் தான் இயக்குகிறது என்கிற விடயத்தை இந்திய அரசியல் அவதானிகள் கவனிக்க மறுக்கிறார்கள்.
மகாவம்ச மனவுலகோடு  இயங்குகிற தேரவாத பவுத்த பயங்கரவாதம் அங்குள்ள தமிழர்களை தமிழர்களாக பார்ப்பதைப் பார்க்கிலும் சைவர்களாகவும் இந்துக்களாகவும் பார்க்கிறது என்பது தான் மிக ஆழத்தில் மறைந்து போயிருக்கும் புத்தனின் மவுனம். மேலும் இந்திய மக்களை நெருங்குவதற்கான அரசியல் சூழல் இன்னுமே தமிழீழ மக்களிடம் ஏற்படவில்லை என்று  கூட சொல்லமுடியும். இந்திய மக்களின் உள்ளத்தில் தமிழீழ மக்கள் பயங்கரவாதிகளாக உருவகப்படுதப்பட்டிருப்பது அவர்களை நெருங்குகிற நடைமுறைக்கு பெரிய இடைஞ்சலாக இருக்கிறது. ஏன் இந்திய மக்களிடம் போகவேண்டும் தமிழ்நாட்டு மக்களிடமே அப்படியான பார்வை தான் இருக்கிறது என்பதை நான் இதில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.



பயங்கரவாதம் என்று நீங்கள் சொன்ன வகையில் கேட்கிறேன்...புலிகள் மீதான ராஜீவ் கொலைக் குற்றச்சாட்டின் அடிப்படையில் தான் ஈழ மக்கள் பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்படுகிறீர்கள்என்பதை எப்படி அணுகுகிறீர்கள் ?



துன்பியலின் தொடர்ச்சியாகத் தான் பார்க்கமுடிகிறது . . . இதிகாசங்களிலிருந்து நேரடியாக இந்த நூற்றாண்டிலும் அனுமன்களால் தான் எமது நாடு எரிக்கப்பட்டிருப்பதாக எனது அம்மம்மா ஒரு முறை பம்பலாக சொன்ன வசனத்தை உங்களுக்கும் சொல்லுவது மன நிம்மதியைத் தருகிறது . தமிழீழ மக்களாகிய நாம் ஒரு பொழுதும் இந்தியாவிற்கு எதிராக எம்மை நிலை நிறுத்திக் கொண்டதில்லை என்பதை வலியுறுத்துவதை விட  வேறு எந்த அணுகுமுறையும் பதிலாக இருக்கமுடியாது.



2009 போர் சொந்த நிலத்தில் புலிகளுக்கு அழிவை கொண்டு வந்தது மட்டுமின்றி புலம்பெயர் சமூகத்திலும் சிதறலை உருவாக்கியிருக்கிறது, புலம்பெயர் அமைப்புகள் பல்வேறு அரசியல் பணிகளை செய்து கொண்டிருந்தாலும் பல கூறுகளாக பிரிந்து இருக்கும் நிலையை எப்படி அணுகிறீர்கள்?


இது மிகப் பெரும் வரலாற்றுத் தவறு என உணர்ந்துகொள்கிற காலம் புலம்பெயர் அமைப்புக்களிற்கு நேரப்போகிறது, களத்தில் புலிகள் அமைப்பின்  இராணுவத் தோல்விக்கு பின் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வடிவம் மாற்றம் அடைந்திருக்கிறது என்பதை இவர்கள் உணர்ந்துகொள்ள மறுக்கிறார்கள்.
புலம்பெயர்ந்து வாழ்கிற தமிழீழ மக்களிடம் இந்த அமைப்புக்களின் மீது பல்வேறுபட்ட விமர்சனங்கள் இருக்கிறது. இவர்கள் தேசிய நாட்களை கோலாகலமாக கொண்டாடும் சடங்குப் போராளிகளாகவே இருக்கிறார்கள். விரும்பியோ விரும்பாமலோ உலக நீரோட்டத்திற்கு அமைவாக தமிழர்களின் போராட்டத்தை முன் எடுக்கவேண்டுமென்பது தான் சரியான தெளிவு நிலையாக இருக்கமுடியும். புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்கி வருகிற அமைப்புக்களுக்கிடையே சாதனைவாதப் போட்டிகள் அதிகரித்ததனால் தேசிய நலன் சார்ந்து இயங்கும் பண்புகள் இல்லாமல் போய்விட்டதை பல்வேறு நிகழ்வுகளின் ஊடாக காணமுடிகிறது.

புலம்பெயர்ந்த நாடுகளில் பிறந்த இன்றைய தமிழ் தலைமுறைக்கு எமது போராட்டத்தின் அவசியத்தையும் அறத்தையும் சொல்லிக் கொடுக்க முடியாததோடு புகலிடம் அடைந்துள்ள அந்த நாட்டின் சொந்தப் பிரஜைகளுக்கு எமது இனத்தின் மீது கட்டவிழ்க்கப்பட்ட அடக்குமுறைகளை தெரியப்படுத்தாததே  புலம்பெயர் அமைப்புக்களின் பலவீனமாகத் தான் பார்க்க முடிகிறது.

இப்பொழுது புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் சில அமைப்புக்களிடம் ஒரு வண்ணமயமான விழாக்கோல அரசியல் செயற்பாடுகள் தான் முன் நிற்கிறதே தவிர இரத்தச் சகதியின் ஈரம் காயாமல் அல்லற்படும் களத்து மக்களின் கண்ணீர் குறித்து அவர்களிடம் கவலைகள் இருப்பதில்லை.

பிரிந்து நின்று செயற்படுதல் என்பதே நமது பொது எதிரிக்கு பலமான விடயம் என்பதை உணர்ந்து கொள்கிற அளவுக்கு கூட இவர்களிடம் அரசியல் கூர்மை இல்லாதிருப்பது வருத்தமான விடயம். நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென வாழ் என்கிற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கூற்றுக்கு முரணாக நடந்து கொள்ளும் புலம்பெயர் அமைப்புக்களால் மக்களுக்கான எந்தவொரு அரசியலையும் செய்துவிடமுடியாது என்பது சிலர் உணர மறுக்கும் உண்மை. இந்தக் கேள்விக்கு பதில் சொன்ன காரணத்திற்காக நாளை எனக்குத் துரோகியென பட்டமளிக்கும் போலியோ செயற்பாடுகளைத் தான் புலம்பெயர் நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் சில அமைப்புக்களால் ஆரோக்கியமாக செய்யமுடியும்.


இயக்கங்களுக்கு உள்ளேயான மோதல்- முஸ்லீம்களை வெளியேற்றியது - கொரில்லா முறையில் இருந்து  புற ராணுவ அமைப்பாக மாறியது என புலிகள் மீது வைக்கப்படும் கடுமையான விமர்சனங்களோடுஇப்போது இது மேற்குலக பாணியிலான விமர்சனங்களாக தமிழ் சமூகத்துக்கு உள்ளயே எழுவதை பற்றி ?


எந்தவொரு இயக்கமும் செயற்பாடும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டிருக்க முடியாது, ஆனால் அதனை சரியான அறம் கொண்ட விமர்சனப் பாங்கோடும் சொல்லுதல் வேண்டும். ஆயுத அமைப்புக்களின் மோதலிலிருந்து இன்று வரை வைக்கப்படும்  பல்வேறு விமர்சனங்கள் இந்தப் பிரச்சனையின் ஆரம்பப் புள்ளிகளை தொட்டிருக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்லமுடியும். முள்ளிவாய்க்காலுக்கு பிறகு  புலிகளை விமர்சித்தலும் ஆதரித்தலும் கண்மூடித்தனமாகவே இருக்கிறது. 

கிட்டத்தட்ட இரண்டுமே கூர்மையற்றது. முஸ்லிம் வெளியேற்றத்தில் இருந்து கொரில்லா முறையில் இருந்து  புற ராணுவ அமைப்பாக மாறியது வரை பேசிக் கொண்டே இருத்தலை தம் தலையாயக் கடமையாக வைத்திருக்கும் புலிஎதிர்ப்பு வாதிகளிடம் அறத்தின் நிழல் கூட விழுவதில்லை. ஒரு ஆயுதப் போராட்ட இயக்கத்தின் போக்கு இவ்வாறு தான் அமைய வேண்டும் என எவரும் தீர்மான முன்வரைவுகளை கொடுத்துவிடமுடியாது. அது ஒரு சிறுகதையையோ, நேர்காணலையோ வடிவமைக்கும் இலகுவென்று அவர்கள் நினைத்திருக்க கூடும். 

இஸ்லாமிய மார்க்கத்தை தழுவிக் கொண்ட என் சகத் தமிழ்ச் சகோதர்கள் மீது நிகழ்த்தப்பட்ட யாழ் வெளியேற்ற நிகழ்வு அன்றைய களச்சூழலில் தவிர்கமுடியாததாய் இருந்திருக்கிறதென்றாலும் அதன் பிறகான நிகழ்வுகளில் அதற்கான தார்மீக மன்னிப்பை புலிகள் இயக்கமே கேட்டுக்கொண்டமையை இவர்கள் பேசமறுப்பது தான் இவர்களின் விமர்சனத் தோல்வி.  

மானுடப் போராளிகளாக தம்மை நிலை நிறுத்த முனையும் இவர்கள் செஞ்சோலையில் கொல்லப்பட்ட  அறுபதுக்கு மேற்பட்ட சிறார்கள் குறித்து ஒரு பதிவையேனும் இதுவரை பதிந்துள்ளர்களா என்றால் இல்லை என்று சொல்ல முடியும். ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்காக போராடிய விடுதலை அமைப்பை கருத்து ரீதியாகவும் கோட்பாட்டு ரீதியாகவும் எதிர்ப்பதாக நினைத்து ஒரு இனப்படுகொலையை விமர்சனங்களின் ஊடாக சமநிலைப்படுத்த முயற்சிக்கிறார்கள். மேற்குலகப் பாணியில் புலிகள் மீதான விமர்சனங்களை எழுதுவது அவர்களின் எழுத்துலக அடையாளமாக இருக்கிறதே தவிர இவர்கள் எந்தவொரு சமூகத்தின் அடையாளமும் இல்லை.



இனப்படுகொலை அரசியல் பலவிதமான கூறுகளாக உருவெடுத்துள்ள நிலையில், தமிழீழ மக்களின் அரசியல் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் ?


இனப்படுகொலை அரசியல் பலவிதமான கூறுகளாக உருவெடுத்திருக்கின்றமை என்பது உண்மைதானென்றாலும் இனப்படுகொலைக்குள்ளான தமிழீழ மக்களுக்கு அதிலிருந்து என்ன ஆகியது என்றால் எப்போதும் போல வெறும் கையைத் தான் விரிக்க வேண்டியுள்ளது. எங்களையும் எங்கள் அறம் கொண்ட விடுதலைப் போராட்டத்தையும் அழித்துக் கொண்டாடிய சர்வதேசமே இனப்படுகொலை அரசியலிலும் பயன் அடைந்துவருகிறது.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் இலங்கைத்தீவை தமது பொருளாதார சுரண்டல்களுக்கு பயன்படுத்த நினைக்கும் ஓவ்வொரு முதல் தர நாடுகளும் இனப்படுகொலை அரசியலை கையில் எடுத்திருக்கின்றதே உண்மை. வடமாகாண சபையிலிருந்து அ.நா வரை நீண்டு போயிருக்கும் இனப்படுகொலை அரசியலால் பாதிக்கப்பட்ட தமிழினத்திற்கு இதுவரை ஆறுதலாகக் கூட எதுவும் நேரவில்லை. அமெரிக்கத் தீர்மானம், சர்வதேச போர்குற்ற விசாரணை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் என சொல்லிக்கொண்டே போகிற கால போக அரசியல் நிகழ்வுகளால் எங்களுக்கு எதிர்காலமிருப்பதாக நாம் ஒரு போதும் நம்புவதற்கில்லை.

சர்வதேச சக்திகளின் நோக்கு நிலையில் மாற்றம் ஏற்படுகிற வகையில் வலுவான போராட்டங்களை புலம்பெயர் மக்கள் கையில் எடுத்து பொது வாக்கெடுப்பு என்கிற சனநாயக விதி வரைக்கும் சர்வதேசத்தை மிக வேகமாக அழுத்துவதன் மூலமே  எமது எதிர்காலம் சனநாயகப் பாங்குடன் ஆரம்பிக்கும், இதுவே இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு தொடர்ந்து அடக்கப்படுகிற தேசிய இனத்தின் உலகளாவிய இறுதிச் சனநாயக அணுகுமுறையாகவும் இருக்கமுடியும் இதுவும் தவிர்க்கப்படுமிடத்தில் வன்முறையினூடாகத் தான்  அரசியல் எதிர்காலம் இருக்கும். அது அரச அதிகாரத்தின் வன்முறையால் அடக்கப்படுகிற இனத்தின் இரண்டாம் கட்ட அறம் கொண்ட வன்முறையாகக் கூட இருக்கலாம்.


வெளிப்படையாக சொல்லுங்கள் தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படும் ஈழ அரசியல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?


இதை முக்கியமானதொரு கேள்வியாக பார்ப்பதோடு இதற்கு முந்தைய பதில்களையும் வெளிப்படையாக தான் சொன்னேன் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழ்நாடு எமக்கு ஆதரவாக,உறவாக,சகோதரனாக இருந்து வருவது புதியதல்ல. அந்த உறவில் எந்தக் களங்கமுமில்லை. ஆயுதம் ஏந்திய தமிழீழ விடுதலை அமைப்புக்களுக்கு அவ்வளவு துணை நின்ற தாய் தமிழ்நாட்டின் மீது இன்றும் எங்கள் சனங்களுக்கு மிகப் பெரும் மரியாதை உண்டு.நான் தமிழ்நாட்டின் தமிழீழ சார்பு அரசியலை முள்ளிவாய்க்காலுக்கு முதல் முள்ளிவாய்க்காலுக்கு பிறகு என நோக்குவதோடு மு.பி குறித்து பேசுவது தான் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

முள்ளிவாய்க்காலுக்கு பிறகு “ஈழம்” என்கிற வார்த்தை காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் இருந்து கட்சி அரசியல் வரை வியாபர கவர்ச்சியாக மாறிவிட்டது அது போக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்  பிரபாகரனை ரசிக மனப்பாங்கோடு பேசித்திரிவதுமே இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த இனப்படுகொலையை சனல் –4 ஊடகம் திரையிட்டதன் பிறகே கணிசமான தமிழ்நாட்டு உறவுகளுக்கு தமிழீழ  மண்ணில் என்ன நடந்தது என்று ஒரு உண்மையே கிடைத்தது. சாதாரண மக்களிடத்தில் இறங்கி தமிழீழ மண்ணில் என்ன நடக்கிறது என சொல்லிக்கொள்கிற பரப்புரை அரசியலை கூட இங்குள்ள தமிழ் தேசிய அமைப்புக்கள் கையிலெடுக்க தவறிவிட்டார்கள். இது அவர்களின் தார்மீகக் கடமை.

ஏன் இன்னும் கூட தமிழ்நாட்டு மக்களிடம் அங்கு  நடந்தது இனப்படுகொலையே இறந்து போவது தமிழர்களே என்று வீடு வீடாகச் சென்று சொல்லிக் கொள்கிற பரப்புரை அரசியலை எந்த தமிழ்தேசிய அமைப்பும் முன்னெடுக்கவில்லை என்பதை நான் கதைக்கிற தமிழீழத் தமிழை கேட்டுவிட்டு ஒரு தமிழ்நாட்டு தமிழர் ஏன் சிங்களத் தமிழ் பேசுகிறீர்கள் எனக் கேட்பதிலேயே அறிந்து கொள்ளமுடிகிறது. இவர்கள் தமிழீழ சார்பு அரசியலையே முன்னெடுக்கவில்லை என்று கூட சொல்ல முடியும்.

தமிழீழ மக்கள் குறித்துமேடைகளில் முழங்கி கரகோஷம் வாங்கிக் கொள்வதையே அவர்கள் தமிழீழ சார்பு அரசியலாக எண்ணுகிறார்களோ என்று எனக்கு இன்றுவரை சந்தேகம் உண்டு.தங்களைத் தாங்களே தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழ்நாட்டுப் பிரதிநிதிகளாக  உருவகித்துக்கொள்ளும் இவர்கள் புலம்பெயர்ந்து வாழ்கிற தமிழீழ மக்களின் மனத்தில் பிரபலங்களாக உருவாகியிருக்கிறார்களே தவிர ஒன்றித்த தேசிய உணர்வோடு இயங்கிக் கொள்ளுகிறவர்களாக களத்தில் இல்லை.

இவை யாவற்றையும் கடந்து தான் மாணவர் போராட்டத்தை பார்க்கவேண்டும் அதுவொரு சுய எழுச்சியான போராட்டமாகவே தொடர்ந்திருந்தால் தொய்விருந்திருக்காது ஆனாலும் அவர்களையும் குறித்த அமைப்புக்கள் கபளீகரம் செய்து விட்டமை கவலையளிக்கிறது. மக்களோடு மக்களாக நின்று களத்தில் வேலை செய்கிற எந்தவொரு தமிழீழ சார்பு இயக்கமும் தமிழ்நாட்டில் இல்லை என்பதை வருத்ததோடு பதிவு செய்ய விரும்புகிறேன்.





பொதுவாக எனது கவிதைகளில் அழகியல் இல்லை என தமிழ்நாட்டின் சில ஜிகினா எழுத்தாளர்கள் தரச் சான்றிதழ் வழங்குவதுண்டு. எனது உடலில் இருந்து வடிகிற குருதிக்கும் கண்ணீருக்கு பவுடர் போட்டு தலை இழுத்து விடவேண்டும் என விரும்புகிற இது போன்ற மனிதமற்றவர்களையெல்லாம் கடந்து மானுடத்தின் உயிர்மூச்சாய் எமது தமிழீழ இலக்கியம் செயற்படுகிறது.
அது போருக்கு பிந்தைய என்றாலும் போர் பற்றியது தான். தமிழ் இலக்கியத்தில் வீரியம் ஏற்றிய படைப்புக்கள் தமிழீழத்தில் இருந்து வெளிவந்தவையே, வாழ்வின் ஆதி தொட்டு அந்தம் வரை போருக்குள்ளும், அழுகுரல்களுக்குள்ளும் ,குருதிகளுக்குள்ளும் வாழ்ந்தவர்களின் வாழ்பவர்களின் நிதர்சனமாக அது காத்திரத்தோடு இயங்கிக்கொண்டிருக்கிறது. உலகின் பேரிலக்கியமாக போரிலக்கியமாக தமிழீழ இலக்கியம் தான் இனிவரும் நூற்றாண்டுகளில் இனம் காணப்படுமென்பது திண்ணம்.



Comments

  1. //சர்வதேச சக்திகளின் நோக்கு நிலையில் மாற்றம் ஏற்படுகிற வகையில் வலுவான போராட்டங்களை புலம்பெயர் மக்கள் கையில் எடுத்து பொது வாக்கெடுப்பு என்கிற சனநாயக விதி வரைக்கும் சர்வதேசத்தை மிக வேகமாக அழுத்துவதன் மூலமே எமது எதிர்காலம் சனநாயகப் பாங்குடன் ஆரம்பிக்கும், இதுவே இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு தொடர்ந்து அடக்கப்படுகிற தேசிய இனத்தின் உலகளாவிய இறுதிச் சனநாயக அணுகுமுறையாகவும் இருக்கமுடியும் இதுவும் தவிர்க்கப்படுமிடத்தில் வன்முறையினூடாகத் தான் அரசியல் எதிர்காலம் இருக்கும். அது அரச அதிகாரத்தின் வன்முறையால் அடக்கப்படுகிற இனத்தின் இரண்டாம் கட்ட அறம் கொண்ட வன்முறையாகக் கூட இருக்கலாம். //

    ஆழ்ந்து யோசிக்க வேண்டிய, யாரும் யோசிக்க மறுக்கிற அதி முக்கியமான கூற்று.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்