பூக்கும் பனிக்காலம்
இலையில் இருந்து சிறகிசைத்து
வானம் மிதக்கும்
பறவையின் அலகினில்
அன்பின் மாலை கனிகிறது.
பிறை உதட்டின் ஜீவ
கோடுகளில் கசிந்துருகும்
முத்தத்தின் எச்சில் அந்தம்
கூடலில் ஒளிப்பிழம்பு.
சில்லிடும் அனுங்கள் ஒலி
கேட்கத்தவறிய தொன்மத்தின் யாழிசை
மீளத்துளி விருப்பம் அற்று
கொங்கைகள் கட்டி அணைக்கும்
மோனத்தின் சித்து
பொம்மை விழுந்த நதியின் வேகம்.
முயங்கிப்பெறும் முக்தியின் மேன்மை
உன்னிடத்தே வாய்க்கும் என் சகியே
முத்தமிடும் உன் சூட்டில்
நான் கடப்பேன்
பாழ் வெளியை
முத்தமிடு. சகியே முத்தமிடு.
-அகரமுதல்வன்
11.07.2014
Comments
Post a Comment