என்னை நானே வருத்தத்தொடங்குவதன் மூலமாய் என் எழுத்தும் தொடங்குகிறது - அகரமுதல்வன் -நேர்கண்டவர் எழுத்தாளர் தமயந்தி


     தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் இந்தச்சூழலில் பிரிந்திருக்கும் தாய்நாடு பற்றிய நினைவுகள் உங்களை வருத்துவதில்லையா?

என்னைச் சூழவும் எழுந்து வீசும் ஒவ்வொரு நொடியும் தாய்நாட்டின் நினைவுக்கிளைகளில் தான் தொங்கிநிற்கிறது. பகல் நலிந்து இரவு வருகையில் கைவிட்டுவந்த வீட்டின் முற்றத்து மணல் என்னை மூடுகிறது.புலம்பெயர்வை மாதிரி ஒரு சித்ரவதையைத் தான் தாங்கமுடியாதுள்ளது. புலம்பெயர்ந்த அகதியின் விழிநீர் துயரங்களை புரிந்துகொள்ளும் உலகத்தாரை இன்னும் சந்திக்கவே இல்லை. நான் தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்வதையும் கொடுந்துயராகவே பார்க்கிறேன். வீட்டின் கிணற்று நீரைக் குடிக்கவேண்டுமென்று எழும்  தாகத்தை எந்தக் கங்கையின் நீர் கொடுத்தும் தணிக்கமுடியாது. நாளும் பொழுதும் தாய்நாட்டின் திசைநோக்கி எழுந்து பறக்கவே எத்தனிக்கிறேன்.சொந்த நாட்டிற்கு திரும்பவேண்டும். ஊரின் தொடக்கத்திலேயே எங்கள் வீடு இருக்கிறது. மணல் முற்றம். எப்போதும் காற்றுத் தரும் மரங்கள். நான் அந்த மரத்தின் கீழே அமைதியாக நின்றுகொண்டு பின்நேரம் விளையாடிக்கொண்டிருக்கும் என்னை விட சிறுவயதான பெடியங்களை பார்த்துக்கொண்டிருப்பேன். இரவு நேரத்தில் சொந்தக்காரர்கள் சேர்ந்து கதைத்துக்கொண்டே குடிக்கிற தேத்தண்ணியை இழந்தே விட்டேன். அங்கே எனது வீட்டு வேப்பமரத்தின் கீழே நின்றுகொண்டு ஒரு தேத்தண்ணி குடிக்கவேண்டுமாற் போலிருக்கிறது.புலுனிக்குஞ்சுகளை பார்க்கவேண்டும். எனது தாயகவானத்தில் பறவைகள் பறந்துபோகும் வடிவுக்கு கீழே தான் எனது குழந்தைகள் நடைபழகவேண்டும். இப்படியான அவஸ்தைகளோடும் வருத்தங்களோடும் தான்,உங்களைப் பார்த்து புன்னகைத்து வணக்கம் சொல்கிறேன் உலகத்தீரே!




எப்போது தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி முதன்முறையாக கேள்விப்பட்டீர்கள்?

எங்கட வீட்டில் “இயக்கம்” என்ற வார்த்தைப்பிரயோகம் நான் பிறப்பதற்கு முன்னமிருந்தே உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. நான் குழந்தையாக இருந்த போதெல்லாம் போராளிகளால் தூக்கி அரவணைக்கப்பட்டிருக்கிறேன். எனது ஒன்பதாவது வயதில் இயக்கம் என்பதன் உத்தியோகபூர்வ பெயரை நாளிதழ் ஒன்றில் படித்து தெரிந்துகொண்டேன். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் எனது அண்ணா இணைந்துகொண்டு செயற்படத் தொடங்கிய காலகட்டத்தில் நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அண்ணாவின் மூலமாகவே  விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நெறிமுறைகளையும், சமூக செயற்பாடுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்துகொண்டேன்.அண்ணா வீட்டிற்கு வருகிற வேளைகளில் இயக்கப்புத்தகங்களையும், நாளிதழ்களையும் கொண்டுவருவதுண்டு. அதன் வழியாக தமிழீழ விடுதலைக்காய் போராடும் புலிகள் அமைப்பினரை பற்றி நிறையவே அறிய முடிந்தது.

ராஜிவ் –ஜே.ஆர் ஒப்பந்தம் குறித்து உங்கள் கருத்து என்ன?

இந்த ஒப்பந்தத்தின் விளைவுகள் எத்தனையோ உயிர்களைக் காவு வாங்கிவிட்டன. சிங்கள ஆட்சியாளர்கள் இந்திய ஆளும் வர்க்கத்தை ஏமாற்றிய பெரியதொரு நிகழ்வே ராஜிவ்-ஜே.ஆர் ஒப்பந்தத்தை என்னால் பார்க்கமுடிகிறது.இந்தியாவின் பிரதமரான அம்மையார் இந்திராகாந்தியின் காலகட்டத்தில் இருந்த ஈழஇயக்கங்களுக்கான ஆதரவும்,ஒத்திசைவுகளும் அவரின் காலத்திற்கு பிறகு இல்லாமல் போய்விட்டன. இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவின் நேசசக்தியாக ஈழத்தமிழர்களே இருப்பார்கள் என்று இந்திராகாந்தி அம்மையாரின் ஆட்சியிலான இந்தியாவும், வெளியுலக கொள்கை வகுப்பாளர்களும் உணர்ந்துகொண்டார்கள். மிகக் குறிப்பாக ஜி.பார்த்தசாரதி போன்ற கொள்கை வகுப்பாளர்கள் ஈழத்தமிழர்களின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தார்கள்.ஆனால் பின்னைய காலங்களில் இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் இந்தக் கண்ணோட்டத்தில் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை அறிய முற்படவில்லை. ஜே.ஆர் சிங்கள ஆட்சியார்களில் மிகச் சிறந்த குள்ளநரித்தனம் கொண்டவர். அவரின் ராஜதந்திரமும்,அரசியல் லொபிகளும் இன்றுள்ள சிங்கள ஆட்சியாளர்களுக்கும் பெரிய படிப்பினையாக இருக்கிறது. தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக இருந்த இந்திராகாந்தியின் இந்தியாவைப் போல் அல்லாமல் பிறிதொரு இந்தியாவை ஜே.ஆர் விரும்பினார். அதையே இந்த ஒப்பந்தத்தின் மூலமாய் சாத்தியப்படுத்தினார். இந்தியாவின் இந்து எச்சங்களாய் அந்தத் தீவில் வாழுகிற ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்துக்கொண்டிருக்கிற பவுத்த பேரினவாதம் இந்தியாவின் உதவியோடு ஈழத்தமிழர்களைக் கொல்லத்தொடங்கும் படலத்தை இந்த ஒப்பந்தம் துவக்கிவைத்தது. அமைதிப்படை வருகிறது என்று பூச்சொரிந்து வரவேற்ற தமிழீழ மக்களை இந்திய இராணுவத்தின் டாங்கிகளே ஏறி மிதித்துக் கொன்றது. எழுத்தாளர் தமிழ்நதி எழுதிய பார்த்தீனியம் நாவலில் இந்தக் காட்சிகள் வருகிறது. மனம் பதபதைக்கிறது. அப்படியானது மட்டுமா நிகழ்ந்தது? எத்தனையோ பாலியல் பலாத்காரங்கள், குரூரமான கூட்டுக்கொலைகள் என எல்லாவற்றையும் அமைதிப்படையே நிகழ்த்திவிட்டது.இதனை நானோ,தமிழ்நதியோ சொன்னால் அம்பலத்தில் ஏறாமல் கூட போய்விடும். ஆனால் பாரதத்தின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மதிப்பிற்குரிய ஜோர்ஜ் பெர்ணான்டோஸ் இவ்வாறு சொல்கிறார்.

இலங்கைக்கு படைகள் அனுப்பிய ராஜீவ்காந்தியின் ராணுவ சாகசத்தை இந்தியாவின் வியட்நாமாக இலங்கை அமைந்துவிடுமென 1987 ஓகஸ்ட் மாதம் நான் சொல்லியிருந்தேன். எனினும் இந்தியாவின் வியட்நாமிலும், மை லாய் படுகொலைகள் ஒன்று நடக்குமென எதிர்பார்த்திருக்கவில்லை. எல்லா இடங்களிலும் ராணுவத்தினர் மிகவும் மோசமான முறையில் மனித நலன்களை மீறி நடக்கிறார்கள் என அறிவேன்.

ஈழத்தமிழர்களை ஏமாற்றிய நிறைய ஒப்பந்தங்களில் இந்த ஒப்பந்தமும் ஒன்று. அதன் பின்னராக இன்று வரைக்கும் இந்தியாவானது  ஈழத்தமிழ் மக்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளவில்லை என்கிற கவலை எனக்கிருக்கிறது.



          உங்கள் பால்யம் குறித்துச் சொல்லுங்களேன்?

பால்யம் என்று நினைத்துப்பார்க்கையில் பயம் தொற்றிவிடுகிறது. பதுங்குகுழி என்னைச் சொல் என்கிறது. எறிகணை என்னைப் பற்றியும் சொல் என்று வெடிக்கிறது. உலங்குவானூர்திகள் சத்தமிட்டு பறக்கின்றன. அம்மாவின் சட்டையைப் பிடித்தபடி நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். ஊரே வீதியில் நடக்கிறது. சிலர் சாகிறார்கள். சிலர் அழுகிறார்கள். இன்னும் சிலர் தவிக்கிறார்கள். போர் நிலத்தின் பால்யத்தை திரும்பிக்கூட நினைக்கமுடியவில்லை. போர் ஓய்ந்திருக்கும் காலங்களில் கிடைக்கும் வாழ்க்கை கொஞ்சம் இளைப்பாறுதலாயிருக்கும்.  நான் சரியான குழப்படி பெடியனாக இருப்பேன். துடியாட்டாமும்,பரபரப்பும் இருக்கும். நண்பர்களோடு சேர்ந்து பொன்வண்டு பிடிக்கபோவதும், வேட்டைக்கு போவதும் எனக்கு பிடித்த ஏகாந்தமாய் இருந்தது. பிறகு பக்கத்து வீட்டில் உள்ள தேமா மரத்தின் அடியில் மண்ணால் கோயில் கட்டி பூசை செய்து விளையாடுவேன். இப்படியே வாழ்ந்துகொண்டிருந்த நாளொன்றில் இடம்பெயரத்தொடங்கினேன். எனது பால்யம் என்பது குண்டுகளால் சிதறடிக்கப்பட்டு,பதுங்குகுழிகளுக்குள் நடுங்கி உதிர்ந்தவை. இப்படியொரு பால்யகாலத்தை எந்த இனமும் சுமக்க கூடாது.

 இன்றைய சூழலில் இந்தியா மீது என்னென்ன நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள்? இந்தியா ஈழத்தமிழர்களின் பிரச்சனை தொடர்பில் எவ்வாறு தலையிடமுடியுமென எண்ணுகிறீர்கள்?

இந்தக் கேள்வியை நான் நிறைய இடங்களில் சந்திக்கவேண்டி இருக்கிறது. என்னை இந்திய சார்புநிலை கொண்ட ஈழ இலக்கியவாதியாக பலர் பொருள் கொண்டிருக்கின்றனர். இப்போது நான் இந்தக் கேள்விக்கு சொல்லும் பதிலும் அப்படியான எண்ணத்தை உருவாக்கும். அதுபற்றி நான் அஞ்சேன். உண்மையை சொல்லுவதற்கு நான் என்றுமே தயங்கியது கிடையாது. இந்தியாவை தமிழீழ மக்கள் நம்பினார்கள். நம்புகிறார்கள். இந்துசமுத்திர பிராந்தியத்தில் சீனாவின் கைஓங்கிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் புவியியல் ரீதியாக செல்வாக்கு மிக்க ஈழத்தமிழர்கள் அவல வெளியில் அநாதரவாய் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.சீனாவின் உற்ற சோதரனாய் இலங்கையின் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். மத ரீதியாக அவர்களுக்கிருக்கும் இணக்கம் இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவிற்கு ஆபத்தானது. இந்தியாவிற்கு எதிரான மனவுலகம் கொண்ட பவுத்த சிங்கள ஆட்சியாளர்கள் இந்தியாவை ஏமாற்றும் முகமாக தம்மை நட்பு சக்தியாகக் காண்பிப்பார்கள். வரலாற்றில் இந்திய- பாகிஸ்தான் யுத்த காலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இலங்கை இருந்தததை இந்திய ஆட்சியாளர்கள் மறந்துவிட்டார்கள் என்று தோன்றுகிறது. திருகோணமலை, மன்னார் போன்ற கேந்திரத்துவம் கொண்ட இடங்களை தமது தாயகப்பரப்பாக கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களை இந்தியா தனது நலன்களுக்காகவேனும் பாதுகாக்க வேண்டும். ஆனால் அந்த அர்த்தத்தில் கூட அது நிகழ்வதாயில்லை.இப்பிராந்தியத்தில் அமைந்திருக்கின்ற ஒரு பிரதான நாடு என்ற வகையில் இந்தியா ஈழத்தமிழர் பிரச்சனையோடு மிகவும் நெருக்கமாக செயற்படவேண்டும் என்கிற விருப்பம் ஈழத்தமிழ் மக்களிடம் இருக்கிறது. ஆனால் துரதிஸ்டவசமாக இந்தியா இன்றுவரைக்கும் தனது நலன்களின் பொருட்டு எங்கள் பிரச்சனையை புறங்கையால் தட்டிவிட்டுக் கொண்டேயிருக்கிறது. நாம் இந்தியாவின் மீதான இலங்கை ஆட்சியாளர்களின் வெறுப்புக்கும் போருக்கும் பலியாடுகளாக உள்ளாக்கப்பட்டவர்கள். இன்றைய அரசியல் சூழலில் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் கோலோச்சியிருகிறது. இதனை இந்தியா உணரவேண்டும். இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்கள் இல்லையேல் இந்தியாவிற்கு தெற்கிலும் சீன மாகாணம் தோன்றும். இது இந்தியாவிற்கு ஆபத்தானது என்பதை இந்தியா மட்டுமே இன்னும் உணரவில்லை.




1   தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் இந்தச்சூழலில் பிரிந்திருக்கும் தாய்நாடு பற்றிய நினைவுகள் உங்களை வருத்துவதில்லையா?

என்னைச் சூழவும் எழுந்து வீசும் ஒவ்வொரு நொடியும் தாய்நாட்டின் நினைவுக்கிளைகளில் தான் தொங்கிநிற்கிறது. பகல் நலிந்து இரவு வருகையில் கைவிட்டுவந்த வீட்டின் முற்றத்து மணல் என்னை மூடுகிறது.புலம்பெயர்வை மாதிரி ஒரு சித்ரவதையைத் தான் தாங்கமுடியாதுள்ளது. புலம்பெயர்ந்த அகதியின் விழிநீர் துயரங்களை புரிந்துகொள்ளும் உலகத்தாரை இன்னும் சந்திக்கவே இல்லை. நான் தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்வதையும் கொடுந்துயராகவே பார்க்கிறேன். வீட்டின் கிணற்று நீரைக் குடிக்கவேண்டுமென்று எழும்  தாகத்தை எந்தக் கங்கையின் நீர் கொடுத்தும் தணிக்கமுடியாது. நாளும் பொழுதும் தாய்நாட்டின் திசைநோக்கி எழுந்து பறக்கவே எத்தனிக்கிறேன்.சொந்த நாட்டிற்கு திரும்பவேண்டும். ஊரின் தொடக்கத்திலேயே எங்கள் வீடு இருக்கிறது. மணல் முற்றம். எப்போதும் காற்றுத் தரும் மரங்கள். நான் அந்த மரத்தின் கீழே அமைதியாக நின்றுகொண்டு பின்நேரம் விளையாடிக்கொண்டிருக்கும் என்னை விட சிறுவயதான பெடியங்களை பார்த்துக்கொண்டிருப்பேன். இரவு நேரத்தில் சொந்தக்காரர்கள் சேர்ந்து கதைத்துக்கொண்டே குடிக்கிற தேத்தண்ணியை இழந்தே விட்டேன். அங்கே எனது வீட்டு வேப்பமரத்தின் கீழே நின்றுகொண்டு ஒரு தேத்தண்ணி குடிக்கவேண்டுமாற் போலிருக்கிறது.புலுனிக்குஞ்சுகளை பார்க்கவேண்டும். எனது தாயகவானத்தில் பறவைகள் பறந்துபோகும் வடிவுக்கு கீழே தான் எனது குழந்தைகள் நடைபழகவேண்டும். இப்படியான அவஸ்தைகளோடும் வருத்தங்களோடும் தான்,உங்களைப் பார்த்து புன்னகைத்து வணக்கம் சொல்கிறேன் உலகத்தீரே!

     எப்போது தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி முதன்முறையாக கேள்விப்பட்டீர்கள்?

எங்கட வீட்டில் “இயக்கம்” என்ற வார்த்தைப்பிரயோகம் நான் பிறப்பதற்கு முன்னமிருந்தே உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. நான் குழந்தையாக இருந்த போதெல்லாம் போராளிகளால் தூக்கி அரவணைக்கப்பட்டிருக்கிறேன். எனது ஒன்பதாவது வயதில் இயக்கம் என்பதன் உத்தியோகபூர்வ பெயரை நாளிதழ் ஒன்றில் படித்து தெரிந்துகொண்டேன். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் எனது அண்ணா இணைந்துகொண்டு செயற்படத் தொடங்கிய காலகட்டத்தில் நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அண்ணாவின் மூலமாகவே  விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நெறிமுறைகளையும், சமூக செயற்பாடுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்துகொண்டேன்.அண்ணா வீட்டிற்கு வருகிற வேளைகளில் இயக்கப்புத்தகங்களையும், நாளிதழ்களையும் கொண்டுவருவதுண்டு. அதன் வழியாக தமிழீழ விடுதலைக்காய் போராடும் புலிகள் அமைப்பினரை பற்றி நிறையவே அறிய முடிந்தது.

ராஜிவ் –ஜே.ஆர் ஒப்பந்தம் குறித்து உங்கள் கருத்து என்ன?

இந்த ஒப்பந்தத்தின் விளைவுகள் எத்தனையோ உயிர்களைக் காவு வாங்கிவிட்டன. சிங்கள ஆட்சியாளர்கள் இந்திய ஆளும் வர்க்கத்தை ஏமாற்றிய பெரியதொரு நிகழ்வே ராஜிவ்-ஜே.ஆர் ஒப்பந்தத்தை என்னால் பார்க்கமுடிகிறது.இந்தியாவின் பிரதமரான அம்மையார் இந்திராகாந்தியின் காலகட்டத்தில் இருந்த ஈழஇயக்கங்களுக்கான ஆதரவும்,ஒத்திசைவுகளும் அவரின் காலத்திற்கு பிறகு இல்லாமல் போய்விட்டன. இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவின் நேசசக்தியாக ஈழத்தமிழர்களே இருப்பார்கள் என்று இந்திராகாந்தி அம்மையாரின் ஆட்சியிலான இந்தியாவும், வெளியுலக கொள்கை வகுப்பாளர்களும் உணர்ந்துகொண்டார்கள். மிகக் குறிப்பாக ஜி.பார்த்தசாரதி போன்ற கொள்கை வகுப்பாளர்கள் ஈழத்தமிழர்களின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தார்கள்.ஆனால் பின்னைய காலங்களில் இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் இந்தக் கண்ணோட்டத்தில் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை அறிய முற்படவில்லை. ஜே.ஆர் சிங்கள ஆட்சியார்களில் மிகச் சிறந்த குள்ளநரித்தனம் கொண்டவர். அவரின் ராஜதந்திரமும்,அரசியல் லொபிகளும் இன்றுள்ள சிங்கள ஆட்சியாளர்களுக்கும் பெரிய படிப்பினையாக இருக்கிறது. தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக இருந்த இந்திராகாந்தியின் இந்தியாவைப் போல் அல்லாமல் பிறிதொரு இந்தியாவை ஜே.ஆர் விரும்பினார். அதையே இந்த ஒப்பந்தத்தின் மூலமாய் சாத்தியப்படுத்தினார். இந்தியாவின் இந்து எச்சங்களாய் அந்தத் தீவில் வாழுகிற ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்துக்கொண்டிருக்கிற பவுத்த பேரினவாதம் இந்தியாவின் உதவியோடு ஈழத்தமிழர்களைக் கொல்லத்தொடங்கும் படலத்தை இந்த ஒப்பந்தம் துவக்கிவைத்தது. அமைதிப்படை வருகிறது என்று பூச்சொரிந்து வரவேற்ற தமிழீழ மக்களை இந்திய இராணுவத்தின் டாங்கிகளே ஏறி மிதித்துக் கொன்றது. எழுத்தாளர் தமிழ்நதி எழுதிய பார்த்தீனியம் நாவலில் இந்தக் காட்சிகள் வருகிறது. மனம் பதபதைக்கிறது. அப்படியானது மட்டுமா நிகழ்ந்தது? எத்தனையோ பாலியல் பலாத்காரங்கள், குரூரமான கூட்டுக்கொலைகள் என எல்லாவற்றையும் அமைதிப்படையே நிகழ்த்திவிட்டது.இதனை நானோ,தமிழ்நதியோ சொன்னால் அம்பலத்தில் ஏறாமல் கூட போய்விடும். ஆனால் பாரதத்தின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மதிப்பிற்குரிய ஜோர்ஜ் பெர்ணான்டோஸ் இவ்வாறு சொல்கிறார்.

"இலங்கைக்கு படைகள் அனுப்பிய ராஜீவ்காந்தியின் ராணுவ சாகசத்தை இந்தியாவின் வியட்நாமாக இலங்கை அமைந்துவிடுமென 1987 ஓகஸ்ட் மாதம் நான் சொல்லியிருந்தேன். எனினும் இந்தியாவின் வியட்நாமிலும், மை லாய் படுகொலைகள் ஒன்று நடக்குமென எதிர்பார்த்திருக்கவில்லை. எல்லா இடங்களிலும் ராணுவத்தினர் மிகவும் மோசமான முறையில் மனித நலன்களை மீறி நடக்கிறார்கள் என அறிவேன்".

ஈழத்தமிழர்களை ஏமாற்றிய நிறைய ஒப்பந்தங்களில் இந்த ஒப்பந்தமும் ஒன்று. அதன் பின்னராக இன்று வரைக்கும் இந்தியாவானது  ஈழத்தமிழ் மக்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளவில்லை என்கிற கவலை எனக்கிருக்கிறது.



          உங்கள் பால்யம் குறித்துச் சொல்லுங்களேன்?

பால்யம் என்று நினைத்துப்பார்க்கையில் பயம் தொற்றிவிடுகிறது. பதுங்குகுழி என்னைச் சொல் என்கிறது. எறிகணை என்னைப் பற்றியும் சொல் என்று வெடிக்கிறது. உலங்குவானூர்திகள் சத்தமிட்டு பறக்கின்றன. அம்மாவின் சட்டையைப் பிடித்தபடி நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். ஊரே வீதியில் நடக்கிறது. சிலர் சாகிறார்கள். சிலர் அழுகிறார்கள். இன்னும் சிலர் தவிக்கிறார்கள். போர் நிலத்தின் பால்யத்தை திரும்பிக்கூட நினைக்கமுடியவில்லை. போர் ஓய்ந்திருக்கும் காலங்களில் கிடைக்கும் வாழ்க்கை கொஞ்சம் இளைப்பாறுதலாயிருக்கும்.  நான் சரியான குழப்படி பெடியனாக இருப்பேன். துடியாட்டாமும்,பரபரப்பும் இருக்கும். நண்பர்களோடு சேர்ந்து பொன்வண்டு பிடிக்கபோவதும், வேட்டைக்கு போவதும் எனக்கு பிடித்த ஏகாந்தமாய் இருந்தது. பிறகு பக்கத்து வீட்டில் உள்ள தேமா மரத்தின் அடியில் மண்ணால் கோயில் கட்டி பூசை செய்து விளையாடுவேன். இப்படியே வாழ்ந்துகொண்டிருந்த நாளொன்றில் இடம்பெயரத்தொடங்கினேன். எனது பால்யம் என்பது குண்டுகளால் சிதறடிக்கப்பட்டு,பதுங்குகுழிகளுக்குள் நடுங்கி உதிர்ந்தவை. இப்படியொரு பால்யகாலத்தை எந்த இனமும் சுமக்க கூடாது.


 இன்றைய சூழலில் இந்தியா மீது என்னென்ன நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள்? இந்தியா ஈழத்தமிழர்களின் பிரச்சனை தொடர்பில் எவ்வாறு தலையிடமுடியுமென எண்ணுகிறீர்கள்?

இந்தக் கேள்வியை நான் நிறைய இடங்களில் சந்திக்கவேண்டி இருக்கிறது. என்னை இந்திய சார்புநிலை கொண்ட ஈழ இலக்கியவாதியாக பலர் பொருள் கொண்டிருக்கின்றனர். இப்போது நான் இந்தக் கேள்விக்கு சொல்லும் பதிலும் அப்படியான எண்ணத்தை உருவாக்கும். அதுபற்றி நான் அஞ்சேன். உண்மையை சொல்லுவதற்கு நான் என்றுமே தயங்கியது கிடையாது. இந்தியாவை தமிழீழ மக்கள் நம்பினார்கள். நம்புகிறார்கள். இந்துசமுத்திர பிராந்தியத்தில் சீனாவின் கைஓங்கிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் புவியியல் ரீதியாக செல்வாக்கு மிக்க ஈழத்தமிழர்கள் அவல வெளியில் அநாதரவாய் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.சீனாவின் உற்ற சோதரனாய் இலங்கையின் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். மத ரீதியாக அவர்களுக்கிருக்கும் இணக்கம் இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவிற்கு ஆபத்தானது. இந்தியாவிற்கு எதிரான மனவுலகம் கொண்ட பவுத்த சிங்கள ஆட்சியாளர்கள் இந்தியாவை ஏமாற்றும் முகமாக தம்மை நட்பு சக்தியாகக் காண்பிப்பார்கள். வரலாற்றில் இந்திய- பாகிஸ்தான் யுத்த காலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இலங்கை இருந்தததை இந்திய ஆட்சியாளர்கள் மறந்துவிட்டார்கள் என்று தோன்றுகிறது. திருகோணமலை, மன்னார் போன்ற கேந்திரத்துவம் கொண்ட இடங்களை தமது தாயகப்பரப்பாக கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களை இந்தியா தனது நலன்களுக்காகவேனும் பாதுகாக்க வேண்டும். ஆனால் அந்த அர்த்தத்தில் கூட அது நிகழ்வதாயில்லை.இப்பிராந்தியத்தில் அமைந்திருக்கின்ற ஒரு பிரதான நாடு என்ற வகையில் இந்தியா ஈழத்தமிழர் பிரச்சனையோடு மிகவும் நெருக்கமாக செயற்படவேண்டும் என்கிற விருப்பம் ஈழத்தமிழ் மக்களிடம் இருக்கிறது. ஆனால் துரதிஸ்டவசமாக இந்தியா இன்றுவரைக்கும் தனது நலன்களின் பொருட்டு எங்கள் பிரச்சனையை புறங்கையால் தட்டிவிட்டுக் கொண்டேயிருக்கிறது. நாம் இந்தியாவின் மீதான இலங்கை ஆட்சியாளர்களின் வெறுப்புக்கும் போருக்கும் பலியாடுகளாக உள்ளாக்கப்பட்டவர்கள். இன்றைய அரசியல் சூழலில் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் கோலோச்சியிருகிறது. இதனை இந்தியா உணரவேண்டும். இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்கள் இல்லையேல் இந்தியாவிற்கு தெற்கிலும் சீன மாகாணம் தோன்றும். இது இந்தியாவிற்கு ஆபத்தானது என்பதை இந்தியா மட்டுமே இன்னும் உணரவில்லை.




உங்கள் கதைகளின் ஆன்மாவாக உலவுவது எது?

எனது ஒவ்வொரு கதைகளுக்கும் ஆன்மாக்கள் வெவ்வாறானவை என்று தான் சொல்லத்தோன்றுகிறது. ஏனெனில் நான் யுத்தகாலத்து மனிதர்களைப் பற்றி எழுதுகிறேன். அந்தக் களத்தில் ஒவ்வொருவரின் உள்ளமும் ஒன்றை வேண்டாது. யுத்தம் எல்லோரையும் அச்சுறுத்தும் என்பதெல்லாம் மிகவும் பொய்யானது. ஆனால் எல்லோரையும் அலைக்கழிக்கும். இந்த உளவியலை நான் இனப்படுகொலைக்களத்தில் உணர்ந்துகொள்ள முடிந்தது. எனது அம்மாவின் தங்கையான எனது சித்தி எறிகணைகள் வீழ்ந்து கொண்டிருந்தாலும் பதுங்குகுழிக்குள் வரமாட்டா. யுத்தத்தைப் பார்க்கிலும், குண்டுகளைப் பார்க்கிலும்  சித்திக்கு பதுங்குகுழியின் இருள் உளச்சிதைவை தந்தது. எனது அக்காவிற்கு ஒரு பழக்கமிருந்தது அவள் பதுங்குகுழியின் ஒரே பக்கத்தையே வெறித்தபடி பார்த்துக்கொண்டிருப்பாள். அவளைப் பார்க்கும் போதெல்லாம் எனது உள்ளம் சிதைந்தது. இந்தப் பதுங்குகுழியின் மேலேயே குண்டு விழுந்து குடும்பமாய் செத்துப்போகவேண்டுமென்று அம்மா பிரார்த்தித்தாள்.இந்தப் பிரார்த்தனைக்கு முன்னமே கடவுள் கொல்லப்பட்டுவிட்டார் என்பதை அம்மா தெரிந்திருக்கவில்லை. நான் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் கதைகளில் வரும் பாத்திரங்களுக்கு பொதுப்பண்புகள் என்ற ஒன்றிருப்பதாக நினைக்கவில்லை.அப்படியெனில் அதனதன் ஆன்மாவும் வெவ்வாறனவை தான்.”முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு” கதையை எல்லோரும் வியந்து பாராட்டினார்கள். சிலர் என்னைக் கட்டியணைத்து அழுதார்கள். இந்தக் கதையில் வருகிற குரங்குக் குட்டிக்கும்,அந்நிலத்தில் வாழும் சனங்களுக்கும் வாழ்வென்பது ஒரே பத்திரத்தில் தான் இறுதி செய்யப்படுகிறது. அப்படியாயின் எனது கதைகளின் ஆன்மா என்று ஒன்றை மட்டும் பொதுவாகச் சொல்லமுடியாதா என்று தோன்றும் கேள்வியை இவ்வாறு எதிர்கொள்ளலாம். எனது கதைகளில் நாடற்றவனின் ஆன்மாவும் அறமும்  ஆளுகை செய்கிறது.

4     யூதர்களை சித்ரவதை செய்வித்த நாசிகளின் கூடாரங்கள் உலகத்தை உலுக்கின. அப்படியான தன்மை கொண்ட  இலங்கை முள்வேலி முகாம்கள் பற்றி?

யூதர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் நாஜிக்கள் சிங்களர்கள் அல்ல.  ஆம், நாஜிகளை விடவும் கொடூரமானவர்கள் சிங்களப்படையினர்.                           நாஜிகளுக்கு ஒரு ஹிட்லர் தான். இங்கே நிறைய ஜெயவர்த்தனாக்களும், சந்திரிக்காக்களும்,மகிந்த ராஜபக்சக்களும் இருந்தனர். சைவர்களான தமிழர்களைக் கொலை செய்வது  பவுத்தர்களான சிங்களவர்களுக்கு சொர்க்கம் செல்லும் பணியாக பயிற்றுவிக்கப்பட்டது. மகா வம்சத்தில் வருகிற ஒரு வசனமே அதற்கு எடுத்துக்காட்டு. ஒரு சிங்கள மன்னன் போரில் வெற்றிபெற்று,புத்த பிக்குவின் முன்னால் நின்று அழுவான். இதனைப் பார்த்த பிக்கு நடந்த விடயங்களைக் கேட்பார். நான் நடாத்திய போரில் நிறைய மக்களைக் கொன்று விட்டேன், எனக்கு பாவம் செய்த குற்றவுணர்வாக இருக்கிறது என்று மன்னன் சொல்வான். ஆனால் புத்தபிக்கு இவ்வாறு சொல்கிறார். நீ அவர்களைக் கொன்றதற்காக கவலைப்படாதே, எமது மார்க்கத்தை நம்பாத அவர்கள் மிருகத்திலும் கீழானவர்கள். அவர்கள் கொல்லப்படவேண்டியவர்களே ,நீ கவலைப்படாதே என்கிறார். இந்த தேரவாத பவுத்த சிந்தனையே முள்ளிவாய்க்காலிலும் தொடர்ந்தது. இன்றும் தொடர்கிறது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்களத்தில் இருந்து முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டனர். வவுனியாவில் உள்ள செட்டிக்குளம் காடுகளில் அமைக்கப்பட்ட கூடாரங்களுக்குள் போர்க்காயங்களோடும், பட்டினியோடும் சனங்கள் குற்றப்பரம்பரையினர் மாதிரி நடத்தப்பட்டனர். மர்மக்காய்ச்சல்களினால் சனங்கள் சாகத்தொடங்கினார்கள். பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் பலாத்காரங்கள் எண்ணுக்கணக்கற்றவை. காணாமல் ஆக்கப்பட்டவர்களை இன்று வரைக்கும் தேடிக்கொண்டே இருக்கின்றனர். கொளுத்தும் வெய்யிலில் தரப்பால் கூடாரங்களுக்குள் சனங்கள் நோய்மை பிடித்து நலிந்தார்கள். அம்மை நோய் வந்து இறந்து போனார்கள். குளிக்கச் செல்லும் ஆற்றுப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்களின் உடலங்களை அந்த ஆற்றோர காடுகளே அறியும். இன்னும் எத்தனையைச் சொல்ல. இப்படியான துன்பமிகு வாழ்வைச் சுமந்து அலைந்து திரியும் காலத்தில் தான் இந்திய நாடாளுமன்ற குழு இலங்கைக்கு வந்தது. அவர்கள் இப்படியானதொரு முகாமைப் பார்த்துவிட்டுத்தான் முகாம் சிறப்பாக இயங்குகிறதென நற்சான்றிதழ் வழங்கினர். பின்னர் மகிந்த ராஜபக்சவோடு கைகுலுக்கி சிரித்தனர். மகிழ்ந்தனர்.ஹிட்லர் யூதர்களைக் கொன்றொழித்த போது அதற்கு சாட்சியாக இருந்த உலகமே பொறுப்பு. அது போலவே முள்வேலி முகாம்களுக்கும் உலகமே பொறுப்பு. அதற்கு மேலாக இதற்கு நற்சான்றிதழ் வழங்கிய இந்திய நாடாளுமன்ற குழு. இப்படியான சான்றிதழ்கள் மனித நாகரீகத்தையே தலைகுனியச் செய்தது. நான் எல்லாவற்றையும் சுதந்திரமாக பேசும் சூழல் இன்னும் வாய்க்கவில்லை தமயந்தி அக்கா. நான் இப்போதிருப்பது செட்டிக்குளம் முள்வேலி முகாமிற்கு நற்சான்றிதழ் வழங்கியவர்கள் உள்ள நாட்டில் அல்லவா!



அந்நிய நாட்டின் வாடையை முதல்முறை உணர்ந்த தருணம் நினைவிருக்கிறதா?

பாய்க்கப்பல் நடுக்கடலில் கிழிந்து புயலால் அல்லற்படுவது மாதிரி ஒரு இனத்தின் நம்பிக்கை அநாதரவான வெளியில் ஊனமாக்கப்பட்டு நின்றிருந்த காலம். நான் புலம்பெயர்ந்து தமிழ்நாட்டிற்கு வந்தேன். எனக்கு தமிழ்நாட்டின் மீதிருக்கும் அளப்பெரிய மரியாதையும், அன்பும் என்னவென்று சொல்லமுடியாத ஒரு பந்தஉணர்வும் இந்தத் திசையை எனக்கு காட்டியிருக்கலாம். அப்படியாய் இந்த மண்ணில் கால்பதிக்கையில் உடைந்து போன மரக்கொப்பை தாங்கி நிற்கும் இன்னொரு தடியாக இருக்குமென நம்பினேன். அந்த நம்பிக்கை பெரியளவில் பொய்க்க வில்லை. தமிழ்நாடு ஈழத்தமிழ் மக்களையும், அவர்களின் அரசியல் போராட்டத்தையும் எல்லாக்காலங்களிலும் ஆதரித்து வந்திருக்கிறது. இன்றும் என்றுமில்லாதவாறு எழுச்சியான ஒரு பண்போடு ஒருமித்து ஆதரிக்கிறது. ஆனாலும் தாய்மண்ணை பிரிந்து ஒரு அகதியாக இன்னொரு நாட்டிற்கு வருகிற பொழுது ஏற்படும் மனஅழுத்தம் வேட்கைக்கு பழக்கப்பட்ட மாண்புகளுக்கு புரியும். அந்தத் தருணமென் நினைவில் இல்லை.

     இழந்ததாய் இன்னும் நினைவில் நிற்பவை?

இத்தனைக்கு பிறகும் விடுதலையை இழக்கவில்லை.ஆனால் நிறையவற்றை இழந்து தான் விட்டேன். விட்டோம். நான் ஆசை ஆசையாக எழுதி வைத்திருந்த கதைகளும், கவிதைகளும் ஏதோவொரு பதுங்குகுழியில் கைவிட்டு விட்டேன். அந்தக் கதைகள் பெரும்பாலானவை போரின் அகச்சுவடுகளில் பொங்கியவை. எத்தனையோ கவிதைகள். எல்லாம் கைவிடப்பட்டு உயிரோடு மட்டுமே  வெளியேறினேன்.  நான் சேமித்து வைத்திருந்த புத்தகங்களும், திரைப்பட நாடாக்களும் ஏதோவொரு மரத்தின் கீழே புதைத்துவைத்த ஞாபகம். பிறகு எனது பால்யம். பிறகு எனது சிரிப்பு.

முன்னைய காலகட்டங்களில் எம் ஜி ஆர் உதவி செய்தது போல கலைஞரோ மத்திய அரசோ பொருள்/ ஆயுத உதவு செய்திருந்தால் விடுதலைப் புலிகளுக்கு  இத்தனை பின்னடைவு ஏற்பட்டிருக்குமா?

அப்படி எந்த அற்புதங்களும் நிகழ்ந்துவிடும் படியாய் இறுதிக்காலகட்டத்தின் சூழல் இருக்கவில்லை.மதிப்பிற்குரிய எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழீழ விடுதலையை ஆதரித்தார். விடுதலைப் புலிகளின் சமரசமற்ற இலட்சியப் பயணத்தை அவர் உணர்ந்திருந்தார். அன்றைய காலகட்டத்தில் அவர் அளித்த நிதியும், ஆதரவும் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவின. பின்னர் ஈழப்போராட்டம் கண்ட பல்வேறு நெருக்கடிகளும், சவால்களும், ஏமாற்றுக்களும் நிறையவே இருக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளை இந்தியா தடைசெய்ததன் பின்னணிக்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. ஆனால் புலிகள் இயக்ககத்தின் தலைமை அந்தத் தடையை நீக்குமாறு தனது மாவீரர் தின உரைகளில் வேண்டுகோள் விடுத்தபடியிருந்தார். இந்தியாவின் ஆட்சியாளர்கள் அதனைப் ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதிக் காலகட்டங்களில் இனப்படுகொலைக்கு எதிராக தமிழ்நாடு பொங்கியெழுந்து போராடத்தொடங்கியது. அப்போது சகோதரன் முத்துக்குமார் தீயில் தன்னை வேள்வி செய்தார்.அவரின் இறுதிக்கடிதத்தில் எழுதிய வரிகள் தமிழ்நாட்டின் ஏமாற்று அரசியலை வெளிப்படையாகவே சுட்டிக்காட்டியது. போராடுகிற கல்லூரி மாணவர்களுக்கு கட்டாய விடுப்பையும், கைதுகளையும் அப்போது தமிழகத்தை ஆளுகை செய்த மதிப்பிற்குரிய கலைஞர் கருணாநிதி அவர்களின் அரேசே நிர்வகித்தது. ஆனால் அதன் மையத்தில் தான் அவரின் ஒரு நாள் நடந்த சாகும்வரையிலான பட்டினிப் போராட்டமும் நடந்தது. அவர் தமிழீழ விடயத்தில் கொண்டிருந்த பல்வேறு ஆதரவு நிலைகளை வரலாற்றில் படிக்கமுடியும். தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்தமைக்காக திராவிட இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகத்தினரும் இழந்தவைகள் ஏராளம். ஆனால் இறுதிக்கால கட்டங்களில் கலைஞர் முயன்று இருந்திருந்தால் எம்மையெல்லாம் காப்பாற்றி இருக்கலாம், புலிகளை பாதுகாத்து இருக்கலாம் என்றெல்லாம் சொல்லுவதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அவர் தன்னளவில் இன்னும் கொஞ்சம் முயன்றிருக்கலாம் என்று சொல்லலாமே தவிர முயன்றிருந்தால் வென்றிருக்கலாம் என்று சொல்வது, ஈழ இனப்படுகொலையின் பருமனை எளிமைப்படுத்தி விடும். தமிழ்நாட்டின் முதலைமச்சராக இருக்கும் ஒருவரால் வல்லரசுகள் சேர்ந்து செய்யும் திட்டமிடப்பட்ட இனப்படுகொலையை நிறுத்தமுடியாது. ஆனால் மழை விட்டும் தூவானம் போகவில்லை என்ற அவரின் அந்த வாக்கியம் தான் அநாவசியமானது. அவர் இந்த வார்த்தையை சொல்லிக் கொண்டிருந்த போதும் முள்ளிவாய்க்காலில் கிளாஸ்டர் மழை தான் பொழிந்துகொண்டிருந்தது. இந்த அர்த்தத்தில் நீங்கள் உணர்ந்துகொண்டீர்கள் என்றால், நடந்து முடிந்த ஈழ இனப்படுகொலையை ஒரு சர்வதேசே இனப்படுகொலை என்ற சரியான புரிதலுக்கு வருவீர்கள். கலைஞர் கருணாநிதி அவர்களால் ஒரு மாநில முதல்வர் என்கிற வகையில் இந்தப் பிரச்சனையில் பேசியிருக்க முடியுமே தவிர அதனைக் கடந்து எதுவும் செய்ய இயலாது.அன்றைய மத்திய அரசு தனது பழிதீர்க்கும் படலத்தில் உறுதியாகவே இருந்தது.


        உங்கள் பதின்பருவத்து தேவதைகள் பற்றி?

பெரிதாக சிரிக்கத் தோன்றுகிறது. எள்ளிலும் சிறியதான முக மச்சம் கொண்ட ஒரு தேவதை என்னோடு ஆறாம் வகுப்பில் படித்தாள். அவளை நான் தேவதை என்று தான் அழைப்பேன். பின்னர் நான் இடம்பெயர்ந்து வேறொரு இடத்திற்கு போகவேண்டியிருந்தது. ஆதலால் பிரிந்து போவதையும் பாரமாக தூக்கிச்சுமந்து கொண்டேன். பிறகு எத்தனையோ ஆண்டுகள் கழித்து அவளை பார்க்க முடிந்தது. ஒரு கோயில் திருவிழாவில் கண்டேன். அப்போதும் அவளின் முக மச்சம் எள்ளிலும் சிறியதாகவே இருந்தது. அவள் வளர்ந்து தனது கண்களை தோகையாக்கி கொண்டிருந்தாள். தூரவே பார்த்துக் கொண்டு நின்றுவிட்டு வந்தேன். நான் ஒன்பதாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் பெண்ணொருத்தி மீது மையல் கொண்டேன். அவள் கண்கள் பூமியைத் திறக்கும் சாவிகள் மாதிரி துடித்துக் கொண்டே இருக்கும். பின்னர் காதலாகவும் அது தொடர்ந்தது.அவளின் நடை மீதில் எனக்கிருந்த ஒருவிதக் களிப்பு சொல்லால் ஆக்கமுடியாதது. யுத்த நெருக்குதல் காலங்களில் இருவரும் வெவ்வேறு திசைகளில் இடம்பெயர்ந்து இருந்தோம். பிறகு அவளைப் பார்க்கமுடியாமல் போயிற்று. உப்புக்கரித்துப் பெய்யும் மழைத்துளியை பருகியது மாதிரி இருக்கிறது நினைவுகளை மீட்டி உங்களுக்கு பதில் சொல்லுவது.இப்போதும் ஒரு தேவதை தனது கமகங்களை எனக்காக சதா பாடிக்கொண்டிருக்கிறாள்.என்னில் தெரிகிற சந்தோசக் களையை அவள் தான் யாழிலிருந்து மீட்டுகிறாள். யாழ் என்று நான் சொல்வது யாழ்ப்பாணத்தில் இருந்து என்று நீங்கள் விளங்கவேண்டும். 

ஈழத்திற்கென்று ஒரு பிரத்யேக இசைத்தேர்வு, தேர்ச்சி உண்டு. உங்களோடு இசை இசைந்த அனுபவங்கள்?

சிறிய வயதிலிருந்தே நான் சைவத்தின் பால் ஈடுபாடு கொண்டவனாக இருந்து வருகிறேன். யாழ்ப்பாணத்தின் ஏழாலை எனும் ஊரானது எனது தாய்வழி வேர்கொண்ட ஊர். நான் சிறியவயதில் இடம்பெயர்ந்து அங்குதான் வாழ்ந்தேன். கல்வி கற்றேன். அப்போது அங்கிருந்த சைவப்பற்றுறுதி மிக்க சில மதிப்புக்குரியவர்களின் ஆதரவு கிடைத்தது. அறநெறி வகுப்புகளிலும்,பண்ணிசைப் போட்டிகளிலும் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னணியில் சைவத்தினதும் தமிழனதும் செழுமையான பதிகங்களை மனம் லயித்து படிக்கத்தொடங்கினேன்.அதன் விளைவே உங்களை இவ்வாறான கேள்வி கேட்கவைத்தது எனலாம். பதிகங்களை, தமிழ் இலக்கியப்பாடல்களை, அதன் சந்தம் பிசகாமல் பாடவேண்டும் என்பது எனக்கொரு விருப்பம். யாராவது தேவாரத்தை ராகப்பிழையோடு பாடினால் கூட எனக்கு கோபம் வந்துவிடும். நான் நினைக்கிறேன் இது பெரும்பாலான ஈழத்தமிழ் மக்களுக்கிருக்கும் தேர்ச்சி தான். அதற்கு சைவமும் தமிழும் ஒன்றாகப் பின்னிப் பிணைந்ததே காரணம் என்று நினைக்கிறேன்.



 உங்கள் பார்வையில் இலங்கையில்  பவுத்தம் ?

கொல்லாமையை வலியுறுத்திய புத்த பகவானை வணங்கும் சிங்கள பவுத்தர்கள்,இலங்கைத் தீவில் தமிழர்களைக் கொல்வது தான் சொர்க்கத்திற்கு செல்லும் வழியென்று இயங்குகிறார்கள். சுதந்திர இலங்கையை ஆண்ட ஒரு ஆட்சியாளர் ஆயினும் உண்மையான பவுத்தனாக இருந்திருந்தால் தமிழர்களின் அபிலாஷைகளைப் புரிந்திருக்க முடியும். இதனைத் தான் இன்று வரைக்கும் உள்ள மைத்திரி பால சிறிசேனா அரசும் புரிய மறுக்கிறது. நாம் கொல்லப்பட்ட எமக்கு நீதி தா என்று உலகை நோக்கி கேட்கிறோம், சிங்களர்களோ கொல்லப்பட்டதை மறந்துவிடுங்கள் என்கிறார்கள்.இவர்கள் எப்படி புத்த மார்க்கத்தை பின்பற்ற முடியும். பரிநிர்வாணம் அடைந்த புத்தனை தொழுது கொண்டே தமிழ்ப் பெண்களை நிர்வாணப்படுத்திய சிங்கள ஆட்சியாளர்கள் புத்தனை இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கொன்று புதைத்துவிட்டார்கள். இலங்கைத் தீவு முழுக்க பவுத்த நாடாக இருக்கவேண்டும் என்பதைத் தான் கொழும்பின் ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள்.இனப்படுகொலைக்கு பிறகு தமிழர்கள் வழிபடும் ஆலயங்கள் இடிக்கப்பட்டு இரவோடு இரவாக புத்தர் சிலைகள் நிறுவப்படுகின்றன. தமிழர் நிலப்பரப்பில் நிகழ்த்தப்படும் பவுத்த-சிங்கள மயமாக்கலை எழுத்தாளர்  தீபச்செல்வனின் “தமிழர் பூமி”( எதிர் வெளியீடு)  என்கிற கட்டுரை நூல் மிக ஆழமாக பதிவுபடுத்தியிருக்கிறது.பவுத்தம் என்கிற நெறிமுறைக்கு எதிராக அதனையே பின்பற்றும் சிங்களவர்கள் செயற்படுகிறார்கள். அங்கு பவுத்தம் இருக்கிறது. அதன் கையில் அமைதிக்குப் பதில் வாள் இருக்கிறது.ஆசையின்மைக்கு பதில் தமிழ் ரத்தம் இருக்கிறது.

    ஈழ விடுதலை வரலாற்றில் திலீபனின் தடயங்கள் எவ்வவாறு பதிவாகியுள்ளன?

திலீபன் அண்ணையின் பட்டினிப்போராட்டம் புலிகளின் இன்னொரு முகத்தை உலகுக்கு பறைசாற்றியது.மகாத்மாவின் புதல்வர்களோடு அவரின் மொழியிலேயே பேசத் துணிந்த திலீபனுக்கு இறுதியில் மரணத்தைத் தான் பரிசளித்தது இந்தியா. அஹிம்சைக்கு இவ்வுலகில் இடமில்லை என்று ஈழத்தமிழ் மக்களுக்கு இந்தியாவும் உணர்த்திய நிகழ்வு தான் திலீபன் அண்ணாவின் போராட்டம். அதனை அன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நன்றாகவே உணர்ந்திருந்தார்கள். நல்லூர் வீதியில் திலீபன் பட்டினிப்போராட்டத்தில் பங்கெடுத்த சனத்திரளை காணொளிப்பதிவுகளின் மூலம் பார்த்த தலைமுறையே என்னுடையது.அந்தக் காட்சிகளை கானொளியில் பார்க்கிற போதே மக்களின் கொந்தளிப்பை உணரமுடியும். எனக்கு ஆங்கில ஆசிரியராக இருந்தவர் திலீபன் அண்ணாவின் போராட்டக் களத்திற்கு ஒவ்வொரு நாளும் போகிறவாவாம்.அப்போது அவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி.ஒவ்வொரு நாளும் அந்த சனத்திரளுக்குள் போய்விட்டு திரும்பிவருவதை ஒவ்வொரு திலீபன் அண்ணாவின் நினைவு தினத்தின் போதும் தனது உரையில் குறிப்பிடுவார் ஆங்கில ஆசிரியர். திலீபன் அண்ணாவின் பட்டினிப் போராட்டம் புலிகள் இயக்கம் என்பது ஆயுத வன்முறையில் அதி காதல் கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டையே தவிடுபொடியாக்கியது. அவர் மக்களின் ஒருமித்த புரட்சியை வேண்டினார். மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்று மக்களை நோக்கி உரக்கக் கத்தினார். மக்கள் எல்லோரும் ஆர்ப்பரித்தார்கள். அவர் உயிர் கரையும் போது கூடிநின்ற சனசமுத்திரம் வடித்த கண்ணீரைக் கூட இந்தியா மதிக்கவில்லை. திலீபனுக்காய் பெண்கள் கூடி நின்று அழுதார்கள். வித்துடலாய் கிடந்த திலீபன் அண்ணாவின் கால்களை தமது கண்களில் ஒத்திக் கொண்டு அழுதார்கள் ஈழத்தாய்மார்கள். திலீபன் அகிம்சையின் தனித்துவ போராளி. புலிகள் இயக்கத்தின் மென்மையானதொரு நடவடிக்கை என்று கூட சொல்லலாம். இன்றைக்கு கூட எங்களூரில் யாராவது மெல்லியதாக கொஞ்சம் பல்லு மிதப்பாக இருந்தால் கூட திலீபன் மாதிரி இருப்பார் என்று தான் குறிப்புச் சொல்லும் பழக்கம் உண்டு. நல்லூர் வீதியில் திலீபன் மட்டும் கொல்லப்படவில்லை. மகாத்மாவும் அவரின் அகிம்சையும் தான் கொல்லப்பட்டது.

    உங்கள்  இள வயதில் என்ன அடக்குமுறைகளை எதிர்க்க வேண்டியிருந்தது?

எனக்கு இராணுவத்தின் சோதனைச்சாவடிகளைக் கடக்கும் போதெல்லாம் ஒருவித அருவருப்பு தோன்றும். அவலமான இந்த வாழ்க்கையை அழிக்க வேண்டுமென்று நினைத்துக்கொள்வேன்.நான் படித்த பள்ளிக்கூடமொன்று இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்தது. காலையில் அனுமதிக்கப்படும் மாணவர்கள் மாலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் அங்கிருந்து வெளியேற வேண்டுமென்று இராணுவம் உத்தரவு பிறப்பிக்கும். இப்படியான எத்தனையோ அடக்குமுறைகளை எனது தலைமுறையே சந்தித்துக்கொண்டு தானிருக்கிறது.இராணுவத்தின் மீது எனக்கிருக்கும் கசப்பான அனுபவங்களை பேசவல்ல காலத்தில் இன்னும் நிறையவே கதைக்கலாம்.

கவிதையின் குருதி என்ற சொற்றொடர் எழுதுகிறீர்கள்,எங்கிருந்து கிளைத்தது அந்த வலி நிறைந்த சொல்?

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே  என்கிற தொல்காப்பியம் மாதிரி, என் எல்லாச்சொல்லும் போர் குறித்தனவே. முள்ளிவாய்க்கால் எனது விளைநிலம். அங்கிருந்து தான் வார்த்தைகள் எழுகின்றன. அங்கிருந்து தான் எனது வானத்துச் சூரியன் உதிக்கிறது. துயர் உற்று சாய்ந்து முறியும் ஒரு பேதைமை எனக்கு வாய்க்கவில்லை. நான் குருதி தோய்ந்து திரும்புகையில் நிலத்திலிருந்து துடித்துக் கொண்டிருந்த லட்சோப லட்ச உயிர்களின் மூச்சுக்காற்று வார்த்தைகளாய் என்னில் ஏறிவிட்டன. எனது தலைமுறையின் இலக்கியம் இங்கிருந்து தான் துடித்துப் பிறக்கிறது.நான் கவிதைகளை எழுதிமுடித்து விட்டு என் கால்களையும் கைகளையும் கழுவ வேண்டும். ரத்த மணமும் வெடிலும். எல்லாம் என் தேசத்தவர்களுடைய ரத்தம். புதைக்காமல் அப்படியே விட்டுவிட்டு வந்த குழந்தைகளின் ரத்தம். கவிதைகளை எழுதி எழுதி மனஅழுத்தம் கொண்ட ஒருவனாக ஆகிவிடுவேனோ என்றொரு பயத்தினால் தற்காலிகமாக கவிதைகள் எழுதுவதை ஒதுக்கிவிட்டேன். கவிதையின் குருதி என்றொரு வார்த்தையை நான் எங்கே எழுதினேன் என்று ஞாபகம் இல்லை. ஆனால் இது எனது வார்த்தை தான். ஏனெனில் நானும் கவிதையின் குருதியே.

1  தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவல் குறித்து?

தமிழீழர் இலக்கியத்தின் வீரியத்தை இந்த நாவல் அடையாளம் காட்டியிருக்கிறது. ஈழத்தமிழ் மக்கள் பலியாடுகளாக ஆக்கப்பட்ட மாபெரும் படுகொலைக்களத்தை அதன் இயல்பு மீறாமல் தனது படைப்பின் வழியே சாத்தியப்படுத்தியிருக்கிறார். அந்த நாவல் பரவலாக வாசிக்கப்பட்டிருக்கிறது.தமிழீழர் இலக்கியம் ஜ்வாலை மாதிரி இப்பிரபஞ்சம் எங்கும் பற்றிப்படரப் போகிறது என்பதற்கான அறிவுப்புக்களில் பார்த்தீனியமும் ஒன்று. இந்த நாவலின் முழு விழிப்பும், உந்தலும் உண்மைகளால் மட்டுமே ஆனவை. இந்த நாவலை இந்தியர்கள் அனைவரும் தத்தமது தாய்மொழிகளில் படிக்கவேண்டுமென்கிற ஆசை எனக்கிருக்கிறது. ஆனால் அதனைச் சாத்தியப்படுத்தும் வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றன என்பது தான் கவலை.

1   ஈழ போராட்டத்திலிருந்தவர்களின் காதல் சுவடுகள் ஏதாவது?

நிறையவே இருக்கின்றன. எனக்குத் தெரிந்து காதலித்து கலியாணம் செய்த போராளிகள் கணவன்,மனைவியாக இருந்து கொண்டு தாம் காதலித்த கதைகளையும் சம்பவங்களையும் விவரிக்கும் விதமே தன்பாட்டில் தண்ணீர் சிதறுவது மாதிரி வடிவாய் இருக்கும். அவர்கள் மண்ணுக்காய் தமது உயிரையும், உடமையையும் அர்ப்பணித்தவர்கள். அவர்களுக்குள் இருக்கும் காதலும்,அன்பும் தேம்பி ஒளிர்வதை பார்த்திருக்கிறேன். நிறையக் காதல் சுவடுகளை அந்த நிலம் தனக்குள் புதைத்து வைத்திருக்கிறது.எங்கள் குடும்பத்திற்கு நெருக்கமான போராளி ஒருவர் இயக்கத்தில் போராளியாக இருந்த அக்காவைத் தான் விரும்பினவர். அவருக்கு விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் வீட்டிற்கு வருவார். தான் காதலிக்கும் பெண்ணைப் பற்றி அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருப்பார். நான் அவரைப் பார்த்து நக்கலாக சிரித்து காதல் முத்திட்டுது  என்று சொல்லுவேன். அவர் காதலிப்பதை இயக்கத்தின் தலைமைக்கு தெரிவித்து ஐந்து மாதங்கள் கழித்து திருமணம் நடந்தது. அந்த அக்கா பொறுப்பில் இருந்தவா என்றபடியால் திருமணத்திற்கு பிறகும் அவர்கள் இயக்கப்பணியில் இருந்தார்கள். அந்தக் காலத்திலும் கடிதத்தின் வழியாக அவர்கள் காதலித்தனர். பின்னர் அவர்களுக்கு விடுப்பு கிடைத்தது. அவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தையை அம்மா தான் தூக்கி வளர்த்தாள். இறுதிக் காலத்தில் அந்த அண்ணா வீரச்சாவு அடைந்துவிட்டார்.அந்த அக்கா உயிரோடு இருப்பா என்று நினைக்கிறேன்.

சிவரமணியின் “முனைப்பு” என்கிற கவிதையில் அவர் குறிப்பிடும் அசுத்தப்படுத்தும்  கரம் எது?

இந்தக் கவிதை எழுதப்பட்ட காலத்தில் சிவரமணியோடு இருந்தவர்களுக்கே இந்தக் கரம் எதுவென்று தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. சிவரமணி அவர்களின் கவிதைகள் தமிழ்க் கவிதைப் பரப்பில் ஏற்படுத்திய அதிர்வுகள் லேசில் அடங்காதது. ஈழப்போராட்டத்தின் தொடக்க கால மர்மங்களில் சிவரமணியின் தற்கொலையும் ஒன்றாகிவிட்டது. ஆனால் ஆத்மாவின் உணர்ச்சிகளை கொன்ற இந்தக் கரங்களை நம்மால் அறியமுடியாமலே போயிற்று. “யுத்த கால நெருக்குதல்களில்”என்று தொடங்கும் சிவரமணியின் கவிதைகள் ஈழத்தமிழ் கவிதைப் பரப்பில் மிக முக்கியத்துவமான கவிதை.

      உங்கள் ஆதர்சங்கள்?

எனக்கு அப்படி யாரும் இருப்பதில்லை. நானும் நினைத்துக் கொள்வதில்லை. சிறிய வயதில் புதுவை இரத்தினதுரையின் கவிதைகளை படிப்பேன். அவரின் கவிதைகளின் மூலமே ஒருவர் தமிழீழ நிலவியலை புரிந்துகொண்டுவிடலாம். அவரின் கவிதைகளை மனப்பாடம் எல்லாம் செய்துவைத்திருந்தேன். இப்போதும் நினைவில் தங்கி நின்று எப்போதேனும் துள்ளி வந்துவிடுகின்றன. களத்திற்குள் நின்று கவிதை பாடிய நவீன புறநானூற்றுப் புலவன் புதுவை இரத்தினதுரை தான். பிறகு காசி ஆனந்தனின் கவிதைகளை ஒலிவடிவங்களாக கேட்கமுடிந்தது. போராளி அக்காக்கள் எழுதுகிற படைப்புக்களை விரும்பிப் படிப்பேன். அப்படித்தான் மலைமகள் கதைகள் அறிமுகமாயின. அம்புலி என்றொரு கவிஞருடைய கவிதைகள் என்னை வியப்பில் ஆழ்த்தும். நவீன கவிதைகளில் அவரின் கவிதைகள் தனித்தன்மை வாய்ந்தவை மட்டுமல்ல,அசலானவையும் கூட. போராளிகளின் படைப்புக்களை விரும்பிப்படிப்பேன்.
   
    இன்னொரு நாட்டில் புலம்பெயர்ந்து  வாழ்வது வரமா? அவலமா?

அவலத்திலும் அவலம்.
அவலத்திலும் அவலம்
அவலத்திலும் அவலம்
என்று மூன்றுதடவையல்ல, மூவாயிரம் லட்சம் தடவைகள் சொல்கிறேன்.
1  
     இந்திய ஈழ முகாம்கள் பற்றி?

மனம் கொதிக்கிறது. வந்தாரையெல்லாம் வாழ வைக்கும் தமிழ்நாடு ஈழமக்களை மட்டுமேன் குற்றப்பரம்பரை போல் கூடாரங்களுக்குள் வைத்திருக்கிறது. அந்தக் கரையில் உயிருக்கு பயமென்று கடல் தாண்டி இந்தக் கரைக்கு ஓடிவந்தால் இந்தக் கரை மாண்பையே பறிக்கிறது.அய்யோ எத்தனை அவலங்களை ஈழத்தமிழ் மக்களுக்கு இந்த உலகம் தந்துகொண்டிருக்கிறது.தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதிகள் முகாம்கள் ஏன் இங்குள்ள ஊடகங்களுக்கு தெரிவதில்லை. இங்குள்ள அமைப்புக்களுக்கு தெரிவதில்லை என்று நான் எல்லோரிடமும் தான் கேட்கிறேன். தொப்புள் கொடிகள் என்று மேடைகள் தோறும் குரல்கொடுக்கும் தமிழ்தேசிய செயற்பாட்டாளர்கள் இந்த முகாம்கள் பற்றி வாயே திறக்க மாட்டார்கள் என்கிறார்களே. பின்னர் எப்படி வவுனியாவில் உள்ள முள்வேலி முகாம்கள் குறித்து கரிசனை கொள்ள முடியும். உனது வீட்டில் அடிமையை வைத்துக் கொண்டு வெளியே ஆண்டைகளுக்கு எதிராக போராட்டம் செய்வது போலாகிவிடாதா? எத்தனை எத்தனையோ முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லை. மக்கள் குடிக்கும் தண்ணீரைக் கூட காசுக்கு வாங்க வேண்டிய அவலச்சூழல்.ஆனால் இங்கே வாழும் திபெத்திய அகதிகளின் நிலையோ அதிஸ்டவசமானது. அவர்கள் சீனாவுக்கு எதிரானவர்கள்,எனில் இந்தியாவுக்கு நண்பர்கள். நாம் இலங்கைக்கு எதிரானவர்கள் என்றால் இந்தியாவுக்கு எதிரானவர்களா? இல்லையே நாம் இந்தியாவின் போரைத்தானே சுமந்தோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். பின்னர் ஏன் இந்தியா ஈழத்தமிழ் அகதிகளை பாரபட்சம் செய்கிறது. முகாம் பற்றிய செய்திகளை அங்கு நடக்கும் பிரச்சனைகளைப் பற்றி தொ.பத்திநாதன் என்கிற சகோதரன் எழுதிய தமிழகத்தின் ஈழ அகதிகள் கட்டுரைத் தொகுப்பு (காலச்சுவடு பதிப்பகம்) மிக முக்கியமான ஆணவம். அதனைப் படித்துப் பாருங்கள். ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டில் சுமக்கும் அவமானங்களை நீங்களும் அறிவீர்கள்.
எனது முகாம் பற்றிய கதையொன்றில் இப்படியொரு உரையாடல் வரும்.

நாம் தமிழ் பேசக் கூடிய அகதி இனமா நந்திதா?
இல்லை, நாம் தமிழ் பேசுவதால் அகதி இனம்.

தமிழ்தேசியக் கருத்தியல் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை எவ்வாறு புரிந்துகொள்கிறீர்கள்?

சிலர் தமிழ்தேசியத்துவத்தை உயர்குடிச் சாதிகளின் லட்சியம் என்கிறார்கள். இன்னும் சிலர் இது பகற்கனவு என்கிறார்கள். அதிலும் சிலர் பேச்சு மட்டும் தான் செயல் இல்லை என்கிறார்கள். இந்தக் கருத்துக்கள் யாவும் அவரவர் சார்ந்திருக்கும் அடையாள அரசியல்களை பொறுத்தே வெளிவருகின்றன. தேசியம் தன்னை சாமானியர்களுக்கு ஒப்படைத்திருக்கிறது.ஜனநாயகத்தை தேசியம் வலியுறுத்தும் அளவுக்கு வேறு எந்தக் கருத்தியலும் வலியுறுத்தவில்லை.தேசியம் என்கிற வரலாற்றின் புதிய அம்சத்தை புரிந்து கொள்ளவே புதிய மனமும், புதிய எண்ணமும், புதிய சிந்தனையும் வேண்டும்.தமிழ் இனம் கடுமையானதொரு சமூக அமைப்புக்களை பேணும் பழமை எண்ணங்கள் கொண்டதாக சிற்சில விடயங்களில் தன்னை இப்போதும் ஈடுபடுத்திக்கொண்டே இருக்கிறது. மதமும் சாதியும் இதில் பெரிய பீடையாக இருக்கின்றன.ஒரு தேசிய இனம் என்கிற வகையில் அதன் இயல்பிலேயே சமூக ஒருமைப்பாட்டையும் ஜனநாயகத்தையும் அது பெற்றுவிடும்.ஆனால் தமிழ் இனத்தில் இந்த இடம் இன்னும் முழுமையாக எட்டப்படவில்லை. அதற்காக தமிழ்தேசியம் தன்னை தயார்படுத்தும். தமிழ்தேசிய அரசியலை நகைச்சுவை செய்வது போல தமிழ்நாட்டின் சில இடதுசாரிப் புரட்சியாளர்கள் அவ்வவ்போது தமது கருத்துக்களை உதிர்க்கிறார்கள். அது அவர்களின் லாபங்கள் பற்றிய பயத்தில் தோன்றும் கருத்துக்கள். தமிழ்தேசியத்துவம் என்பது ஜனநாயக விழுமியங்களோடு தமிழர்களின் நிலங்களில் தோன்றி நெடுங்காலம் ஆகிவிட்டது. சீன தேசியத்தையும்,ரஷ்ய தேசியத்தையும் ஏற்றுக்கொண்டவர்களால் தமிழ்தேசியத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்றால் அதன் காரணம் கண்டுபிடிக்கும் படியான பரகசியங்களோடு இருக்காதல்லவா. மொட்டை மாடியில் நித்திரை கொள்கிறவன் திட்டுவான் என்பதற்காக சூரியன் உதயமாகாதா? தமிழ் தேசியத்துவத்தின் எழுச்சியாகவே தை எழுச்சியை என்னால் பார்க்கமுடிகிறது.

1   புலி எதிர்ப்பு வாத அரசியலை அதிகமாக கேள்விக்குட்படுத்திக் கொண்டே இருக்கிறீர்கள்,இன்றைக்கு புலி எதிர்ப்பு வாதத்தின் நிலை என்ன?

உளுத்துப் போன முருங்கை மரம்மாதிரிப் போய்விட்டது. புலி எதிர்ப்பு வாதம் என்கிற இந்த வாக்கியத்தில் எவ்வளவு பணப்புழக்கம். எவ்வளவு உல்லாசம். தமிழீழ விடுதலைப் புலிகளையும், தமிழீழ விடுதலையையும் எடுத்த வீச்சில் குற்றம் சுமத்திக்கொண்டு காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டு ராஜ வாழ்க்கை வாழலாம்;அப்படி வாழ்ந்து கொண்டுமிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் பொய்களும் புரட்டுகளும் உக்கி விழுந்து விட்டன. ஷோபா சக்தியின் பெரும்பாலான சிறுகதைகளில் புலிகள் குறித்து எழுதப்பட்ட கற்பனைக்கும் எட்டாத பொய்களையும் சம்பவங்களையும் தமிழ்நாட்டின் வாசகப்பரப்பு  ஏற்றுக் கொண்டிருந்திருக்கிறதே என்கிற கவலை தான் எனக்கு. ஒரு ஈழத்தமிழனாக இருக்கும் ஷோபா சக்தி இராணுவத்தின் அநீதிகளை எழுதியதைப் பார்க்கிலும் புலிகள் செய்ததாகச் சொல்லி எழுதிய கதைகளே அதிகமாயிருக்கும். என்னையோ, குணாகவியழகனையோ, வெற்றிச்செல்வியையோ முள்ளிவாய்க்கால் கொன்றிருந்தால் இன்றைக்குவரைக்கும் குண்டு டயானா தான் உண்மையாய் இருந்திருக்கும். குணா கவியழகனின் மூன்று நாவல்களும் புலிப்போராளிகள் யார் என்று உலகுக்கு உணர்த்திற்று.இங்கே BOX கதைப்புத்தங்களுக்கு அதன் பிறகு வேலையில்லை. இலக்கியத்தில் இன்னும் சிலர் புலிஎதிர்ப்பு வாதக்கதைகளை எழுதுவதன் மூலம்  காலச்சுவடு போன்ற பத்திரிக்கைகளில் இடம்பெறுகின்றனர்.அது கதைகளாக இருக்கவேண்டுமென்று அவசியம் கிடையாது. அறிவுஜீவிப் பரப்பில் தம்மை இடதுசாரிகளாகவும், செயற்பாட்டாளர்களாகவும் அடையாளப் படுத்திக் கொள்ளும் அ.மார்க்ஸ் போன்றவர்கள் கண்ணில் பீழை சாறினாலும் புலிகளே காரணம் என்பார்கள். இப்போது அந்தச் சாயங்களும் வெளுத்துவிட்டன. இப்போது புலி எதிர்ப்பு வாதிகள் என்றொரு தரப்பே இல்லாமல் போயிற்று என்று கூட சொல்லலாம்.

1  நீங்கள் திரைப்படம் இயக்கும் முன்முயற்சிகளில் இருக்கிறீர்கள், ஈழக்கதையைத் தான் இயக்கப்போகிறீர்களா?

ஈழக் கதையை இயக்கவேண்டுமென்கிற ஆசை இருப்ப்பினும் நான் இப்போது தயார்படுத்தியிருக்கும் கதை ஈழத்தை மையைப்படுத்தியது கிடையாது. மிகவேகமாக ஒரு திரைப்படத்தை இயக்கவேண்டும் என்கிற படைப்பாளியின் மனம் புரவியின் குளம்படிகளாய் எனக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. அதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறேன்.தயாரிப்பாளர்களைத் தேடும் பணி என்பது தான் இங்கு கொடூரமானது. எல்லா திரைப்படக் கலைஞர்களும் தமது வாழ்வில் சந்தித்த பொருளாதார நெருக்கடியை இப்போது தான் சந்திக்கத தொடங்கியிருக்கிறேன். வெகுவிரைவில் ஒரு திரைப்படம் தான்.

    நிறைய சிறுகதைகளை ஒரு குறுகிய காலகட்டத்தில் எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள் , அது எப்படி வாய்க்கிறது?

என்னை நானே வருத்தத்தொடங்குவதன் மூலமாய் என் எழுத்தும் தொடங்குகிறது.அப்படியென்னை ஆசுவாசப்படுத்தும் ஒரு கதையைக் கூட என்னால் எழுதமுடியாது. அவ்வளவு இரத்த அழுத்தமும் இதயத்தை வந்தடைகிறது. எனது இரண்டாம் லெப்டினன்ட் சிறுகதைத் தொகுப்பை படித்த வாசகர்கள் பலர், எனக்கு அனுப்பிய கடிதங்கள் இப்போதும் இருக்கின்றன. அவைகள் நடுங்கும் கரங்களாலும், காய மறுக்கும் கண்ணீராலும் எழுதப்பட்டிருக்கின்றன. சிலர் நேரில் பார்க்கும் போதே என்னிடம் கூறினார்கள். சகோதரியான நடிகை ஷீலா ராஜ்குமார் அந்தத் தொகுப்பில் இருக்கும் கரும்புலி என்கிற முதல் கதையையே படித்துமுடித்துவிட்டு அந்தப் புத்தகத்தை திறக்க பயமாக இருக்கிறதென கூறினார்.அந்தக் கதைத் தொகுப்பு முழுக்க உடல் சந்தித்த வதைகளும்,துன்பங்களுமே நீண்டிருந்தன. “முஸ்தபாவை சுட்டுக்கொன்ற ஓரிரவு”என்னுடைய இரண்டாவது சிறுகதை நூல்,அந்தத் தொகுப்பும் அப்படித்தான். இப்போது வெளியாகியிருக்கும் பான் கீ மூனின் றுவாண்டா நூலில் போர் நிலத்து மனிதர்களின் உளவியலை பெரும்பாலான கதைகளில் பதிந்திருக்கிறேன். நான் ஒரு கவிதையில் குறிப்பிட்டது போல யுத்தம் என் மனத்துக்குள் முடியவில்லை என்பதை எழுத்துக்கள் தான் சாட்சிப்படுத்துகின்றன.

-நன்றி மின்னம்பலம் 2017 டிசம்பர் 10

Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்