குற்றங்கள் பற்றிய வரைபடம் - 2



தாயகத்தில் காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் வீதிகளுக்கு வந்ததையடுத்து தமிழ் அரசியல்வாதிகள் குலைநடுங்கிக் கிடக்கிறார்கள். இந்த குலை நடுக்கம் அப்பாவி மக்களின் கண்ணீருக்கு பயப்பிடும் அநீதியாளர்களுக்கு வரவேண்டியதுவே. நடுங்கும் தமிழ் அரசியலாளர்கள் யாவருமே அநீதியாளர்கள் தான். மாபெரும் யுத்த அழிவிலிருந்து  பெயரளவில் உயிர் தப்பிய மக்களின் அவலங்களை கிஞ்சித்தும் பொருட்படுத்தாத தமிழ் மிதவாதத்தின் கபடச் சாயம் தன்னெழுச்சியான மக்கள் போராட்டக் களத்தில் கரைந்து கொண்டேயிருக்கிறது. மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத்தொடங்கியதை சிங்கள அரசியலாளர்கள் எப்படி ஏற்றுக்கொள்ளவில்லையோ  அதைவிட பன்மடங்கு அதிகமாக மக்களையும் மக்கள் போராட்டத்தையும் வெறுப்போடும் ,அச்சத்தோடும் அணுகும் தமிழ்அரசியலாளர்கள் இப்போது நேரடியான அர்த்தத்தில் மக்களுக்கு எதிரியாக  உருப்பெற்றிருக்கிறார்கள்.


ஆயுதப்போராட்ட எழுச்சிக்கு முன்னர் தனிநாடு கோரி மேடைகள் தோறும் புரட்சியாளராய் முழங்கிய மாவை சேனாதிராஜா இன்று சமஸ்டி கோரும் தமிழ்தேசியக் கூட்டமைப்பில் சிரித்தபடி காட்சியளிக்கிறார். புதியதாக தமிழ் அரசியலுக்குள் புகுந்த வெள்ளைநிறத்து லக்ஸ்மன் கதிர்காமரான சுமந்திரன்,மாவை சேனாதிராஜாவிற்கு ஆலோசனை வழங்குகிறார். இனப்படுகொலை உள்ளக விசாரணைக்கு காலஅவகாசம் வழங்கலாம் என ஒப்புதல் அளிக்கிறார் சம்பந்தன். இப்படியாய் தொடரும் அநீதிகளும் ஏமாற்றங்களும் இன்றைக்கு மக்களை வீதிக்கு இழுத்துக்கொண்டு வந்திருக்கிறது. அரசியல் நாடகங்களைப் பார்த்துச் சலித்துப்போன மக்கள் தமது அமைதியைக் கலைத்து இருக்கிறார்கள். உம்மை நம்பி எமக்கொன்றும் இல்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை மக்கள் கைவிட்டு விட்டார்கள். சம்பந்தன் கொழும்பில் கோப்புகளை வழங்காமல், மைத்திரியைச் சந்தித்து கோரிக்கை வைக்காமல் புதுக்குடியிருப்பில் நாற்பது கிலோமீட்டர் காணிகளை வான்படையிடமிருந்து மக்கள் மீட்டிருக்கிறார்கள். ஈழத் தமிழ் மக்களின் ஆன்மபலம் மீண்டும் வரலாற்றில் நிரூபிக்கப்பட்ட சிறியதொரு சம்பவம் கேப்பாப்புலவு போராட்டம். மக்கள் இரவுபகல் பாராதொரு களத்தைத் திறந்தார்கள். குழந்தைகளும் ,பெண்களும் வீதிகளிலேயே பலநாள் நின்றார்கள். “எமது நிலத்தை விட்டு வெளியேறு வான்படையே” என்றும்  “எமது நிலம் எமக்கு வேண்டுமென்றும் மக்கள் கோசங்களால் கொந்தளித்தார்கள். 

உண்மையில் கேப்பாப்புலவு நிலமீட்பு போராட்டம் இராணுவ அர்த்தத்தில் கூட  கவனிக்கப்பட வேண்டியது தான். மக்கள் எந்த ஆயுதங்களுமின்றி சிங்கள அரசின் வான்படையை நாற்பது கிலோ மீட்டர் பின்னுக்குத் தள்ளியிருக்கிறார்கள். இந்த போராட்டத்தின் வெற்றி இன்றைக்கு வேறொரு பண்பை எட்டியிருக்கிறது. மக்கள் தமது பிரச்சனைகளை சாத்வீக அறத்துடன் எதிர்கொள்ள தொடங்கியிருக்கின்றனர். மக்களுக்கும் நேரடியான எதிரியாகவிருக்கும் இனப்படுகொலை அரசுக்குமிடையே இப்போது அரசியல் தரகர்கள் இல்லை. அரசியல் தரகர்கள் என்று நான் விளிப்பது தமிழ் தேசியக்கூட்டமைப்பைத் தான் என்று குறிப்பிட்டு சொல்லவேண்டிய அவசியமிருக்காது.சம்பந்தனிலிருந்து சரவணபவன் வரைக்கும் அல்லற்படும் மக்களின் கண்ணீரை தரகு வணிகம் செய்யபவர்கள் தாம். இதனை இப்போது எவர்மறுத்தாலும் இனியெப்போதும் வரலாறு மறுக்காது.


இந்த நிலையில் ஈழத்தில் மக்களால் தொடர்ந்து நடத்தப்படும் போராட்டங்கள் மிகமுக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்துள்ளன. காணாமல்போனவர்கள் எங்கே என்கிற கோசத்தோடு பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் கண்ணீர் மல்க தம்மகவுகளின் புகைப்படங்களை கைகளில் சுமந்துநிற்கும் துயரத்தை கூட கண்காட்சி பாணியில் வந்துபார்த்துவிட்டு செல்லும் அரசியலாளர்களால் தமிழ்மக்களுக்கு எந்தவொரு நன்மையும் எட்டாது.வடமாகாண சபையின் முதல்வராக வலம்வந்து கொண்டிருக்கும் விக்கினேஸ்வரன் ஒரு போராட்டக்களத்திற்கு செல்கிறார், அங்கு காணாமலாக்கப்பட்ட பிள்ளைகளை மீட்டுத்தரும்படி பெற்றோர்கள் கைநீட்டிக் கதறுகிறார்கள்.  போராட்டக்களத்தில் முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு கதிரை போடப்பட்டிருக்கிறது. அவர் அதிலிருந்தபடியே கதறியழும் தந்தை ஒருவருக்கு ஆறுதலளிக்கும் வகையில் கரங்களை நீட்டுகிறார். முதல்வருக்கு அருகில் இருக்கும் இன்னொரு கதிரையில் ஐங்கரநேசன் அமர்ந்திருக்கிறார். மக்கள் கதறியழுகிறார்கள். மக்களின் கண்ணீருக்குள் கதிரை போட்டிருக்கும் இந்த அவலமான பண்பு இந்த இருவரிடம் மட்டும் தானிருக்கிறது என்று பொருள்கொள்ளத் தேவையில்லை. 




விக்கினேஸ்வரன் முதல்வராக பொறுப்பேற்ற காலகட்டத்தின் தொடக்க நாட்களில் தமிழ்மக்களின் பிரச்சனைகளை அறிவார்ந்த தளத்தில் கொண்டு சேர்க்கும் விதமாக தனது உரைகளையும் அறிக்கைகளையும் சந்திப்புக்களையும் வடிவமைத்தார். அன்றைய சூழலில் புதிய நம்பிக்கையாக தமிழ்மக்கள் மத்தியில்  தோன்றிய விக்கினேஸ்வரன் சொற்பகாலத்தில்  தனது வேகத்தை செட்டை கழற்றினார். எமது அரசியல் களம் கோருகிற அறிவார்ந்த, சத்தியபூர்வமான, மக்களுக்காய் இயங்கக்கூடிய ஒரு முழுநேர அரசியலாளனை ஈழத்தமிழ் மிதவாத பாரம்பரியம் இன்னும் பெறவில்லை. ஓய்வுகாலத் தலைவர்களையும், பகுதிநேர அரசியல் தலைமைகளையும் சுழற்சி முறையில் பெற்றுக்கொண்டேயிருக்கும் தமிழ்மக்களின் தலைவிதியை நினைத்து விதியே நொந்துபோகும். தலைமையற்ற அரசியலும், அரசியலற்ற தலைமையும் வேட்டையாடும் ஒரு இனக்கூட்டமாக ஈழத்தமிழ் மக்கள் வாழத்தலைப்பட்டு விட்டார்கள்.அப்படியானதொரு அண்மையான உதாரணம் முதல்வர் விக்கினேஸ்வரன். புலிகள் இயக்கம் இராணுவ வீழ்ச்சி அடைவதற்கு முந்தைய நாள் வரைக்கும் சந்தேக நபர்களாக கைதுசெய்யப்படும் தமிழ் இளைஞர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் பால் தனது தீர்ப்புகளால் தண்டனை வழங்கிய இலங்கையின் நீதிவான் தமிழர் இனப்பிரச்சனையில் எந்த மாற்றத்தையும் செய்துவிடமுடியாது. இனப்படுகொலைக்கு பின்னான ஈழத்தமிழர்களின் அரசியல் இடைவெளியை விக்கினேஸ்வரன் என்கிற பிம்பக்காற்று நிரப்பியது என்ற போதிலும் பிம்பம் உடைந்து தான் போகும், அதுவே அதன் இயல்பு. இன்றைக்கு விக்கினேஸ்வரன் அமைதிக்கு திரும்பியிருக்கிறார். அந்த அமைதிக்கு பெயர் அர்ப்பணிப்பின்மை. இப்படித் தான் தோன்றிமறையும் நீர்க்குமிழிகளை நினைவுபடுத்தும் தலைவர்களையும், அரசியல்வாதிகளையும் ஈழச்சமூகம் கடந்து நின்று போராடவேண்டியிருக்கிறது.

அண்மையில் ஐரோப்பிய நாடொன்றில் புலம்பெயர்ந்து வாழும் ஒருவரை தமிழகத்தில் சந்திக்க நேர்ந்தது. அவர் தனது கதையின் தொனியை  புலிகள் இயக்கத்தின்  போராளியின் பாவனையோடு தொடங்கினார். “எங்கட போராட்டம் உறுதியாய் வெல்லும், அண்ணை திரும்பி வந்ததும் சிங்களவனுக்கு அடியிருக்கு” என்று சொல்லிக்கொண்டேயிருந்தார். நான் அவரை போராளி என நம்பவேண்டும் என்பதற்காய் அவர் நிறையக் கதைகளை சொல்லிக்கொண்டேயிருந்தார். இப்படியான புலம்பெயர் தமிழர்களை நான் நிறையவே கடந்துவந்திருக்கிறேன். ஆனால் இவர் வினோதமானவர். மூச்சுவிடாமல்  கதைத்துக்கொண்டேயிருந்தார். தமிழகத்தில் உள்ள தமிழீழ ஆதரவு இயக்கங்களின் அரசியல் பிரமுகர்களை தான் சந்தித்துக்கொண்டிருப்பதாகவும் கூறினார். அண்ணை உயிரோட இருக்கிறார் என்கிற விடயத்தை பழ. நெடுமாறன் ஐயா உறுதி செய்திருப்பது எவ்வளவு சந்தோசமான செய்தி என்று புளகாங்கிதம் அடைந்தார். எனக்கு எரிச்சல் மட்டும் வரவில்லை கூடவே பெருத்த சிரிப்பும் அடக்கிக்கொண்டு இருந்துவிட்டேன். கதைத்துக் கொண்டிருந்தவர் விடைபெறும் வேளையில் மட்டும் எனக்கு வாய்ப்பளித்தார். நான் மிகக் கடுமையாக ஒருவிடயத்தை அவரிடம் பகிர்ந்தேன். இந்த மாபெரும் அழிவில் பளுச்சுமந்து அங்கவீனமாய் போன இந்த தலைமுறையைப் பற்றி எண்ணுகிற அரசியல் புரிதல் கொண்ட சமூகமாக புலம்பெயர்வு சமூகத்தை காண நினைக்கிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிகிறது என்றேன். அவர் உடனேயே கோபப்பட்டு நீங்கள் இப்படித்தான் கதைப்பியள் என்று கேள்விப்பட்டனான்,எனக்கும் அது உறுதியாகிட்டுது என்றார். நான் உண்மையை நேசிக்கிறேன். யதார்த்தத்தை விரும்புகிறேன். கற்பனையை வெறுக்கிறேன் என்றேன்.  அவர் என்னிடமிருந்து மிக வேகமாக விடைபெற்றார். இதனை நான் இங்குகுறிப்பிடுவது சந்திப்பை அல்ல. நமது அரசியல் புரிதலை. நாம் எங்கு இருந்து கொண்டு எதற்கு முனைகிறோம் என்பது முக்கியமானது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பேரழிவுக்கு பின்னான இன்றைய காலத்தில் ஈழத்தமிழர்களாகிய நாம் சர்வதேசத்தை கையாளத்தொடங்கியிருக்க வேண்டும்.  மானுட வரலாற்றின் அநாகரீகமான படுகொலையை நாம் சுமந்திருக்கிறோம். சிங்கள வர்களும் , சிங்கள ஆட்சியாளர்களும் மட்டும்மல்ல  ஏன் யுத்தத்தில் நேரடி பங்குவகித்த நாடுகள் மட்டுமல்ல வேடிக்கை பார்த்த உலகத்தின் ஒவ்வொரு மனிதனும் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு பதில் சொல்லவேண்டும்.

அப்படியானதொரு அவலத்தை இந்த நூற்றாண்டு ஈழத்தமிழர்கள் மீது சுமத்தியிருக்கிறது. மண்ணின் விடுதலைக்காய் போராடிய ஈழத்தமிழர்களை இனப்படுகொலைக்கு எதிராகவும் போராடப் பணித்திருக்கிறது. உண்மையில் இந்தச் சூழலில் ஈழத்தமிழர் இனவிடுதலைப் பிரச்சனையை இனப்படுகொலைக்குள்ளால் சர்வதேசமயப்படுத்தவேண்டிய அவசியம் தான் தமிழ் அரசியலாளர்களிடம் இருக்கிறது. ஆனால் அவர்களின் நிலை தலைகீழானது. சிங்கள ஆட்சியாளர்கள் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை ஒத்துக்கொண்டாலும் தமிழ்தேசியக் கூட்டமைப்பு சார் அரசியல் வாதிகள் மறந்தும் சம்மதிக்கமாட்டார்கள் போலும். இதே பாத்திரமும் வரலாற்று பொறுப்பும் வகிக்ககூடியவர்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் என்ற அர்த்தம் அரசியல் தன்மையிலானது. நாட்டில் நிகழ்ந்த போர்ச்சூழல் காரணமாக பல்வேறு நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியவர்கள்,நடந்து முடிந்த இனப்படுகொலைக்கான நீதியைப் பெறுகிற வேலைகளை முன் எடுக்கவேண்டும். ஆனால் அங்கும் அது தலைகீழான  நிலையில் தொங்கிக்கொண்டிருக்கின்றது. மீண்டும் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் இருத்தல் பற்றிய உரையாடல்களே வெள்ளமாய் தேங்கிநிற்கின்றது. இந்த உரையாடல்கள் மட்டும்மல்ல. குறுங்குழுவாதமும்,இயக்க ஆளுகைத்தன்மை கொண்ட நிர்வாகங்களும் மீண்டும் மீண்டும் உணர்வு சார் அரசியலையே முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றன. காலில் அடிபட்டவனுக்கு முதலில் மருந்து தான் கட்டப்படவேண்டுமே தவிர அவனுக்கான சிகிச்சை செய்வதற்கு மருத்துவமனையல்ல. ஆனால் போர்க்களத்தில் பலியான ஈழத்தமிழர்களின் காயத்திற்கு மருந்துமில்லை, மருத்துவமனையுமில்லை. 

தலைவர் பிரபாகரனின் இருத்தல் பற்றிய உரையாடல்களைத தொடரும் இயக்க  ரீதியிலான கிளைகள் களத்தில் பலியான மக்கள் பற்றி என்ன எண்ணியிருக்கிறார்கள்? உண்மையில் காவுகொடுக்கப்பட்ட களத்து மக்களின் எதிர்காலம் பற்றிய பிரக்ஞ யாரிடமும் இல்லை என்று பொத்தாம்பொதுவாக கூறிவிடமுடியாது. ஆனால் பாதிப்புக்குள்ளான மக்கள் தொகையோடு ஒப்பிடும் போது பிரக்ஞ எண்ணமுள்ளவர்கள் நாலில் ஒருபகுதியினர் தான். என்னளவில் புலம்பெயர் நாடுகளில் உள்ள அரசியலுக்கும் தமிழகத்தில் உள்ள சில ஈழ ஆதரவு அமைப்புக்களின் எண்ணவோட்டத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை.எல்லோரும் கண்மூடித்தனமான கற்பனாவாத அரசியல் பண்புடையவர்கள்.பழ.நெடுமாறன் தனது பிறந்தநாளில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் எனவும், அதனை மிகவும் நம்பிக்கைக்குரிய இடத்திலிருந்து தான் அறிந்ததாகவும் கூறுகிறார். அந்தச் செவ்வியை அவரின் குரல் வழியே கேட்கிற போதில் எனக்கு வள்ளுவனின் குறள் ஒன்று கேட்டுக்கொண்டேயிருந்தது.

தன்நெஞ்சு அறிவது பொய்யற்க,பொய்த்தபின்
தன் நெஞ்சே தன்னைச்சுடும்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக் களத்திலிருந்து மீண்ட ஒருவனால் இந்தச் செவ்வியில் கூறப்படுவதை சகித்துக்கொள்ள முடியாது.ரத்தமும் சதையுமாய் யுத்தத்தை நேரில் கண்டுகொண்டே வாழ்ந்த எந்தவொருவனும் இதனைச் சொல்லமாட்டான். களத்தின் யதார்த்தமும் நிலவரமும் அறிந்திராத ஒரு மோசமான கூற்று இது. இப்போது ஈழ அரசியலுக்கு பிரபாகரன் அவசியமானவர் என்பதனைத் தாண்டி நெடுமாறன் போன்றவர்களின் அரசியலுக்கு அவர் அவசியமாகியிருக்கிறார். ஆனால் நான் அதனை ஒரு தமிழீழ மகனாக மறுக்கிறேன். பிரபாகரன் எனும் விடுதலைப் பேரொளி அந்தக் களத்தில் தன்னை விதைத்தது என்பதை நான் நம்புகிறேன். அந்தக் களத்தில் அவ்வளவு மக்களின் இரத்தத்தைக் கடந்தும் கண்ணீரைக் கடந்தும் தப்பும் வழியிருந்திருந்தாலும் மக்களின் தலைவன் சென்றிருக்க எண்ணியிருக்கார். தனக்கு கீழே ஒன்றாகத் திரண்ட மக்களை அழுகுரலில் நிற்கதியாக நிற்கவிட்டு தப்பித்து உயிரோடு இருப்பவரல்ல; தமிழீழத் தலைவர். அவர்  போர்களத்தின் ஏதோவொரு கணத்தில் தன்னையும் தன் மண்ணுக்காய் மாய்த்தார்  என்றல்லவா தமிழீழ மக்கள் நாம் பரணிபாடவேண்டும். எனக்கு நன்றாகத் தெரியும். கடவுள் போலொரு தலைவனை நாம் பெற்றோமே தவிர, நம் தலைவனுக்கு சாகாவரமில்லை.



இப்படியான பக்திமய செவ்விகளை நாம் முதலில் உதறிவிடவேண்டும். நாம் வாழ்வின் நடைமுறைச்சாத்தியங்களை கையாளுவதைப் போலவே அரசியலையும் அணுகவேண்டும். இன்றைக்கு தமிழீழ நிலப்பரப்பு முழுவதும் போர்க்காயங்களோடும், அங்கவீனங்களோடும் அல்லற்பட்டு, காணாமல் போன பிள்ளைகளை மீட்டுத்தரும்படி தாம் சந்திக்கும் எல்லோரிடமும் கையேந்திக் கதறியழும் மக்களின் துயரத்தை துடைக்க தமிழ் அரசியலாளர்கள் ஒன்றையும் செய்யாததைப் போலவே புலம்பெயர் நாடுகளில் இருக்கும் எந்தவொரு அமைப்புக்களும் அதனை முன் எடுக்கவில்லை. இரத்தம் சிந்தியவர்கள் இப்போதும் கண்ணீர் சிந்துகிறார்கள். எல்லோருக்குமாய் பட்டினி கிடந்தவர்கள் இப்போதும் பட்டினி கிடக்கிறார்கள். சுதந்திரத்தை நீங்கள் கைநீட்டி வாங்கக்கூடாதென எல்லோருக்குமாய் களமாடியவர்களை இன்றைக்கு கையேந்த வைத்தபாவம் போராட்டத்தின் பணச்சுருட்டிகளைத் தான் சேரும். 

Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்