செங்காந்தள் யாவும் சாந்தனைப் பாடும்!

வரது குரல், தெய்விகத்தன்மையிலானது; எழுச்சிமிக்கது; கண்ணீரின் அணையுடைக்கும்  வல்லமைகொண்டது; போராளிகளின் தியாகத்துக்கு  விளக்கேற்றும் உன்னதம் வாய்ந்தது; தேசவிடுதலைக்காகத் தேயாத வரம்பெற்றது. அப்படியான சகாப்தக் குரலொன்றை சந்தனப்பேழையில் மூடிவிட்டது காலம்.

சாந்தன் என்றொரு எழுச்சிப்பாடகனை தமிழீழத் தேசம் இழந்துநிற்கிறது. இன விடுதலைக்காக, தமிழீழ வீதிதோறும் நின்று பரணிபாடிய குரலாயுதமும் ஈழத்தில் மவுனித்து விட்டது. சனச்  சமுத்திரத்தில் ஒலிவாங்கியைப் பிடித்தபடி மேடையில் தோன்றிப் பாடல் இசைத்த சாந்தனின் மரணத்தினால், நம் நிலத்தில் இசைக்கமுடியாத எத்தனையோ பாடல்கள் துயரத்தின் கம்பத்தில் அரைக்கொடியில் பறக்கின்றன. இனப்படுகொலை ஊழியில் முறிந்த முள்ளிவாய்க்கால் விருட்சத்தின் கிளைதனில் ஓய்வெடுத்த ஒரு பறவை, சிறகுதிர்ந்து சரிந்தது. சாந்தன் எனும் அந்தப்பறவை குரலெழுப்பி பாடிய இந்தப் பாடல், என் காதில் கேட்டபடியே இருக்கிறது. 

‘‘இந்தமண் எங்களின் சொந்தமண் - இதன் 
எல்லைகள் மீறியார் வந்தவன்
நீர்வளம் உண்டு நிலவளம் உண்டு  
நிம்மதி ஒன்றுதான் இல்லை – எனினும் 
இந்தமண் எங்களின் சொந்த மண் - இதன் 
எல்லைகள் மீறியார் வந்தவன்’’


தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், அளப்பரிய தாக்கத்தைப் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்திய பொதுமகன்களில் பாடகர் சாந்தன் அண்ணாவும் ஒருவர். பாடகனாய் விடுதலைக்களத்தில் கம்பீரமாய் செயற்பட்ட இவரின் புதல்வர்கள் இருவர் போர்க்களத்தில் மாவீரராக ஆனவர்கள். ஒப்பனைக்குக் கலைஞன் என்றிராத மனோபாவம்கொண்ட இவரின் கலைச்செயற்பாடுகள், அமைப்பியல் ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உறுதுணையாக இருந்தமை வரலாறு. ஒப்பற்ற விடுதலைக்காகவும் விடுதலை இயக்கத்துக்காகவும் தனது குரல்வழியே பளுச்சுமந்த தேசக்கலைஞன் அவர் என்றால் மிகையில்லை.
2008-ம் ஆண்டுகளின் இறுதிமாதங்களில் கிளிநொச்சியைக் கைப்பற்றும் நோக்கோடு ராணுவம் தாக்குதலை நடத்திக்கொண்டிருந்தது. அதுமட்டுல்லாமல் ‘கிளிநொச்சியை வெகுவிரைவில் கைப்பற்றுவோம்’ என இலங்கை அரசாங்கம் அறிக்கைவிட்டிருந்தது. கிளிநொச்சி யிலிருந்து சற்றுத்தள்ளி தர்மபுரம் பகுதியில் மக்கள் இடம்பெயர்ந்து, வீதிகளின் இருமருங்கையும் உறைவிடமாக்கிக் கொண்டிருந்த காலமது.

தர்மபுரத்தில் உள்ள சிறிய பள்ளிக்கூட மைதானத்தில், சாந்தன் அணியினரின் இசைக்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய நாளில் சாந்தன் புரட்சிகர பாடல்களைப் பாடினார். பகையை முட்டிமோதும் சினமும், வெல்லும் நம்பிக்கையும் பெருகிக்காணப்பட்ட சாந்தன் அண்ணா, பாடலுக்கு நடுவில் இசையின் பின்னணியோடு இவ்வாறு பேசினார்.

“சிங்களவன் கிளிநொச்சியில சிங்கக்கொடி ஏத்துவன் எண்டு சொல்லுறான். அவன்ர நப்பாசை இது. வேணுமெண்டால் அவனொண்டு செய்யலாம். கொழும்பில இருக்கிற தன்னுடைய ராணுவச்செயலகத்தில கிளிநொச்சி எண்டு ஒரு பலகையில எழுதிப்போட்டு அதுக்கு முன்னால சிங்கக்கொடியை ஏத்தலாம். கிளிநொச்சி காத்துக்கு புலிக்கொடிதான் பறக்கும்.”

எழும்பிய மக்களின் கரவொலிக்குள் இருந்து நம்பிக்கை ஓசை சிலிர்த்தது. அவர் மீண்டும் பாடத்தொடங்கினார். ஓயாத அலைகளாகவும், ஆனையிறவு வெற்றிச்சமராகவும், வான்படைத் தாக்குதலாகவும் வரலாற்றில் நீளும் புலிகளின் அசாத்தியமான ராணுவ வெற்றிகளை அவரின் பாடல்கள்தான் இன்றைக்கும் குரல்வழியாக தாங்கிநிற்கின்றன. ஒரு போரியல் வரலாற்றை தனது பாடல்களின் மூலம் காத்துநிற்கும் பாக்கியத்தை தமிழீழ நிலம், பாடகர் சாந்தனுக்கு வழங்கியிருக்கிறது. 

2009-ம் ஆண்டின் மே மாதத்துக்குப் பின்னர் கைதாகிய சாந்தன், புலிகள் இயக்கத்தின் போராளி இல்லையென்ற போதிலும் ராணுவத்தினரின் தடுப்புமுகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டு அடைத்துவைக்கப்பட்டார். சாந்தன் எனும் கலைஞனின் அரசியல் செயற்பாட்டை எதிரிகள்    உணர்ந்து வைத்திருந்தார்கள் என்பதற்கான சாட்சியே இதுவெனக் கொள்ளவேண்டும். 

விடுதலை செய்யப்பட்டதன் பின்னர், ‘சாந்தன் இசைக்குழு’ என்ற பெயரில் திரையிசைப் பாடல்களையும், பக்திப் பாடல்களையும் பொதுநிகழ்வுகளில் இசைத்துவந்தார். தனது குரலுக்கு நாட்டின் அனைத்துச் செவிகளும் திசைதிரும்பும் என்பதை இறுதிக்காலங்களிலும் நிச்சயப்படுத்தியவரை நோயின் இருள் மறைத்துவிட்டது. நோயோடு போராடிக் கொண்டிருந்த கண்ணீரின் குரலை கண்ணீரால் பாடவேண்டியதாகிவிட்டது.

மிக மிக வழக்கமானதொரு நிகழ்வாகப் பழக்கமாகிவிட்ட சாவுக்கு தமிழீழ நிலம் கலங்காது. ஆனால், தனக்காக, தனது மாண்புக்காக, குரலால் பாசறை எழுப்பிய தம் பிள்ளையின் உடலைத் தழுவிய நிலத்தின் காற்று, ஒரு செங்காந்தள் மலரில் விதைந்திருக்கும். இனியொரு செங்காந்தள் மலர்ந்து பாடத்தொடங்கும். பாடுகிற செங்காந்தள் யாவும் சாந்தனையும் பாடும். அதுதான் தமிழீழ வணக்கம்.
நன்றி - ஜூனியர்விகடன் 
08.03.2017

Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்