வரலாறு சார்ந்து காலத்தில் பதிகிற படைப்பு - தலைவர் பிரபாகரன் பன்முக ஆளுமை

திட்டங்கள் தீட்டிக் கொண்டேயிருப்பதை விட்டு ஒழியுங்கள்,முதலில் செயலில் இறங்கிவிடுங்கள் - பிளாரன்ஸ்


தானேந்திய  தூரிகையை மானுட அறத்தின் பக்கம் மட்டுமே சாய்த்துப் பிடித்த இந்த நூற்றாண்டின் ஓவியர்களில் ஓவியர் புகழேந்தி மறுக்கப்படமுடியாதவர்.வெறுமென வண்ணங்களை விசிறிவிட்டு ஓவியத்தின் ஆன்மாவை பறித்துவிடுகிற தூரிகைகள் நிரம்பிக் கிடக்குமிந்தக் காலத்தில் சிதைக்கப்பட்ட தேசத்தின் தசைகளையும் கண்களையும் குருதிகளையும்  இருளின் பிரதிநிதியாக இருந்து ஓவியங்களாக்கிய இவரின் கலைப்பணி என்பது ஒரு அரசியல் இயக்கத்தின் ஊடகச் செயற்பாடு.

தமிழீழ விடுதலைப் போராட்டமும் அது சார்ந்த ஆதரவு  எழுச்சி அலைகளும் தமிழீழம் - தமிழ்நாடு எனும் தமிழர்களின் தேசத்தில் இரட்டைக்குழந்தைகள் போல என்றால் அது மிகையாகாது. தமிழீழர்களின் களம் தாயகத்தில் இருந்தாலும் தளமாக தமிழ்நாடு தான் என்றும் உறவு ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் அமைந்திருக்கிறது.  புகழேந்தியின் ஓவியமும் அவரின் செயற்பாடுகளும் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதை தமிழீழர்களாகிய நாம் உணர்ந்திருக்கிறோம்.

தமிழீழ அரசு நிகழ்ந்துகொண்டிருந்த சமாதான கால கட்டத்தில் புலிகளின் தலைவர்  பிரபகாரன் மீதும் போராளிகள் மீதும் கவர்ச்சிகரமான எண்ணோட்டங்களுடன் வருகை தந்த எத்தனையோ படைப்பாளிகள்,அரசியலாளர்கள், ஊடகவியலாளர்களை எல்லாம் அந்த மண் கண்டிருந்தாலும் புகழேந்தியின் வருகையும் அவரின் செயற்பாடுகளும் தமிழீழத் தேசத்தில் பல விதைகளை விதைத்தது. ஓவியப் பயிற்சிப் பட்டறைகளும் ,ஓவியக் கண்காட்சிகளும் மட்டுமல்லாது மக்களுடனான சந்திப்புக்கள்,போராளிகளுடனான கலந்துரையாடல்கள் என அவரின் எல்லா செயற்பாடுகளும் பல்வேறு எதிர்கால திட்டமிடல்களோடு வடிவமைக்கப்பட்டிருந்தது.

அவர் தமிழீழ மண்ணிற்கு வருகைதந்து பின்னர் வெளியிட்ட தமிழீழம்                 நான் கண்டதும் என்னைக் கண்டதும் என்கிற நூல்  அவரின் தமிழீழப் பயணத்தின் அனுபவப் பகிர்தலாக அமைந்தது.அது புகழேந்தி எனும் கலைத்தூதனின் அனுபவம் என்று சொல்லமுடியும்.

இனப்படுகொலைக்கு பின்பான ஆறாவது ஆண்டில் எமது அரசியல்  திக்கற்று திசை தெரியாமல் மாறி மாறி சுழன்றுகொண்டிருக்கும் இந்தச் சூழலில் ஓவியர் புகழேந்தி அவர்களால் எழுதப்பட்டு வெளிவந்திருக்கும்
லைவர் பிரபாகரன் பன்முக ஆளுமை எனும் தொகுப்பு  காலம் கருதிச் செய்த தகுந்த கருமம் என்று எண்ணுகிறேன்.

உணர்வும் ஆதரவும் என்கிற நிலைப்பாடுகளை தாண்டி அறிவு சார்ந்து வரலாறு சார்ந்து காலத்தில் பதிகிற படைப்புக்கள் மீது புகழேந்திக்கு ஒரு மரியாதையுண்டு.அப்படியான ஒரு வரலாற்று படைப்பாக இந்தத் தொகுப்பு இருக்கிறது.தமிழீழ விடுதலைப் புலிகள் வெறுமென ஆயுதபிரியர்கள்  என்று சொல்லிக் கொள்ளும் அறிவிலிகளுக்கு இந்த நூல் சொல்லுகிற பதில்கள் ஏராளமானவை.

தமிழர்களுக்கும் தமிழுக்கும் நாடு வேண்டுமென்று போராடிய தமிழீழர்களின் அரசு எப்படி நிகழ்ந்தது.போராட்டத்தில் இருந்த படையியல் கட்டுமானங்கள்,அரசியல் பிரிவுகள்,கலைப் பிரிவுகள்,மக்கள் நலன்பேணும் பிரிவுகள்  என தமிழீழ விடுதலைப் புலிகளின் உள் கட்டுமானங்களையும் சில முக்கிய தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்களுடனான சந்திப்புக்கள் குறித்தும் புகழேந்தி எழுதியிருப்பவை வெறுமென தொகுப்பு என்று சொல்ல முடியாது எழுதப்பட்டிருப்பது வரலாற்றின் தொகுப்பு.

தமிழீழ விடுதலைப் புலிகளையும் அவர்களின் அரசையும் வரலாற்றில் தேடித் தெரிந்து கொள்வதற்கு இந்தத் தொகுப்பு மட்டும் தான்முதலில் வெளியான விபரத் திரட்டகவும் முன்னோடியாகவும் இருக்க முடியும். தமிழ்த் தேசியத் தளத்தில் செயற்படும் எல்லோரும் இந்த நூலை படித்தே  இருக்கவேண்டிய ஒரு வரலாற்றுக் கடமையும் இருக்கிறது.

-அகரமுதல்வன்
07.05.2014


Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்