மூச்சின் மொழி
இனி எழுதப் போவதில்லை என்றாலும்
உனதழகின் துளி முல்லை நிலம்
மழைத்தூறல் கானலில் சிதறுமெனில்
இனியெனக்கு வாழ்வுமில்லை
புழுங்கியழும் மனசு சுடுகாடு போல
எரிந்தபடி ஒளிர்கிறது
நீயற்ற தனிமை நிழலற்று
நெடும் தூரம் வருந்தி
காமத்தின் பகையில் கண்மூடிச் சாகிறது
ஊதல் காற்று வம்பு செய்யும்
இரவின் அரும்புகளை
கழிந்த நாட்கள் வருத்துகிறது
நெஞ்சில் ஊர்ந்த எறும்பின் மாலையில்
நெளிந்தவுன் இனிப்புடல்
வானமாய் சிவந்ததில்
என் நெஞ்சம் உனக்கே உரிமை
நீயற்று வாழ்வது
நரகத்தை விட வருத்தம்.
-அகரமுதல்வன்
23.06.2014

Comments
Post a Comment