மழையுடன் பேசும் மழை
பகிர்வுத் தானியின் வலது கரையில் நனைந்தபடி
மழையின் முத்தங்களை சேகரிக்கும் எனதருகே
விரல் சூப்பித் தூங்கும் ஒரு குழந்தை
தாயின் மடியைத் தடவுகிறது
பூத்துக்கொண்டிருக்கும் அதிசய நறுமணத்தின்
குடா முழுதும் வானிலையாய்
குழந்தையின் கால்கள் அசைய
இன்னுமின்னும் சூல் கொள்கிறது வானம்
ஆடைகள் ஒட்டிய மேனியில்
நீர் வழிந்தோட குளிர்ந்த படி
வண்ணப்பூச்சுகள் கரைந்த கவலையில்
வழியால் நடந்தவர்க்கு
சில்லறைகள் யாசிப்பவனுக்கு
குடை மறந்தவர்க்கு
தொழுநோயாளிக்கு
கோபமூட்டிய
தூக்கம் பறித்த
இந்த மழையே தான்
வஞ்சகமற்ற
அதிசயத்தின் கனவுக்குள்
கைபிடித்துச் செல்கிறது
பார்வையற்ற இக் குழந்தையை
இதற்காயினும் வேண்டும் பெரும் மழை.
-அகரமுதல்வன்
08.08.2014

Comments
Post a Comment