நீ எரித்த வனம்
உனக்கொரு
கடிதம் எழுதவேண்டுமெனக் கனக்கும்
இதயத்தின் கிழக்கு
தாமரைகளை மலரச் செய்வதில்
பிடிப்பற்று இருக்கிறது
காற்றெங்கும் வாள் வீசும்
உன் பிரியத்தின்
மிஞ்சியிருக்கும் விழிகளை
உன்னிடமே திருப்பியனுப்பும்
வல்லமையின்னும் வாய்க்கவில்லை
கசியப்போகும் இருளின் நடுவில்
யாசகம் கேட்கும் மூச்சின் நாசிகளுக்கு
ஆற்றுக்கிடைக்கையில் காத்துக்கிடக்கும்
நீர்ப்பாம்பென கணங்கள் நெளிய
ஆயிரம் தலைகள் கொண்ட
ஞாபக விடம்
என்னை கொத்துகிறது
உனக்குத் தெரியுமா லோஜி
இதற்கு முன்னர்
எழுதிய கடிதங்களையெல்லாம்
எவரும் புகுந்து வரமுடியாத
பெருவனத்தில்
என்னை நீ எரித்தது போல
நானும் எரித்து விளையாடியது
இனியேனும் வனங்களில்
புகை எழும்பாதபடிக்கு
உனக்கொரு கடிதம் எழுதவேண்டும்
-அகரமுதல்வன்
28.07.2014
Comments
Post a Comment