செங்காந்தள் யாவும் சாந்தனைப் பாடும்!
அ வரது குரல், தெய்விகத்தன்மையிலானது; எழுச்சிமிக்கது; கண்ணீரின் அணையுடைக்கும் வல்லமைகொண்டது; போராளிகளின் தியாகத்துக்கு விளக்கேற்றும் உன்னதம் வாய்ந்தது; தேசவிடுதலைக்காகத் தேயாத வரம்பெற்றது. அப்படியான சகாப்தக் குரலொன்றை சந்தனப்பேழையில் மூடிவிட்டது காலம். சாந்தன் என்றொரு எழுச்சிப்பாடகனை தமிழீழத் தேசம் இழந்துநிற்கிறது. இன விடுதலைக்காக, தமிழீழ வீதிதோறும் நின்று பரணிபாடிய குரலாயுதமும் ஈழத்தில் மவுனித்து விட்டது. சனச் சமுத்திரத்தில் ஒலிவாங்கியைப் பிடித்தபடி மேடையில் தோன்றிப் பாடல் இசைத்த சாந்தனின் மரணத்தினால், நம் நிலத்தில் இசைக்கமுடியாத எத்தனையோ பாடல்கள் துயரத்தின் கம்பத்தில் அரைக்கொடியில் பறக்கின்றன. இனப்படுகொலை ஊழியில் முறிந்த முள்ளிவாய்க்கால் விருட்சத்தின் கிளைதனில் ஓய்வெடுத்த ஒரு பறவை, சிறகுதிர்ந்து சரிந்தது. சாந்தன் எனும் அந்தப்பறவை குரலெழுப்பி பாடிய இந்தப் பாடல், என் காதில் கேட்டபடியே இருக்கிறது. ‘‘இந்தமண் எங்களின் சொந்தமண் - இதன் எல்லைகள் மீறியார் வந்தவன் நீர்வளம் உண்டு நிலவளம் உண்டு நிம்மதி ஒன்றுதான் இல்லை – எனினும் இந்தமண் எங்களின் சொந...